உலக நாயகன் கமல்ஹாசன் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை பிரபல இயக்குனர் சுந்தர்.சி டைரக்ட் செய்வதாக கமல்ஹாசன் அறிவித்திருந்தார். அந்த அறிவிப்பு வெளியான ஒரு சில தினங்களிலேயே ரஜினி படத்திலிருந்து விலகுவதாக இயக்குனர் சுந்தர் சி தெரிவித்திருக்கிறார்.
இந்த அறிவிப்பு ரசிகர்களை அதிர்ச்சியிலும் ஏமாற்றுதலும் ஆழ்த்தி இருக்கிறது.
கமல்ஹாசன் தயாரிக்க ரஜினிகாந்த் நடிக்க வந்த படத்தில் இருந்து ஏன் விலகுகிறேன் என்பது குறித்து இயக்குனர் சுந்தர்.சி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது: எதிர்பாராத மற்றும் தவிர்க்க முடியாத சூழ்நிலைகளால், கனத்த இதயத்துடன் ‘தலைவர் 173’ படத்திலிருந்து விலகிக் கொள்வது என்ற கடினமான முடிவை நான் எடுத்துள்ளேன். ரஜினிகாந்த் நடிக்க, கமல்ஹாசனின் தயாரிப்பில் உருவாகவிருந்த இந்தப் படத்தில் இணைவது எனக்கு உண்மையிலேயே ஒரு கனவு, நனவாகும் வாய்ப்பாக இருந்தது.
வாழ்க்கையில் சில சமயங்களில், நமது கனவுகளிலிருந்து விலகிச் சென்றாலும், நமக்காக வகுக்கப்பட்ட பாதையைப் பின்பற்ற வேண்டிய தருணங்கள் வரும். இந்த இரண்டு ஜாம்பவான்களுடனான எனது தொடர்பு நீண்ட காலத்திற்கு முன்பே தொடங்கியது. இந்த வாய்ப்பிலிருந்து நான் விலகினாலும், தொடர்ந்து அவர்களின் நிபுணத்துவ ஆலோசனையை நான் நாடுவேன். இந்த மாபெரும் படைப்புக்காக என்னை கருத்தில் கொண்டதற்கு, இருவருக்கும் என் இதயத்தின் அடித்தளத்திலிருந்து நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்
இவ்வாறு இயக்குனர் சுந்தர் சி கூறியிருக்கிறார்.
