படம்: மாஸ்க்
நடிப்பு: கவின், ஆண்ட்ரியா, ருஹாணி ஷர்மா, சார்லி,
ரமேஷ் திலக்,
கல்லூரி வினோத்,
அர்ச்சனா சந்தோக்,
ரெடின் கிங்ஸ்லீ,
பவன், ஆடுகளம் நரேன்,
சுப்ரமணியம் சிவா,
ரோகித் டெனிஸ்,
வெங்கட் பேட்டரி,
மகாலட்சுமி
தயாரிப்பு: ஆண்ட்ரியா ஜெரமையா & எஸ் பி. சொக்கலிங்கம்
இசை: ஜிவி பிரகாஷ்
ஒளிப்பதிவு: ஆர்.டி. ராஜசேகர்
ஸ்கிரிப்ட் வழிகாட்டி: வெற்றி மாறன்
இயக்கம்: விகர்ணன் அசோக்
பிஆர்ஓ: ரியாஸ் கே அஹ்மத், பாரஸ் ரியாஸ்
கதை: வேலு (கவின்) பெரும்புள்ளிகளின் பலகீனத்தை பயன்படுத்தி அவர்களை மிரட்டி பணம் பறிக்கிறார். இதற்காக தன்னுடன் இன்டர்நெட் ஹாக்கர் உள்ளிட்ட ஒரு டீமையே வைத்திருக்கிறார். அரசியல்வாதி ஒருவர் தேர்தலுக்காக அனுப்பும் 400 கோடிக்கு மேற்பட்ட பணத்தை ஒரு கூட்டம் எம் ஆர் ராதா மாஸ்க் அணிந்து கொள்ளையடிக்கிறது. அந்த பணத்தை மீட்டுக் கொடுக்கும் பொறுப்பை லேடி தாதா (ஆண்ட்ரியா) வேலுவிடம் தருகிறார். வேலுவால் அந்த பணத்தை மீட்க முடிந்ததா? இல்லையா? என்பதுதான் கிளைமாக்ஸ் .
முக்கிய புள்ளிகள் செய்யும் லீலைகளை வீடியோ எடுத்து அவர்களை கார்னர் செய்து பணத்தைக் கறக்கும் ஒரு மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் கவின். அதிலும் அவர் ஒரு எத்திக் அதாவது நெறிமுறை கடைப்பிடிக்கிறார்.
என்னதான் மிரட்டி பணம் பறித்தாலும் பணம் கைக்கு வந்த பிறகு அவர்களது வீடியோக்களை கொடுத்துவிட்டு அதோடு பிரச்சனையை முடித்துக் கொள்வது தான் கவினின் அந்த நெறிமுறை.
400 கோடிக்கும் அதிகமான பணம் கொள்ளை போகும்போது அந்த பணத்தை மீட்டு தர வேண்டும் என்று லேடி தாதா ஆண்ட்ரியா கவினிடம் பொறுப்பை ஒப்படைத்தாலும் அந்த பணத்தை கவின் எப்படி மீட்க போகிறார் என்ற கேள்வி மலைபோல் இருந்தாலும் அதற்கான முடிச்சுகள் ஒவ்வொன்றாக அவிழ்க்கப்படும்போது கதையின் போக்கே திசை திரும்புகிறது.
மிடில் கிளாஸ் பயப்படுவான் ஆனால் துணிந்து விட்டால் எதை செய்யவும் தயங்க மாட்டான் என்ற வசனம் படத்தில் பிரதானமாக இடம் பெற்றிருக்கிறது என்பதைவிட அதுதான் படத்தின் கரு என்று கூட கூறலாம்.
கவின் கதாபாத்திரம் மேம்போக்காக பார்த்தால் விளையாட்டுத்தனமான கதாபாத்திரமாக தெரிந்தாலும் அது இராவணனின் மறு உருவ கதாபாத்திரம் என்பதை மட்டும் உணர முடிகிறது. கிளைமாக்சில் வரும் “அரக்கன் என்பார்கள், அசுரன் என்பார்கள்” என்ற பாடல் அப்போது வரும் ஒரு ஆட்டோவில் ராவணன் என்று எழுதி இருக்கும் வாசகமும் இதுவரை அசுரன் என்று சித்தரிக்கப்பட்டிருந்த ராவணனின் இமேஜை பாசிட்டிவ் ரோலாக ஒரு படி உயர்த்துவதுபோல் சித்தரிக்கப்பட்டிருப்பது வித்தியாசம். இந்த கான்செப்ட் நிச்சயமாக வெற்றிமாறனின் கைவண்ணம் என்பதை மறுப்பதற்கு இல்லை.
கதாநாயகி ருஹானி சர்மா வழக்கமான டூயட் பாடும் கதாநாயகியாக இல்லாமல் சர்ச்சைக்குரிய கதாபாத்திரமாக சித்தரிக்கப்பட்டது ஏனோ?
ஆண்ட்ரியா வழக்கமாக ஹீரோவுக்கு சப்போட்டிங் ரோலில் நடிப்பார். ஆனால் இந்த படத்தில் லேடி தாதாவாக மாறுபட்ட நடிப்பை வழங்கி மிரட்சி ஏற்படுத்துகிறார். அத்துடன் தயாரிப்பாளர் என்ற ஒரு புதிய பொறுப்பையும் இந்த படத்தில் ஏற்றிருக்கிறார்.
ஜிவி பிரகாஷ் இசை அமைத்திருக்கிறார்.
ஆர் டி ராஜசேகர் ஒளிப்பதிவு செய்ய ஒப்புக்கொள்ளும்போதே படத்தில் ஏதோ விஷயம் இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடிந்தது.
அறிமுக இயக்குனர் விகர்ணன் அசோக் என்ற பெயரே வித்தியாசமாக இருப்பதுபோல் கதையின் கான்செப்ட்டையும் வித்தியாசமாக அமைத்திருக்கிறார்.
மாஸ்க் – நடிகவேல் எம் ஆர் ராதாவின் இமேஜை அவரது முகமூடி மூலம் மாற்றியிருக்கிறது.
