திரைப்பட இயக்குனர் நடிகர் பிரதாப் போத்தன் காலமானார்.
மூடுபனி, வறுமையின் நிறம் சிவப்பு, நெஞ்சத்தை கிள்ளாதே, பன்னீர் புஷ்பங்கள், அழியாத கோலங்கள் உள்ளிட்ட தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிகளில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும் ஜீவா, வெற்றிவிழா போன்ற படங்களை இயக்கி உள்ளார்.
பிரதாப் போத்தன் சென்னை யில் வசித்து வந்தார். உடல் நலக்குறைவு காரணமாக அவர் காலமானார். அவருக்கு வயது 70.
நடிகர் சங்க தலைவர் நாசர் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கை:
‘தகரா ‘என்கிற மலையாள காவிய படத்தில் நடிகராக திரையுலகத்தில் அறிமுகமாகி, நல்ல ஒரு இயக்குனராக பரிமளித்து, எளியவராய் எப்போதும் பெருத்த சிரிப்போடும் இயங்கிக் கொண்டிருந்த நண்பர் பிரதாப் போத்தன் அவர்கள், திடீரென்று இப்பூவுலகை விட்டுச் சென்றது பெரும் அதிர்ச்சியைக் கொடுக்கிறது. அவருடைய திரையுலக நண்பர்கள் வட்டம் தன் குடும்பத்தில் ஒருவரை இழந்தது போல் உணர்வார்கள். ஆறுதல் தேவைப்படுகிற நாமே அவரை இழந்து தவிக்கின்ற குடும்பத்திற்கும், உறவினர்களுக்கும் ஆறுதல் சொல்ல வேண்டிய நிலை. நடிகர் சமூகத்தின் சார்பாக தென்னிந்திய நடிகர் சங்கம் தன் மரியாதையையும், ஆறுதலையும் கலங்கிய கண்ணோடு தெரிவிக்கிறது.
இவ்வாறு எம் நாசர்) தெரிவித்துள்ளார்.
