சந்தோஷ் பிரதாப் கதாநாயகனாக நடிக்க பவ்யா த்ரிகா, பூஜிதா பொன்னடா கதாநாயகிகளாக நடிக்கும் படம் ‘சிக்னல் அட் 11.30’.
இப்படத்தை அலார் ஸ்டுடியோஸ் (Alar Studios ) சார்பில் மலர்விழி நடேசன், ஷிவானி சுப்ரமணி ஆகியோர் தயாரிக்கிறார்கள். டி இமான் இசையமைக்கிறார். ஆர். கலைவாணன் எடிட்டிங் கவனிக்கிறார். ராஜா பட்டாச்சாரி ஒளிப்பதிவு செய்ய ஷிவானி சுப்ரமணி எழுதி இயக்குகிறார். பிஆர்ஓ சுரேஷ் சந்திரா (D’One).
சிக்னல் அட் 11:30 படம் வரும் செப்டம்பர் மாதம் திரைக்கு வர உள்ள நிலையில் படம் பற்றி திரையுலகில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
இது பற்றி இயக்குனர் ஷிவானி சுப்ரமணி கூறியதாவது:
சிக்னல் அட் 11:30 பட கதை உருவான சூழல் வித்தியாசமானது. சொந்தமாக ஒரு படம் தயாரித்து கொண்டிருந்தேன்.அப்போது பல்வேறு சிக்கல்கள் யோசனைகள் என் எண்ணத்தில் ஓடிக்கொண்டிருந்தது. ஒருமுறை நான் காரில் சென்று கொண்டிருந்தபோது நான்கு முனை சாலை ஒன்றில் சிக்னலில் நிற்க வேண்டியதாயிற்று. அது இரவு 11 மணி 30 நிமிடம். அந்த நேரத்தில் தான் எனக்கு இந்த கதை உதயமானது.
11:30 மணி சிவப்பு சிக்னல் விழுந்திருக்கும் நிலையில் ஒரு எதிர்பாராத சம்பவம் ஒருவர் வாழ்வில் நடக்கிறது . அது பல்வேறு சம்பவங்களை செய்கிறது. அந்த சம்பவங்களை மையமாக கொண்டே படத்தின் திரைக்கதை செல்கிறது. இது ரொமான்டிக் திரில்லர் கதை பாணியில் உருவாகிறது.

கதை உருவான உடன் இதில் நடிக்கும் ஹீரோ எப்படி இருக்க வேண்டும் என்று எண்ணினேனோ அதே தோற்றத்துடன் இருந்தார் சந்தோஷ் பிரதாப். அவரிடம் கதை சொன்னபோது உடனடியாக ஒப்புக்கொண்டார். அதேபோல் ஒரு முக்கிய சஸ்பென்ஸ் கதாபாத்திரத்திற்காக பவ்யா த்ரிகா போல் ஒரு நடிகை இருக்க வேண்டும் என்று எண்ணினேன். அவரிடம் அந்த கதாபாத்திரத்தை சொன்னபோது அவரும் நடிக்க ஒப்புக்கொண்டார். மற்றொரு கதாபாத்திரத்தில் தான் ஹீரோயின் கிடைப்பதில் கொஞ்சம் சிரமம் இருந்தது. கடைசியில் பூஜிதா பொன்னடா ஒப்பந்தமானார். இவர்களுடன் ஜெயபிரகாஷ் முனிஷ்காந்த் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
இப்படத்தின் கதையை இசையமைப்பாளர் டி இமானிடம் நான் கூறிய போது, அவர் என்னை பாராட்டி உடனடியாக இசையமைக்க ஒப்புக் கொண்டார். அவர் இந்த படத்திற்கு இசையமைக்க ஒப்புக் கொள்வார் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. அவர் ஒப்புக்கொண்டது எனக்கு பெரும் சந்தோஷத்தை தந்தது. அதேபோல் ஒளிப்பதிவாளர் மற்றும் எடிட்டர் உள்ளிட்ட தொழில்நுட்ப கலைஞர்களும் அனுபவம் வாய்ந்தவர்கள். நடிகர் நடிகைகள் எப்படி கதைக்கு பிளஸ்ஸாக அமைந்தார்களோ அதே போல் தொழில்நுட்ப கலைஞர்களும் சிறந்தவர்களாக அமைந்தார்கள் என்பது எனக்கு மிகப்பெரிய சந்தோஷம்.
