சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்தில் ம நீ ம தலைவர் கமல்ஹாசன் 67வது பிறந்தநாள் திருவிழா நாளை காலை முதல் மாலை வரை கொண்டாடப்படுகிறது. இதுபற்றி மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள அறிக்கை.
நாளை (7.11.2021) காலை முதல் மாலை வரை நாள் முழுவதும், `நம்மவர்’ டாக்டர் கமல் ஹாசன் அவர்களின் 67வது பிறந்தநாள் விழா, மக்கள் நீதி மய்யம் கட்சியின் திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது என்பதை பெருமகிழ்வோடு தெரிவித்துக்கொள்கிறோம்.
காலை 10 மணியளவில் அலுவலகத்தில் பல்வேறு மருத்துவ நிபுணர்களைக்கொண்டு கண் மருத்துவ முகாம், ரத்ததான முகாம், உறுப்புதான முகாம் மற்றும் பல் மருத்துவ முகாம் ஆகியவை நம்மவரால் துவக்கிவைக்கப்படவுள்ளன. தொடர்ந்து கட்சித் தலைமை அலுவலகத்திலும், ராஜ்கமல் திரைப்பட நிறுவன அலுவலகத்திலும் மதிய உணவாக சுமார் 1,500 பேருக்கு பிரியாணி வழங்கப்படுகிறது.
மாலை 4 மணி முதல் தலைவர் அவர்கள், நம்மவர் கட்சித் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளைச் சந்திக்கிறார். 5 மணியளவில் சென்னை ஆலந்தூர் தொகுதி மற்றும் நம்மவர் போட்டியிட்ட கோவை தெற்குத் தொகுதியில் நமது தலைவர் தனது சொந்த செலவில் குடிநீர்த் திட்டங்களை காணொலி மூலம் துவக்கிவைக்கிறார். அத்துடன் e-library, கமல் கலைக்கூடம் மற்றும் மய்யம் ஆன்லைன் ஷாப்பிங் போன்ற திட்டங்களையும் துவக்கிவைக்கிறார்.
நாள் முழுவதும் மக்களுக்குப் பயன்தரும் திட்டங்களைச் செயல்படுத்துவதே தனது பிறந்தநாளின் நோக்கம் என எண்ணிச் செயல்படும் நம்மவரை, நாம் அனைவரும் நாள்கூடி வாழ்த்துவோம்… கொண்டாடுவோம
இவ்வாறு மக்கள் நீதி மய்யம், தெரிவித்துள்ளது.
