மீரா விஜய் ஆண்டனி தயாரிக்க, லியோ ஜான் பால் இயக்கும் `மார்கன்’ படத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ளார் . அட்டக்கத்தி, பீட்சா, சூது கவ்வும், இன்று நேற்று நாளை , தெகிடி, முண்டாசுப்பட்டி, காதலும் கடந்து போகும், ஏ1, மாயவன் போன்ற திரைப்படங்களை எடிட் செய்தவர் படத்தொகுப்பாளர் லியோ ஜான் பால் இப்படத்தை இயக்குவது குறிப்பிடத்தக்கது.
மார்கன் படத்தில் விஜய் ஆண்டனி, உயர் காவல் அதிகாரியாக நடித்திருக்கிறார். ககன மார்கன் என்றால், சித்தர்களின் அகராதியில் ‘காற்றின் வழி பயணிப்பவன்’ என்று பொருள்
விஜய் ஆண்டனி இந்தப் படத்திற்கு இசை அமைத்துள்ளார். வில்லனாக அஜய் தீஷன் இப்படத்தின் மூலம் அறிமுகமாகிறார்.
ஃபேண்டசி கலந்த கிரைம் திரைப்படமாக உருவாகியுள்ளது மார்கன்.படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. விறுவிறுப்பான இன்வஸ்டிகேஷன்
காட்சிகள் டிரெய்லரில் இடம் பெற்றுள்ளது. இப்படம் வரும் ஜூன் 27 ஆம் தேதி வெளியாகிறது.

மார்கன் படவிழாவில் விஜய் ஆண்டனி கலந்துகொண்டு பேசினார். அவர் கூறியதாவது: நான் தொடர்ச்சியாக படங்கள் தயாரிப்பதை பார்த்து என்னிடம் நிறைய பணம் இருப்பதாக எல்லோரும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அதெல்லாம் உண்மை கிடையாது. எல்லாமே கடன் தான். அதற்கு மாதாமாதம் வட்டியும் கட்டி வருகிறேன்.
டிஷ்யூம் படத்தின் மூலம் இயக்குனர் சசி சார் என்னை இசை அமைப்பாளராக அறிமுகம் செய்தார். அதே இயக்குனர் சசி 15 ஆண்டுகள் கழித்து பிச்சைக்காரன் படத்தின் மூலம் என்னை ஹீரோவாக மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்தார். இப்போது நாங்கள் மீண்டும் இணைகிறோம். நான் எத்தனை படங்களில் நடித்திருந்தாலும் எனக்கு பிச்சைக்காரன் திரைப்படம் தான் பெரிய திருப்பத்தை கொடுத்தது.

இதுவரை நான் நடித்த படங்களை மட்டுமே தயாரித்திருந்தேன். இனிவரும் வருடங்களில் என்னுடைய பொருளாதார நிலைமையை பார்த்து மற்ற நடிகர்களின் படங்களையும் தயாரிப்பேன் என்று நினைக்கிறேன். அதுபோல இப்பொழுது என்னுடைய படங்களுக்கு இசையமைப்பது நான் தான். இனி மற்ற மொழி படங்களுக்கும் நான் இசையமைக்க உள்ளேன்.
இவ்வாறு விஜய் ஆண்டனி கூறினார்.
