Rikபடம் : மாமன்னன்
நடிப்பு: உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, கீர்த்தி சுரேஷ், பஹத் பாசில், லால், விஜயகுமார், ரவீணா ரவி, அழகம் பெருமாள், கீதா கைலாஷ்
தயாரிப்பு: ரெட் ஜெயன்ட் மூவிஸ்
இசை: ஏ ஆர் ரஹ்மான்
ஒளிப்பதிவு: தேனி ஈஸ்வர்
இயக்கம்:: மாரி செல்வராஜ்
பி ஆர் ஒ : சதீஷ், சதீஷ்குமார், சிவா (AIM)
காசிபுரம் ஒரு ரிசர்வ் தொகுதி . அங்கு மாமன்னன் (வடிவேலு) எம் எல் ஏ வாக இருக்கிறார். அவரது மகன் அதிவீரா (உதயநிதி ஸ்டாலின் ) . மாடி வீட்டில் இருந் தாலும் பன்றி பண்ணை வைத்து வளர்க்கிறார். அத்துடன் ஊர் இளைஞர்களுக்கு தற்காப்பு பயிற்சி அளிக்கிறார். அவர் படிக்கும் கல்லூரியில் ஒரே வகுப்பில் படிக்கிறார் லீலா (கீர்த்தி சுரேஷ்). இலவசமாக பயிற்சி வகுப்பும் நடத்துகிறார். அதை பொறுக்க முடியாமல் பஹத் பாசிலின் அண்ணன் அடியாட் களை வைத்து.அடித்து நொறுக்கு கிறார். கோபம் அடைந்த அதிவவீரா பஹத்தின் அண்ணன் நடத்தும் பயிற்சி கல்லூரியை சுக்குநூறாக்குகிறார் . இதை யறிந்து மாமன்னனையும் அதிவீராவையும் பஹத் தன் வீட்டுக்கு அழைத்து பேசுகிறார். அப்போது தன் தந்தையை பஹத் அவமதிப்பதைக் கண்டு கோபம் அடையும் அதிவீர பஹத்தையும் அடியாட்களையும் அடித்து சாய்க்கிறார். கோபம் அடைந்த பஹத் அடியாட்களை ஏவி மாமன்னன் குடும்பத்தை அழிக்க முடிவு செய்கிறார். இதையறிந்த கட்சி மேலிடம் பஹத்தை அழைத்து எச்சரிக்கிறது. கோபம் அடையும் பஹத் எதிர்க்கட்சியில் சேர்கிறார். அதன் பிறகு இவர்களுக்குள் அரசியல் ஆட்டம் ஆரம்பிக்கிறது. தேர்தலில் நிற்கும் மாமன்னனை தோற்கடிக்க ஜாதி மோதல் உருவாக்குகிறார். அவரது சூழ்ச்சி களை அதிவீரா முறியடிக்கிறார். இறுதியில் மாமன்னனால் வெல்ல முடிந்ததா என்பதற்கு உணர்ச்சி பெருக்குடன் பதில் சொல்கிறது கிளைமாக்ஸ்.
உதயநிதி ஸ்டாலின் ஒரு குறிக்கோளுடன் நடித்திருக்கும் படம் மாமன்னன். முழுக்க சமூக நீதியை பேசும் கதை. இவ்வளவு துணிச்சலாக, இவ்வளவு ஈடுபாட்டுடன் தனது நடிப்பை உதயநிதி வழங்கியிருப்பது அவரது அரசியல் பார்வையின் தெளிவை காட்டுகிறது.
“அடிக்க முடியாதுன்னு நினைச்சி அடிவாங்கிட்டே இருந்தா அது கோழைத்தனம்” என்று அழுதுக் கொண்டிருக்கும் இளைஞனை பார்த்து. உதயநிதி அட்வைஸ் செய்வது கோழைக்கும் வீரத்தை வரவழைக்கும்.
அதேபோல் “பன்றிக்கெல்லாம் இறக்கை முளைச்சிட்டா எல்லா பிரச்னையும் தீர்ந்திடுமில்ல” என்று கீர்த்தியிடம் உதயநிதி தனது ஏக்கத்தை சொல்லும்போது அதில் ஆயிரம் அர்த்தங்கள் புதைந்திருப்பதை உணர முடிகிறது.
இதுவரை இல்லாத அளவுக்கு சண்டைக்காட்சியில் வேகம் காட்டியிருக்கும் உதயநிதி அசர வைக்கிறார். அதேபோல் நடிப்பிலும் கொடிகட்டி பறக்கிறார். தன் தந்தை வடிவேலுவை முதலமைச்சர் லால் அழைத்து பேசும்போது நிற்க வைத்து பேசுகிறாரோ என்று சந்தேகம் அடைந்து பாதுகாப்பு படையினரை தள்ளிவிட்டு கதவை திறந்து கொண்டு சென்று பார்க்கும்போது கண்ணில் அனல் தெறிக்கிறது.
அதேபோல் தனியாக வீட்டில் இருக்கும் தன் அம்மாவை கொல்ல வரும் பஹத்தின் அடியாட்களை இரும்பு ராடால் அடித்து துவம்சம் செய்யும்போது விசில் பறக்க வைக்கிறார் உதயநிதி.
மாமன்னாக வரும் வடிவேலு குணசித்திர வேடத்தில் ஒரு பெரிய எல்லையை தொட்டிருக்கிறார் அநியாயத்தை கண்டு உதயநிதி ஆவேசப்படும்போதெல்லாம் அவரை சமாதானம் செய்யும் வடிவேலு ஒரு கட்டத்தில் அரிவாளும் துப்பாக்கியுமாக வரும்போது தியேட்டரை அலற விடுகிறார்.
கீர்த்தி சுரேஷ் தனக்கான வேடத்தை கச்சிதமாக செய்திருக் கிறார்.
வில்லத்தனத்தில் நம்பர் ஒன் இடத்தை தட்டிச் சென்றிருக்கிறார் பஹத் பாசில். பந்தயத்தில் தோற்ற தன் நாயை அடித்துக் கொல்வதும் அதேபோல் ஜாதி சங்க தலைவரை கொடூரமாக கொல்வதுமாக ஒரு நிமிடம் கதிகலங்க வைத்து விடுகிறார். முதல்வராக லால் நல்ல தேர்வு.
ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரித்திருக்கிறது.
மாரி செல்வராஜ் ஒரு தலைமுறை யின் அடிமைத் தனத்தை உடைத் தெறிய வாளை ஆவேசத்துடன் சுழற்றி களமாடியிருக்கிறார். அந்த களத்துக்கு சரியான போர் பரணி பாடியிருக்கிறார் ஏ. ஆர்.ரஹ்மான்.
தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு கவனத்தை காட்சியிலிருந்து சிதறவிடாமல் கண்களுக்கு கடிவாளம் போட்டிருக்கிறது.
நீண்ட காட்சிகள் என்றாலும் அதை மின்னலாய் பறக்கும் வகையில் எடிட்டிங்கில் கைவண்ணம் காட்டி யிருக்கிறார் செல்வா ஆர். கே.
மாமன்னன் – சமூக நீதி காவலன்.

