படம்: படை தலைவன்
நடிப்பு: சண்முக பாண்டியன் விஜயகாந்த், கஸ்தூரி ராஜா, யாமினி சந்தர், முனிஷ் காந்த், கருடன் ராம், ரிஷி, ஏ வெங்கடேசன், யோகி சேது, ஸ்ரீஜித் ரவி, அருள்தாஸ், லோகு என் பி கே எஸ்
தயாரிப்பு: ஜெகநாதன், பரமசிவம்
இசை: இளையராஜா
ஒளிப்பதிவு: எஸ் ஆர் சதீஷ்குமார்
இயக்கம்: யு.அன்பு.
பிஆர்ஓ: சதீஷ் (AIM) சிவா
பொள்ளாச்சி சேத்துமடை கிராம பகுதியில் தந்தை கஸ்தூரி ராஜாவுடன் வசிக்கிறார் சண்முக பாண்டியன். அவர்கள் ஒரு யானையும் வளர்க்கின்றனர். கடனில் தவிக்கும் கஸ்தூரிராஜாவின் துன்பத்தை போக்க யானையை விழாக்களுக்கு அழைத்து செல்கிறார் சண்முக பாண்டி. அங்கு சிலர் சதி செய்து யாரனைக்கு மதம் பிடிக்க வைக்கின்றனர். இதையடுத்து யானையை காட்டிலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்கின்றனர். யானையை மீட்க தந்தையும் மகனும் கோர்ட் படிகளில் ஏறுகின்றனர். திடீரென்று யானை காணாமல் போய்விட்டதாக காட்டிலாகா அதிகாரி கூறுகிறார். அதை ஏற்க மறுக்கும் சண்முக பாண்டியன் யானையை தேடி கண்டுபிடித்து அழைத்து வர புறப்படுகிறார். அதேசமயம் சண்முக பாண்டியனை கொலை செய்ய ஒரு கூட்டம் சுற்றி அலைகிறது. அதற்கு காரணம் என்ன? யானையை சண்முக பாண்டியனால் கண்டுபிடிக்க முடிந்ததா என்பதற்கு கிளைமாக்ஸ் பதில் அளிக்கிறது
புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் இப்படத்தில் புலிக்கு பிறந்தது பூனை ஆகாது என்பது போல் விஜயகாந்தின் மகன் என்பதை நிரூபிக்கும் வகையில் ஆக்சன் காட்சிகளில் அந்தர் செய்திருக்கிறார். இளைய புரட்சிக் கலைஞர் என்று ரசிகர்கள் அழைக்கும் வகையில் தன்னை நிலை நிறுத்தி இருக்கிறார்.
படத்தின் முதல் பாகம் வரை சண்டை போடவே தெரியாது என்பது போல் அப்பாவியாக முகத்தை வைத்துக்கொண்டு நடித்திருக்கும் சண்முக பாண்டியன் தன் யானைக்கு ஒரு ஆபத்து என்றவுடன் பொங்கி எழுந்து எதிரிகளை அதிரடியாக தாக்கி தூக்கி வீசுவதெல்லாம் எதிர்பார்க்காத ஆக்சன் காட்சிகள். தந்தை விஜயகாந்த் போலவே தாவி பறந்து ஒற்றைக் காலில் தாக்கி முத்திரை பதிப்பது அரங்கில் அப்ளாஸ் பெறுகிறது.
ஒடிஸா காட்டுப்பகுதிக்கு தனது யானையை கொண்டு சென்று விட்டார்கள் என்பதை அறிந்து நண்பர்களுடன் புறப்படும் சண்முக பாண்டியன் அங்கு ஒரு ஆக்சன் அவதாரம் எடுக்கப் போகிறார் என்பதை யூகிக்க முடிந்தாலும் அது எப்படிப்பட்ட ஆக்சன் காட்சியாக இருக்கும் என்பதை கற்பனை செய்ய முடியவில்லை கற்பனைக்கு எட்டாத வகையில் சண்டைக் காட்சிகளில் தூள் கிளப்பி ஆக்சன் ஹீரோக்களுக்கு டஃப் கொடுத்திருக்கிறார்.
விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் நடித்திருக்கிறார் என்பது படத்தின் ஒரு பிளஸ் பாயிண்ட் அத்துடன் கூடுதல் பிளஸ் ஆக கேப்டன் விஜயகாந்தை புரபசர் என்ற கதாபாத்திரத்தில் ஏ ஐ கிராபிக்ஸ் மூலம் ஒரு காட்சியில் காட்டி அவர் வசனம் பேசுவது போலுவும், நடந்து வருவது போலவும் படமாக்கி இருப்பது நிஜ கேப்டனையே நேரில் பார்த்தது போல் ஒரு இன்ப அதிர்ச்சி அரங்கம் முழுவதும் படர்கிறது.
சண்முக பாண்டியனுக்கு படத்தில் ஜோடி கிடையாது. அவருக்கு ஒரே ஜோடியாக இருப்பது யானை மட்டும்தான். இளம் ஹீரோ என்றாலும் ஜோடி இல்லாமல் நடிக்க ஒப்புக்கொண்டிருப்பது சண்முக பாண்டியன் கதை தேர்வுக்கு எவ்வளவு முக்கியத்துவம் தருகிறார் என்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது.
சண்முக பாண்டியன் தந்தையாக கஸ்தூரிராஜா இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி ஏழை என்றாலும் கவுரவத்தை விட்டுக் கொடுக்காத நபராக வாழ்ந்து காட்டி இருக்கிறார்.
கருடா ராம் வில்லனாக நடித்திருப்பது அந்த கதாபாத்திரத்தை வலுவாக்கியிருக்கிறது. மாடு பலி, யானை பலி என்ற கொடூரமான சாமியாராக காட்டுத் தனமான நடிப்பை கொட்டியிருக்கிறார்.
இவர்களுடன் யாமினி சந்தர், முனிஷ் காந்த், ரிஷி, ஏ.வெங்கடேசன், யோகி சேது, ஸ்ரீஜித் ரவி, அருள்தாஸ், லோகு என் பி கே எஸ் நடித்திருக்கிறார்கள்.
இசைஞானி இளையராஜா இசையில் பாடல்கள் தென்றலாக தாலாட்டுகிறது.

ஒளிப்பதிவாளர் எஸ். ஆர். சதீஷ்குமார் கேமரா காட்சிகளோடு ரசிகர்களை காட்டுப்பகுதிக்குள் பயணம் அழைத்துச் செல்கிறது.
இயக்குனர் யு.அன்பு விஜயகாந்த் மகன் கிடைத்துவிட்டார் என்பதற்காக தேவையில்லாத காட்சிகளை திணிக்காமல் கதைக்கு என்ன தேவையோ அதை மட்டுமே கச்சிதமாக எடுத்திருப்பது பாராட்டுக்குரியது. அதனால்தான் இந்த படம் எல்லோரையும் பேச வைத்திருக்கிறது.
படை தலைவன் – ஒன் மேன் ஆர்மி.

