தமிழ். இந்தி, தெலுங்கு உள்ளிட்ட இந்திய மொழி மற்றும் ஜப்பனீஸ், ஜெர்மன் உள்ளிட்ட வெளி நாட்டு மொழிகள் என பல்வேறு மொழிகளில் 48 ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்களைப் பாடியவர் எஸ். ஜானகி. பதினாறு வயதினிலே படத்தில் இடம்பெற்ற, செந்தூரப்பூவே மற்றும் தேவர் மகனின் இஞ்சி இடுப்பழகி பாடல் உள்பட 4 முறை சிறந்த பாடகிக்கான தேசிய விருதை வென்றவர்.
கே வி மகாதேவன், எம். எஸ். விஸ்வநாதன், இளையராஜா உள்பட ஏராளமான இசையமைப் பாளர்களுடன் பணியாற்றி மிகச்சிறந்த பாடல்களைத் தன் குரலால் கொடுத்தார்.
சமீபகாலமாக மைசூரில் வீட்டில் ஓய்வில் இருந்த எஸ் ஜானகி வயது மூப்பு காரணமாக 11/07/2026 அன்று காலமானார். அவருக்கு வயது 88. அவரது மறைவு திரையுலகினரை, ரசிகர்களை அதிர்ச்சியிலும், சோகத்திலும் ஆழ்த்தி உள்ளது.
எஸ். ஜானகி மறைவுக்கு திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,கூறியது :
இசைக்குயில் எஸ். ஜானகி மறைவெய்திய செய்தியறிந்து மிகவும் வருந்தினேன். மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன் முதல் அனிருத் வரை ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடிய கானகோகிலம் ஜானகியின் இசைப்பயணம் மிக நீண்டது.
அவரது மறைவு என்பது, வானொலி தொடங்கி ஸ்பாட்டிஃபை வரையில் அவரது அமுதகானங்களைத் தங்கள் இல்லங்களில் ஒலிக்கவிட்டு ரசிக்கும் தமிழ்நாட்டு மக்கள் உள்ளிட்ட தென்னிந்திய மக்களுக்கும், இந்தியத் திரைத்துறைக்கும் பேரிழப்பாகும். இனிமையும் இளமையும் மாறாத தனது குரலால் காலத்தால் அழியாத பாடல்களைப் பாடிய அவர், என்றும் நம் இல்லங்களிலும் நெஞ்சங்களிலும் ஒலித்துக்கொண்டே இருப்பார். அவரது மறைவால் வாடும் திரைத்துறையைச் சேர்ந்த கலைஞர்கள், இரசிகர்கள், அவரது குடும்பத்தினர் உள்ளிட்ட அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு மு க ஸ்டாலின் கூறி உள்ளார்.
மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலகநாயகன் கமல்ஹாசன் உள்ளிட்ட நடிகர்கள் மற்றும் நடிகைகள் உள்ளிட்ட ஒட்டு மொத்த திரையுலகமும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
