படம் : தண்டுபாளையம்
நடிப்பு: வனிதா, சோனியா அகர்வால், டைகர் வெங்கட், பிர்லா போஸ், சுமா ரங்கநாத், சூப்பர் குட் சுப்பிரமணி, பூஜா காந்தி, முமைத்தான், ராயல் பிரபாகர்
தயாரிப்பு: டைகர் வெங்கட்
இசை: ஜித்தன் கே ரோஷன்
ஒளிப்பதிவு: பி இளங்கோவன்
இயக்கம்: கேடி நாயக், டைகர் வெங்கட்
பி ஆர் ஓ: வெங்கட்
பெங்களூர் மற்றும் சுற்றுப்பகுதியில் நடக்கும் கொலை கொள்ளை கற்பழிப்பு சம்பவத்தை தண்டுபாளையம் பகுதியைச் சேர்ந்த ஒரு கூட்டம் நடத்துகிறது. இதனால் மக்கள் பீதிக்குள்ளாகின்றனர். ஒரு கட்டத்தில் அந்த கூட்டத்தை போலீஸ் அதிகாரி கைது செய்து கோர்ட்டில் நிறுத்தி தூக்கு தண்டனை பெற்று தருகிறார். மக்களை பயமுறுத்திய கூட்டம் ஒழிந்தது என்று போலீசார் எண்ணும் நிலையில் அதேபோல் இன்னொரு கூட்டம் புறப்பட்டு அட்டூழியம் செய்கிறது. அந்த கூட்டத்தை பிடிக்க புதிய போலீஸ் அதிகாரி புறப்படுகிறார் அவரால் அது முடிந்ததா அத்துடன் இந்த கூட்டத்தின் ஆட்டம் முடிந்ததா என்பதற்கு கிளைமாக்ஸ் பதில் அளிக்கிறது.
கர்நாடக பகுதியில் நடந்த உண்மைச் சம்பவங்களை மையமாக வைத்து இக்கதை உருவாகி இருக்கிறது. ஏற்கனவே கன்னடத்தில் படம் வெளியாகி வெற்றி பெற்றது நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழில் திரைக்கு வந்திருக்கிறது. கூடுதல் பிளஸ் ஆக சோனியா அகர்வால், வனிதா ஆகியோர் இப்படத்தில் இணைந்திருக்கின்றனர். இவர்கள் நடித்த காட்சிகளை புதிதாக படமாக்கி தண்டுபாளையம் பட கதையோடு இணைத்து முடிஞ்சு போட்டுள்ளனர்.
சோனியா அகர்வாலும் வனிதாவும் பெண் ரவுடிகள் கெட்டப்பில் வந்து முறைப்பு காட்டுகின்றனர். போலீசாக வரும் ராயல் பிரபாகரை வனிதா வெட்டி சாய்ப்பது திக் திக். அதன் பிறகு சுமா ரங்கநாத், பூஜா காந்தி ஆகியோரின் ஆட்டம் தொடங்கி விடுகிறது .
கூட்டத்தோடு வீட்டுக்குள் நுழையும் சுமா, பூஜா இருவரும் அங்கு இருக்கும் நகைகளையும் பொருட்களையும் கொள்ளை அடிப்பது அதேசமயம் உடன்வரும் ஆட்கள் அங்கிருக்கும் பெண்ணை கற்பழித்து கொலை செய்வது என்று சகட்டுமேனிக்கு ரத்தக்களரி காட்சிகள் அரங்கேறுகின்றன.
சுமா ரங்கநாத் பூஜா காந்தி இருவரும் தம் அடித்தபடி ரவுடித்தனத்தை கட்டவிழ்த்து விடுவது பதபதைக்க வைக்கிறது. இவர்களுடன் வரும் மற்ற நடிகர்களும் அசல் ரவுடிகளாகவே மாறி இருக்கின்றனர்.
போலீஸ் அதிகாரியாக வரும் டைகர் வெங்கட் விறுவிறுப்பா கவும் பரபரப்பாகவும் நடித்திருக்கிறார். சுமா ரங்கநாத்தின் ரவுடி கூட்டத்தை துரத்தி சென்று அவர்களை என்கவுன்ட்டரில் போட்டுத் தள்ளுவது விறுவிறுப்பு.
சீனுக்கு சீன் ரவுடியிசம் பலாத்காரம், கொலை, கொ,ள்ளை என்று காட்சிகள் ராவாக நகர்கின்றன. அதேசமயம் பலாத்கார காட்சிகளை இயக்குனர் படமாக்கி இருக்கும் விதத்திற்கு சென்சார் எப்படி அனுமதி கொடுத்தார்கள் என்று கேட்க தோன்றுகிறது. அந்த அளவுக்கு ஆபாசம் கரை புரள்கிறது.
முமைத்துக்கான் ஒரு குத்தாட்டத்துக்கு கவர்ச்சி ஆட்டம் போட்டிருக்கிறார்.
டைகர் வெங்கட் இப்படத்தை தயாரிக்க அவருடன் இணைந்து கே டி நாயக் படத்தை இயக்கியிருக்கிறார். கொலை கொள்ளையுமாக காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தாலும் அது மக்களுக்கு விடுக்கப்படும் ஒரு எச்சரிக்கையாகவே எடுத்துக் கொள்ள தோன்றுகிறது. அறிமுகம் இல்லாதவர்களிடம் பொறுப்பை ஒப்படைத்தால் அது தங்கள் உயிருக்கு ஆபத்தாக நேரும் என்பதை மறைமுகமாக கதை உணர்த்துகிறது.
ஜித்தன் கே ரோஷன் இசையமைத்திருக்கிறார். பி இளங்கோவன் ஒளிப்பதிவில் அனல் வீசுகிறது .
தண்டுபாளையம் : எச்சரிக்கை மணி