இப்படத்தின் படப்பிடிப்பு 35 நாட்கள் நடந்து முடிந்திருக்கிறது. படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தற்போது தான் தொடங்கி இருக்கிறது. அதுவே ஒரு நல்ல ஆரம்பமாக அமைந்திருப்பது சந்தோஷமாக இருக்கிறது. செப்டம்பர் மாதத்தில் படத்தை வெளியிட திட்டமிட்டு பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.
இவ்வாறு இயக்குனர் ஷிவானி சுப்ரமணி கூறினார்.
கதாநாயகன் சந்தோஷ் பிரதாப் கூறும் போது, ” இந்த படத்தின் கதையை என்னிடம் கூறும்போது எனக்கு பிடித்திருந்தது. இது ஹீரோ பாத்திரமா அல்லது நெகட்டிவ் ஷேடு கொண்ட வில்லன் பாத்திரமா என்று கேட்கும் அளவுக்கு ஒரு வித்தியாசமான கதாபாத்திரமாக இருப்பதுதான் பெரிய ஹைலைட். இதுபோன்ற கதாபாத்திரங்கள் எனக்கு ஏற்கனவே நல்ல பெயரை பெற்றுத் தந்திருக்கிறது.அந்த வகையில் இந்த பாத்திரமும் எனக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல பெயரை பெற்று தரும் என நம்புகிறேன் ” என்றார்.

பவ்யா கூறும்போது, ” நீங்கள் ஏன் அதிக படங்களில் நடிப்பதில்லை என்று என்னிடம் கேட்கிறார்கள் அதற்கு காரணம் நல்ல கதாபாத்திரமாக இருந்தால் மட்டும் தான் நான் நடிக்க ஒப்புக்கொள்கிறேன். அதனால்தான் நான் நிறைய படங்களில் நடிக்காதது போன்ற ஒரு தோற்றம் இருக்கிறது ஆனால் நல்ல படங்களில் நான் நடித்துக் கொண்டுதான் இருக்கிறேன். அந்த வகையில் இந்த படத்தில் நான் ஏற்றிருக்கும் கதாபாத்திரமும் மாறுபட்ட கதாபாத்திரம். அது என்ன என்பதை இப்போதைக்கு வெளியிட முடியாது. படத்தில் அது ஒரு சஸ்பென்ஸ் கதாபாத்திரமாக அமைந்திருப்பதுதான் அதற்கு காரணம்.
இந்த படத்தில் நடித்தபோது பைக் ஓட்டும் காட்சி இருந்தது. நான் கல்லூரி நாட்களில் பைக் ஓட்டி இருக்கிறேன் ஆனால் அப்போது எனது அம்மா அறிவுரை கூறிக் கொண்டே இருப்பார். சாலையில் கவனமாக பைக் ஓட்ட வேண்டும் இல்லாவிட்டால் விபத்தைத் தான் சந்திக்க நேரிடும் என்று கூறுவார். அவர் கூறிய அந்த வார்த்தைகள் தான் படப்பிடிப்பில் நான் பைக் ஓட்டும்போது என் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருந்தது. நல்ல வேலையாக எந்த அசம்பாவிதமும் நடக்கவில்லை. இப்போது நன்றாகவே பைக் ஓட்டுகிறேன்” என்றார்.
தயாரிப்பாளர் மலர்விழி நடேசன் கூறும் போது, ” நான் வெளிநாட்டில் படித்துவிட்டு அங்கிருந்து திரும்பியபோது எனது அம்மா தான் தயாரித்த படத்தின் படப்பிடிப்புக்குத்தான் என்னை நேரடியாக அழைத்துச் சென்றார். நான் டாக்டருக்கு படித்திருந்தாலும் பட தயாரிப்பு பணிகளில் அம்மாவுடன் இணைந்து பணியாற்றியதால் அதில் ஆர்வம் ஏற்பட்டது. அந்த அனுபவம் தான் இப்படத்தை தயாரிக்கும் தைரியத்தை எனக்கு கொடுத்தது. படம் நன்றாக வந்திருக்கிறது. இது வெற்றி படமாக அமையும் என நம்புகிறேன்” என்றார்.
