படம்: வால்டர்
நடிப்பு: சிபிராஜ். ஷிரின் காஞ்வாலா, சமுத்திரக்கனி, நட்டி, ரித்விகா, அபிஷேக், யாமினி சுந்தர்
தயாரிப்பு:ஸ்ரீநிதி திலக்
இசை: தர்ம பிரகாஷ்
ஒளிப்பதிவு:ராசாமணி
இயக்குனர்:அன்பரசன்
கும்பகோணத்தில் பிறந்த குழந்தைகள் அடிக்கடி காணாமல்போகிறது. இந்த விவரம் போலீஸ் அதிகாரி சிபிராஜுக்கு தெரியவர அவர் அதை கண்டுபிடிப்பதில் தீவிரம் காட்டுகிறார். காணாமல்போன குழந்தை திடீரென்று வீடு திரும்புகிறது. அதை எண்ணி நிம்மதி அடைகிறார். அப்படி கண்டுபிடிக்கப்பட்ட குழந்தை மறுநாளே இறந்துவிட்டது என்ற அதிர்ச்சி தகவல் வருகிறது. முதலில் இதை சாதாரணமாக எடுத்துக்கொண்டாலும் போகப்போக இதேபோல் சம்பவங்கள் தொடர்கிறது. அதுபற்றி கண்டுபிடிப்பதில் தீவிரமாக ஈடுபடுகிறார் சிபிராஜ். இந்த வேட்டையில் சிபியின் போலீஸ் டீம், சமுத்திரக்கனி என்கவுன்டர் செய்யப்பட்டிருக்கிறது
இதையடுத்து சிபி எதிர்பாராத விபத்தை எதிர்கொள்கிறார். முடிவு வித்தியாசமாக அமைகிறது.
இதுவரை இல்லாத சிபியை வால்டர் படத்தில் காணமுடிகிறது. போலீஸ் உடை ஒரு சில ஹீரோக்களுக்கு கச்சிதமாக பொருந்திவிடுகிறது. அந்த பட்டியலில் சிபிக்கு இடம் உண்டு. 6 அடியை தாண்டி உயரமான சிபி ஓவர் பில்டப் தராமல் நடிப்பில் யதார்த்தம் காட்டியிருப்பது பிளஸ்.
சிபிக்கும், நட்டிக்கும் இடையே நடக்கும் போலீஸ் திருடன் துரத்தல் பரபரப்பானது. நீ எப்பவுமே என்னை நேரில் பார்த்திரக்கூடாது என்று சிபிக்கு எச்சரிக்கை விடுக்கும் நட்டியின் குரலில் வில்லத்தனம் தெறிக்கிறது.
ஹீரோவாக நடித்து வந்த நட்டி திடீர் வில்லனாகி சிபிக்கு டஃப் பைட் கொடுத் திருக்கிறார். ரித்விகா, சனம் ஷெட்டி காட்சிகளுக்கு கைகொடுத்திருக்கின்றனர்.
போலீஸ் கதை என்று பார்க்க ஆரம்பித்தால் பின்னர் அதில் மெடிக்கல் கிரைம் கதையும் சேர்ந்துக்கொள்வது கூடுதல் விறுவிறுப்பு. இப்படத்தின் ஸ்கிரிப்ட் 11 முறை மாற்றப் பட்டது. ஒவ்வொரு காட்சியையும் பார்த்து இழைத்திருக்கிறார் இயக்குனர் அன்பரசன். இசையில் பாடல்களை ரசிக்க வைத்திருப்பதுடன் பின்னணி இசையிலும் தர்ம பிரகாஷ் உயிர்கொடுத்திருக்கிறார். அதேபோல் ஒளிப்பதிவாளர் ராசாமதியின் கேமராவும் தேவையான இடங்களில் பளிச் சென்றும், சீரியஸான இடங்கில் மாறுபட்டும் விறுவிறுப்பு சேர்க்கிறது.
வால்டர் துடிப்புள்ள போலீஸ்.