சென்னையில் தனுஷ் படிக்கும் கல்லூரி வளாகங்களில் சினிமா ஷூட்டிங் நடக்கிறது. அதை வேடிக்கை பார்க்கும் அவர், படத்தில் ஹீரோயினாக நடிக்கும் மேகா ஆகாஷை பார்த்தவுடனேயே காதலிக்க தொடங்குகிறார். பிறகு மேகா ஆகாஷும் தனுஷை காதலிக்கிறார். ஆதரவற்ற தன்னை தயாரிப்பாளரும், இயக்குனருமான செந்தில் வீராசாமி தனது கட்டுப்பாட்டில் வைத்து இருப்பதாகவும், சுய விருப்பம் இல்லாமலேயே சினிமாவில் நடிப்பதாகவும் சொல்லி கண் கலங்கும் மேகா ஆகாஷை தன் பெற்றோரிடம் அறிமுகம் செய்யும் தனுஷ், மேகா ஆகாஷை திருமணம் செய்துகொள்வதாக சொல்கிறார்.
இதையறிந்து ஆவேசம் அடையும் செந்தில் வீராசாமி, தனுஷிடம் இருந்து மேகா ஆகாஷை வலுக்கட்டாயமாக பிரிக்கிறார். 4 ஆண்டுகள் கழித்து தனுஷிடம் பேசும் மேகா ஆகாஷ், மும்பையில் தானும், தனுஷ் அண்ணன் சசிகுமாரும் மிகப் பெரிய பிரச்னையில் சிக்கி தவிப்பதாகவும், உடனே தங்களை காப்பாற்ற வேண்டும் என்றும் கதறுகிறார். இதையடுத்து மும்பை செல்லும் தனுஷ், அதிர்ச்சியான சம்பவங்களை சந்திக்கிறார். அப்போது அவரை தாதா அடியாட்கள் துப்பாக்கியால் சுடுகின்றனர்.
தோட்டா அவர் மீது பாய்ந்து செல்கிறது. பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் கிளைமாக்ஸ். லவ்வர் பாய் வேடத்தில் தனுஷ் வருகிறார். காதலிக்காக துடிப்பது, ஆக்ஷனில் எதிரிகளை அடிப்பது, சென்டிமென்டில் உருகுவது என்று, வித்தியாசமான தனுஷை பார்க்க முடிகிறது. அழகாக இருக்கிறார் மேகா ஆகாஷ். அவரும், தனுஷும் லிப்லாக் முத்தம் கொடுத்துக்கொண்டே இருக்கின்றனர். மும்பை போலீஸ் சசிகுமார், வலுவான கேரக்டரில் நடித்து இருக்கிறார். வழக்கமான வில்லனாக வந்து போகிறார், செந்தில் வீராசாமி.
சுனேனா வீணடிக்கப்பட்டுள்ளார். ஜோமோன் டி.ஜான் மற்றும் மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு காதலுக்கும், ஆக்ஷனுக்கும் வித்தியாசம் காட்டியுள்ளது. தர்புகா சிவா இசையில் சில பாடல்கள் ஏற்கனவே ஹிட். பின்னணி இசையில், பல காட்சிகளில் இசைக்கருவிகளின் சத்தம் அதிகமாக உள்ளது. சினிமா ஹீரோயின், திடீரென கல்லூரி மாணவனை காதலிப்பது நம்பும்படி இல்லை. பெரும்பாலான காதல் காட்சிகள் சலிப்பூட்டுகிறது. இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன், கதையை இன்னும் மாற்றி யோசித்து இருக்கலாம்.