மாபெரும் வெற்றி படங்களை தயாரித்த ஏவிஎம் நிறுவனத்தின் பட அதிபர் ஏவிஎம் சரவணன் இன்று (டிச.4) சென்னையில் காலமானார். அவருக்கு வயது 86. வயது மூப்பு காரணமாக அவர் காலமானார்.
தலைவர் ஏவிஎம் சரவணன் மறைவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு க.ஸ்டாலின், மதிமுக வைகோ நேரடி அஞ்சலி செலுத்தினார்கள். மேலும் நடிகர்கள் சிவக்குமார், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சூர்யா, விஷால் உள்ளிட்ட பல்வேறு நடிகர்கள் அவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.


பிறகு ரஜினிகாந்த் பத்திரிகையாளர்களிடம் கூறும் போது,”தயாரிப்பாளர் சரவணன் மிகப் பெரிய மனிதர். ஒரு ஜென்டில்மேன். சினிமாவை உயிராக நேசித்தவர். என் கஷ்ட காலங்களில் எனக்குத் துணையாக இருந்தவர். உடையிலும் உள்ளத்திலும் வெண்மையானவர். என் மீது மிகுந்த அன்பு கொண்டவர். என் நலன்விரும்பி.
நான் ஏவிஎம் தயாரிப்பில் 9 திரைப்படங்களில் நடித்துள்ளேன். அனைத்தும் மிகப்பெரிய் ஹிட். அதில், சிவாஜி பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டது. இன்னொரு திரைப்படத்தை எடுக்கத் திட்டமிட்டோம். ஆனால், அதற்குள் இப்படியாகிவிட்டது. அவரது மறைவு என் மனதைப் பாதிக்கிறது. அவரின் ஆன்மா சாந்தியடையட்டும்” என தெரிவித்தார்.
