அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ள வாழ்த்து செய்தி:
ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை &
விஜயதசமி திருநாள் நல்வாழ்த்துகள்
இன்னல்களை போக்கும் துர்கா தேவியை மூன்று நாட்களும், பொருளாதார சிக்கல்களை தீர்க்க வல்ல லட்சுமி தேவியை மூன்று நாட்களும், அழியா செல்வமான அறிவுச் செல்வத்தை தரக்கூடிய சரஸ்வதி தேவியை மூன்று நாட்களும் நவராத்திரி நாட்களில் வழிபட்டு ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை திருநாள் கொண்டாடப்படுகிறது. இந்த நன்னாளில் நம் வாழ்வு உயர உறுதுணையாக இருக்கும் தொழில் மென்மேலும் பெருக, தொழில் கருவிகளையும், எந்திரங்களையும் பூஜித்து, கல்வி செல்வம் பெருக நோட்டு, புத்தகங்களை பூஜித்து நீடித்து நிலைக்கும் கல்வி, செல்வம், வீரம் ஆகிய மூன்றும் கிடைக்க முப்பெரும் தேவியரை போற்றி வணங்குவோம்.
மகிஷாசுரன் என்னும் அரக்கனை அன்னை அழித்து வெற்றி வாகை சூடிய திருநாளாம் விஜயதசமி திருநாள், மக்கள் தாங்கள் செய்யும் நற்செயல்களில் உள்ள தீமையை விலக்கி நன்மை அருளும் நன்னாளாக அமையட்டும்.
பண்டிகையின் சாராம்சம் ஒற்றுமை, சமத்துவம், மதநல்லிணக்கம் ஆகும். நவராத்திரி திருவிழா மாநிலங்களுக்கு ஏற்ப மாறுபட்டு அமைந்தாலும், அனைவரது பிரார்த்தனைக்கேற்ப இல்லத்திலும், தேசத்திலும் அமைதி, நல்லிணக்கம், மகிழ்ச்சி மற்றும் ஆரோக்கியம் சிறந்து விளங்கட்டும். நவராத்திரி விழாவை சிறப்பாக கொண்டாடும் அனைத்து சொந்தங்களுக்கும் என் சார்பாகவும், என் குடும்பத்தின் சார்பாகவும், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சார்பாகவும் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு ரா.சரத்குமார் தெரிவித்திருக்கிறார்.