மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிககையில் கூறியதாவது:
நகைச்சுவை நடிப்பில் தனக்கென தனி முத்திரையைப் பதித்த நாகேஷ் இந்திய சினிமாவின் இணையற்ற நடிகர்களுள் ஒருவர். 1000 திரைப்படங்களுக்கும் மேல் நடித்து தமிழர்களை மகிழ்வித்தவர். இந்தியாவின் ஜெர்ரி லூயிஸ், தமிழகத்தின் சார்லி சாப்ளின் என்றெல்லாம் அவரது நடிப்பு ஊடகங்களால் புகழப்பட்டது.
1958-ல் மனமுள்ள மறுதாரத்தில் அறிமுகமாகி 2008-ல் தசாவதாரம் வரை மிகச்சரியாக அரை நூற்றாண்டுகள் நீடித்தது அவரது கலைப்பயணம். எங்கும் எப்போதும் தன்னை முன்னிறுத்திக்கொள்வதோ, விருதுகள் அங்கீகாரங்களுக்கோ ஆள் பிடிப்பதோ நாகேஷின் இயல்பல்ல. அதன் பொருட்டே வாழும் போதும் வாழ்ந்த பிறகும் புறக்கணிக்கப்பட்ட மகா கலைஞன் அவர்.

1974-ல் தமிழக அரசு அளித்த கலைமாமணி விருது, 1994-ல் நம்மவர் திரைப்படத்திற்காக மத்திய, மாநில அரசுகளின் சிறந்த துணை நடிகர் விருது ஆகியவைதான் அவரது கலைவாழ்வில் கிடைத்த சிறு அங்கீகாரங்கள். என்னைப் பொருத்தவரையில் சினிமாவின் எந்த உயரிய விருதுக்கும் தகுதியானவர் நாகேஷ். இவர் பிரான்ஸிலோ, அமெரிக்காவிலோ, ஜெர்மனியிலோ பிறந்திருந்தால் இவர் பெற்றிருந்திருக்கக் கூடிய கவுரவம் என்னவாக இருந்திருக்கும் என்பதை யூகித்துப் பார்க்கிறேன். அவர் மறைந்து 12 ஆண்டுகள் ஆன பிறகும் கூட அவர் மீதான அரசின் புறக்கணிப்பு தொடர்வது ஒரு சககலைஞனாக எனக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.
இந்த மகத்தான நடிகரின் கலைப்பங்களிப்பினை அங்கீகரிக்கும் வகையில் சென்னையில் ஒரு சாலைக்கு அவரது பெயரைச் சூட்டுவதும், அவரது பெயரில் ஒரு விருதினைத் தோற்றுவிப்பதும், எம்.ஜி.ஆர் அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன வளாகத்திற்குள் அவரது சிலையை அமைப்பதும் குறைந்த பட்ச அங்கீகாரங்களாக அமையும். கலைஞர்களைப் போற்றுவதும் நல்லரசின் கடமை என்பதை உணர்ந்து தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு கமல்ஹாசன் கூறியுள்ளார்.
