படம்: சூது கவ்வும் 2
நடிப்பு: சிவா, கருணாகரன், ராதாரவி, வாகை சந்திரசேகர், எம் எஸ் பாஸ்கர், ஹரிஸா, கராத்தே கார்த்தி, யோக் ஜேபி, அருள்தாஸ், கல்கி, கவி
தயாரிப்பு: சி வி குமார், தங்கராஜ்
இசை: எட்வின் லூயிஸ் விஸ்வநாத்
ஒளிப்பதிவு: கார்த்திக் கே. தில்லை
இயக்கம்: அர்ஜுன் எஸ் ஜே.
பி ஆர் ஓ: நிகில் முருகன்
விஜய் சேதுபதி நடிப்பில் 2013 ஆம் ஆண்டு வெளியான சூது கவ்வும் படத்தின் இரண்டாம் பாகமாக வந்திருக்கிறது சூது கவ்வும் 2.
கொலை கொள்ளை என்றில்லாமல் சின்னச் சின்ன சம்பவங்கள் செய்து அதில் வரும் சொற்ப வருமானத்தில் திருப்தி அடையும் குட்டி கேங்ஸ்டர் லீடர் குருநாத் ( சிவா). அவருக்கு இரண்டு அடியாட்கள். அவ்வப்போது சிலரை கடத்தி வந்து சொற்ப தொகையை வாங்கிக்கொண்டு விடுவித்து அதில் வரும் வருமானத்தில் தம், தண்ணீர் என்று பொழுது கழிக்கிறது குருநாத் கேங். ஒரு சமயம் அமைச்சர் கருணாகரனை கடத்த வேண்டிய சூழல் ஏற்பட அதையும் செய்கிறது குருநாத் கூட்டம். அதன் பிறகுதான் சிக்கல் ஆரம்பிக்கிறது. ஒரு பக்கம் போலீஸ் தேடுகிறது, இன்னொரு பக்கம் பாதிக்கப்பட்டவர்கள் தேடுகிறார்கள். இவர்களிடம் சிக்கியும் தப்பியும் குருநாத் கூட்டம் எஸ்ஸாகிறது. அமைச்சர் கடத்தப்பட்டதால் அரசியல் குழப்பம் ஏற்படுகிறது. இடியாப்ப சிக்கலில் சிக்கிக் கொள்ளும் குருநாத் கூட்டம் மீள முடிஞ்சதா, அரசியல் குழப்பம் தீர்ந்ததா என்பதற்கெல்லாம் பிளாக் காமெடி ஸ்டைலில் பதில் சொல்கிறது சூது கவ்வும் 2.
ஜாலியாக வந்து,b ஜாலியாக நடித்துவிட்டு, ஜாலியாக சம்பளத்தை வாங்கிக்கொண்டு சென்று கொண்டிருந்த மிர்சி சிவாவை இந்த படத்தில் கேங்ஸ்டர் ஆக்கி அவரது தோற்றத்துக்கு ஒரு புது பரிமாணத்தை தந்திருக்கிறார்களே தவிர நடிப்பும் நக்கலும் எந்த மாற்றமும் இல்லாமல் தொடர்கிறது.
பெண்ணை கடத்தி வந்து அவரது தந்தையிடம் லட்ச ரூபாய் பணம் கறந்து அந்தப் பணத்தில் பெண்ணுக்கும் பங்கு கொடுத்து நியாயமான கடத்தல்காரனாக சிவா கலகலக்க வைக்கிறார்.
கருணாகரனை கடத்தி வரும் சிவா கேங் பின்னர் அவரைக் காப்பாற்ற கார் சேசிங்கில் ஈடுபடுவது, காரை ஓட்டிக்கொண்டிருக்கும் போது கண்ணுக்கு பாம்புகள் தெரிய ஸ்டேரிங்கிலிருந்து கையை எடுத்துவிட்டு தாறுமாறாக கார் ஓட்டும் கலாட்டா சேசிங்காக மாறுவது படபடப்பு.
கருணாகரன் அமைச்சராக மாறுவதும் பின்னர் அவருக்கு முதல்வர் சான்ஸ் வருவதெல்லாம் கொஞ்சம் ஓவராக இருந்தாலும் இது சினிமா தானே என்று ஆறுதல் கொள்ள வேண்டியதுதான்.
வாகை சந்திரசேகர் அரசியல்வாதியாக வருகிறார் . அவரது நண்பராக எம் எஸ் பாஸ்கர் நடித்திருக்கிறார். தன் மகனை யாரோ கடத்திவிட்டார்கள் என்று பொதுக்கூட்டம் நடக்கும் இடத்துக்கே வந்து எம் எஸ் பாஸ்கர் மானத்தை அவரது மனைவி வாங்குவது கலகல ரகம்.
நீண்ட நாட்களுக்கு பிறகு வாகை சந்திரசேகர் தலை காட்டியிருக்கிறார் அவர் பேசும் ஒரு சில வசனங்கள் அவருக்கு எதிராக திரும்பாமல் இருந்தால் ஓகே தான்.
சூது கவ்வும் 2 படமாக இருந்தாலும் அதன் முன்னோட்ட படமான சூது கவ்வும் ஒன்றிலிருந்து விஜய் சேதுபதி நடித்திருக்கும் சில காட்சிகள் மின்னலாக வெட்டுவது ஆறுதல்.
பிளாக் காமெடி ஸ்டைல் படம் என்பதால் எப்படி எல்லாம் காமெடி செய்ய முடியுமோ அப்படி எல்லாம் காமெடி செய்து பார்த்து சிரிக்க வைக்க முயற்சி செய்திருக்கிறார் இயக்குனர் அர்ஜுன் எஸ்ஜே.
மூன்று வருடம் இந்த படத்துக்கு கதை எழுதியதாக சொன்னார்கள் இது அவதார் படமோ, டைட்டானிக் படமோ அல்ல என்று ஹீரோ சிவா புரமோஷன் மேடைகளில் கிண்டலாக கூறி வந்தார் அவர் உண்மையைத்தான் சொல்லி இரக்கிறார் என்பது படம் பார்க்கும்போது தெரிகிறது.
சி வி குமார், தங்கராஜ் படத்தை தயாரித்திருக்கிறார்கள். பிளாக் காமெடி ஸ்டைலுக்கான கலர் டோனில் ஒளிப்பதிவு செய்திருக்கிறார் கார்த்திக். இசையில் இன்னும் கூட கவனம் செலுத்தி இருக்கலாம். கேங்ஸ்டர் படம் என்பதால் ரிதமிக்கான ஒரு இசையை உருவாக்கி ரிப்பீட் மோடில் பயன்படுத்தி இருக்கலாம்.
எது எப்படியோ சூது கவ்வும் மூன்றாம் பாகம் எடுத்தே தீர்வோம் என்பதை உறுதி செய்யும் வகையில் அதற்கான ஒரு லீடையும் கிளைமாக்சில் கொடுத்து விட்டார்கள் அது சரி ரசிகர்களை அவ்வளவு சீக்கிரம் தப்பிக்க விடுவோமா என்ன?
சூது கவ்வும் 2- முதல் பாக நம்பிக்கையுடன் சென்றால் விளைவுக்கு கம்பெனி பொறுப்பல்ல..
