சென்னை: பிரபல பட தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி கார் விபத்தில் மரணம் அடைந்தார்.
சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் மூலம் பல்வேறு வெற்றி படங்களை தயாரித்தவர் ஆர்.பி.சவுத்ரி.
விஜய் நடித்த லவ் டுடே, பூவே உனக்காக, துள்ளாத மனமும் துள்ளும், திருப்பாச்சி, ஜில்லா மேலும் வெற்றி படங்களான
புது வசந்தம், சேரன் பாண்டியன், நாட்டாமை, செங்கோட்டை, மிஸ்டர் ரோமியோ, சூர்யவம்சம், சொல்லாமலே, பூமகள் ஊர்வலம், நீ வருவாய் என, ஆனந்தம், ஈ உள்ளிட்ட ஏராளமான படங்களை தயாரித்ததுடன் தெலுங்கிலும் இவர் பல்வேறு படங்களை தயாரித்திருக்கிறார்.
கடைசியாக இந்த நிறுவனத்தின் தயாரிப்பாக ‘மாரீசன்’ படம் வெளியானது. இதில் வடிவேலு மற்றும் ஃபஹத் பாசில் ஆகியோர் பிரதான கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
ஆர்பி சவுத்ரி சில தினங்களுக்கு முன் தனது உறவினர் இல்ல திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ராஜஸ்தான் சென்று இருந்தார். இந்நிலையில் அவர் நேற்று (மே 5) ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் பகுதியில் காரில் சென்று கொண்டு இருந்தபோது திடீரென்று கார் நிலை தடுமாறி சென்டர் மீடியினில் பயங்கரமாக மோதியது இதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. இந்த விபத்தில் ஆர் பி. சவுத்ரி படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார். அவரை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ஆர்.பி.சவுத்ரி மரணம் அடைந்தார்.
ஆர்.பி.சவுத்ரிக்கு மனைவி மற்றும் மகன்கள் ஜித்தன் ரமேஷ் மற்றும் ஜீவா உள்ளனர். மகன்கள் இருவரும் திரைப்படங்களில் நடித்து வருகின்றனர்.
கடந்த 1980-களில் ஆர் பி சவுத்ரி திரைப்பட தயாரிப்பு பணியை தொடங்கினார். சுமார் 40 வருடங்களுக்கு மேலாக திரைத்துறையில் அனுபவம் கொண்டவர். இதில் தமிழ் சினிமாவில் தற்போதுமுன்னணி இயக்குனர்களாக உள்ள பலருக்கு முதல் படம் இயக்கும் வாய்ப்பு தந்தவர் ஆவார்.
தயாரிப்பாளர் சவுத்ரி விபத்தில் மரணம் அடைந்த தகவல் கேட்டு திரை உலகினர் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். ரஜினிகாந்த், சரத்குமார்,இயக்குனர்கள் விக்ரமன் கே எஸ் ரவிக்குமார், பேரரசு உள்ளிட்ட பல்வேறு நடிகர் நடிகைகள் இயக்குனர்கள் தொழில்நுட்ப கலைஞர்கள் ஆர் பி சவுத்ரி மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
