தமிழ்நாடு சட்டமன்ற 2021ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று தமிழ்நாடு முதல் அமைச்சராக மு.க.ஸ்டா;லின் பதவி ஏற்றுக்கொண்டார். அவரது தலைமையிலான திமுக அரசு 100 நாட்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன் தமிழக பட்ஜெட் மற்றும் முதன்முறை வேளாண் துறைக்கான பட்ஜெட்டை ஸ்டாலின் அரசு தாக்கல் செய்து மக்களின் வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் ஆகஸ்ட 15ம் தேதியான இன்று இந்தியா வெள்ளையர்களிடமிருந்து சுதந்திரம் பெற்று 75 ஆண்டு கொண்டாடுகிறது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முதன்முறையாக கோட்டை கொத்தளத்தில் தேசிய கொடி ஏற்றி வைத்து வணங்கினார்.
முன்னதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை, போர் நினைவுச்சின்னத்தில் இருந்து சென்னை போலீசாரின் மோட்டார் சைக்கிள்கள் புடைசூழ கோட்டைக்கு அழைத்து வந்தனர்.
கோட்டை கொத்தளத்தின் முன்பாக இருக்கும் அணிவகுப்பு மரியாதை ஏற்றுக் கொண்ட பிறகு மேடை அருகே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வந்திறங்கினார். அங்கு அவருக்கு தென்னிந்திய பகுதிகளின் தலைமை படைத்தலைவர், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடற்படை அதிகாரி, தாம்பரம் விமானப்படைத்தளம் விமானப்படை அதிகாரி, கிழக்கு மண்டல கடலோர காவல்படை இன்ஸ்பெக்டர் ஜெனரல், தமிழக டி.ஜி.பி. சைலேந்திர பாபு, சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், கூடுதல் டி.ஜி.பி. (சட்டம் ஒழுங்கு) ஆகியோரை மரபுப்படி முதல்-அமைச்சருக்கு தலைமைச் செயலாளர் அறிமுகம் செய்து வைத்தார்.