படம்: காலேஜ்குமார்நடிப்பு: பிரபு, மதுபாலா, ராகுல் விஜய், பிரியா, நாசர்தயாரிப்பு: ஐ.பத்மனாபாஇசை: குடப் இ கிரிப்பாஒளிப்பதிவு: குருபிரசாந்த் ராய்
இயக்கம்: ஹரி சந்தோஷ்
ஆடிட்டர் ஆபிசில் பியூனாக வேலை செய்கிறார் பிரபு. திடீரென்று வரும் போன் காலில் மனைவி மதுபாலா பிரசவத்துக்காக துடித்துக்கொண்டிருப்பதாக தகவல் வருகிறது. ஆபிசிலிருந்து அவசரமாக புறப்பட பிரபு முயலும்போது ஆடிட்டருக்கு டீ கொடுத்துவிட்டு போ நான் பார்த்துக்கொள்கிறேன் என்று பிஏ கூறுகிறார். மனைவிக்கு என்ன ஆகுமோ என்ற பதற்றத்தில் டீ எடுத்துச் செல்லும் பிரபு அதை ஆடிட்டர் மீது கொட்டிவிடுகிறார். கோபம் அடையும் ஆடிட்டர் பிரபுவை வேலை யைவிட்டு வெளியேறச் சொல்கிறார். அவரிடம் சவால்விடும் பிரபு, எனக்கு பிறந்த பிள்ளையை உன்னை விட பெரிய ஆடிட்டராக உயர்த்தி காட்டுகிறேன் என்று கூறிச் செல்கிறார். மகனை கண்ணும் கருத்துமாக படிக்க வைத்து ஆடிட்டர் கல்விக்காக கல்லூரியில் சேர்த்து விடுகிறார். மகனுக்கோ படிப்பு ஏறவில்லை. பிரபு கண்டிக்கிறார். படிப்பது ரொம்ப கஷ்டம் நீ போய் படித்துப்பார் என்று பிரபுவுக்கு சவால் விடுகிறான் மகன். அவரும் சரி என்று ஒப்புக்கொண்டு கல்லூரிக்கு படிக்க கிளம்பி விடுகிறார். குடும்ப பொறுப்புகளையும், தந்தையை படிக்க வைக்கும் பொறுப்பையும் மகன் ஏற்கிறான். இதன் முடிவு என்ன என்பதை சுவாரஸ்யமாக சொல்கிறது கிளைமாக்ஸ்.
நீதான் முதல் மார்க் வாங்கணும் என்று பிள்ளைகளை நெருக்காத பெற்றோர்கள் கிடையாது. அந்த மன உளைச்சல் பிள்ளைகளை டென்ஷனுக்குள்ளாக்குகிறது. அப்படியொரு நெருக்குதலை தரும் தந்தையாக பிரபு அவரது மகனாக ராகுல் நடித்திருக்கின்றனர். கல்லூரிக்கு படிக்கச் செல்லும் ராகுல் மாணவ பருவத்தை அனுபவிக்கிறார். நண்பர்களுடன் மகிழ்ச்சியாக பொழுதை கழிக்கிறார். அரட்டை, ஆட்டம், பாட்டு, காதல் என்று நேரத்தை செலவழித்து படிப்பை கோட்டை விடுகிறார். வீட்டிலும் போலி மார்க் ஷீட் காட்டி ஏமாற்றுகிறார். பரீட்சையில் அதிக மதிப்பெண் பெற வேண்டும் என்பதற்காக காப்பி அடித்து மாட்டிக்கொள்கிறார். அவரை பறக்கும்படை அதிகாரிகள் பிடித்து, டி.சி கொடுத்து வீட்டுக்கு அனுப்புகின் றனர். அதை அறிந்து பிரபு கலக்கமடைகிறார். மகனுடன் சண்டை போடுகிறார். பதிலுக்கு ராகுல், படிக்கறது ரொம்ப கஷ்டம் நீங்க போய் படிச்சிபாருங்க தெரியும் என்று சவால் விடுகிறார். ஏதோ ேஜாக்காக சொல்கிறார் கதை வேறுபக்கம் திரும்பும் என்று எதிர்பார்த்தால் திடீெரன பிரபு கல்லூரிக்கு போய் படிக்க ஒப்புக்கொள்கிறார். அதன்பிறகு படத்தின் சுவாரஸ்யம் டபுள் ஆகிறது.
தோளில் புத்தக பையை மாட்டிக்கொண்டு கையில் சாப்பாட்டு கூடையுடன் பிரபு கல்லூரிக்கு வந்ததும் அவரை அங்கிருக்கும் மாணவர்கள் அங்கிள் அங்கிள் என்று சொல்லி நக்கலடிப்பதும் அதைகேட்டு வெட்கப்படாமல் எளிதாக கடந்துசென்று படிப்பை தொடர்வதும் காட்சிகளை கலகலவென நகர்த்துகிறது. ராகுலின் காதலி பிரியா பிரபுவுக்கு ஊக்கம் கொடுப்பதும் அதன்படி படித்து தேர்வுக்கு தயார் ஆவதுமாக பிரபுவின் நடிப்பும், உழைப்பும் கனக்கச்சிதம்.
கல்லூரி கேன்டினை லீசுக்கு எடுத்து நடத்தும் ராகுல் அங்கு டீ சாப்பிட வரும் பிரபுவையும் தனது காதலியையும் கண்டு குமுறுவதும் போடா போடா என்று அவனை பிரபு துரத்துவதும் செம காமெடி.
பாஞ்சாலங்குறிச்சி படத்துக்கு பிறகு நீண்ட இடைவெளி விட்டு பிரபுவுடன் இணைந்து நடித்திருக்கிறார் மதுபாலா. முகத்தில் முதிர்ச்சி தெரிவதுபோல் நடிப்பிலும் அவர் முதிர்ச்சியை காட்டும்போது மதுவின் அனுபவம் பேசுகிறது. நாசர் கல்லூரி முதல்வராக வருகிறார்.
காதல் கதையை எடுத்தோமா கதையை முடித்தோமா என்றில்லாமல் எந்த வயதிலும் படிக்க முடியும் என்ற கருவை மையமாக கொண்டு படத்தை இயக்கியிருக்கும் ஹரி சந்தோஷ் தேர்ந்த இயக்குனர் என்பதை நிரூபித்திருக்கிறார். இவர் தமிழில் இயக்கும் முதல் படம் என்றாலும் கன்னடத்தில் ஏற்கனவே 7 படங்கள் இயக்கியிருக்கிறாராம். ஏ.ஆர்.ரஹ்மான் மாணவர் குதாப் ஈ கிரிப்பா இசை இதமாக ஒலிக்கிறது. அதேபோல் குரு்பிரசாந்த் ராயின் கேமராவும், கே.எம்.பிரகாஷின் எடிட்டிங்கும் படத்துக்கு பிளஸ்.
காலேஜ் குமார்-பெற்றோரும் பிள்ளைகளும் இணைந்து பார்க்க வேண்டிய படம்.