படம்: புஜ்ஜி
நடிப்பு: கமல்குமார்,
நக்கலைட்ஸ் வைத்தீஸ்வரி,
கார்த்திக் விஜய் ,.குழந்தை நட்சத்திரம் பிரணிதி சிவ சங்கரன்,
லாவண்யா கண்மணி,
நக்கலைட்ஸ் ராம்குமார் ,
நக்கலைட்ஸ் மீனா ,வரதராஜன்
தயாரிப்பு: ராம் கந்தசாமி
இசை: கார்த்திக் ராஜா
ஒளிப்பதிவு: அருண்மொழி சோழன்
இயக்கம்: ராம் கந்தசாமி
பிஆர்ஓ: சக்தி சரவணன்
அதிரடி, ஆக்சன், பயம் காட்டும் பேய், திகிலூட்டும் சஸ்பென்ஸ் என பலதரப்பட்ட படங்கள் ரசிகர்களை மிரட்டிக் கொண்டிருக்கும் போது அவ்வப்போது தென்றலாக சில படங்கள் வந்து தழுவி செல்லும் அப்படி ஒரு படமாக வெளியாகி இருக்கிறது புஜ்ஜி.
வழக்கமாக செல்லப்பிராணியாக நாயை வைத்து தான் பல கதைகள் உருவாகி இருக்கிறது. இப்படத்தை பொறுத்தவரை ஆடு ஒன்றை வைத்து கதையை உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் ராம் கந்தசாமி.
ரோடோரத்தில் கிடக்கும் குட்டி ஆடு ஒன்றை அண்ணனும் தங்கையும் கண்டெடுத்து வீட்டுக்கு கொண்டு வருகிறார்கள். அந்த ஆட்டுக்கு புஜ்ஜி என்று பெயர் வைத்து சிறுமி பாசத்துடன் வளர்க்கிறாள். திடீரென்று அந்த குட்டி காணாமல் போய்விடுகிறது. அதைத் தேடி அண்ணனும் தங்கையும் பஸ் ஏறி வெளியூருக்கு செல்கிறார்கள். அந்த குட்டி கசாப்பு கடைக்காரர் கைக்கு சென்று விட்டதாக கேள்விப்பட்டு அவரை அணுகி குட்டியை மீட்க போராடுகிறார்கள் இந்த போராட்டத்தில் அவர்கள் குட்டியை மீட்டார்களா அல்லது அவர்கள் கையில் ஆட்டின் கறி தான் கிடைத்ததா என்பதற்கு கிளைமாக்ஸ் பதில் சொல்கிறது.
குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கும் பிரணதி அவரது அண்ணனாக நடித்திருக்கும் சிறுவனும் கதையை முழுவதுமாக தோள் மீது தூக்கி சுமந்திருக் கிறார்கள்.
வீட்டுக்கு கொண்டு வரும் ஆட்டுக்குட்டிக்கு புஜ்ஜி. என்று பெயர் வைக்கும் பிரணிதி அதைச் செல்லமாக கொஞ்சுவதும் அதற்கு பாட்டிலில் பால் ஊட்டுவதும் ரசிக்கத்தக்க குழந்தைத்தனங்கள்.. அவரது அண்ணனாக வரும் சிறுவன் ஆட்டுக்கறியை ருசித்து சாப்பிட ஆசைப்பட்டாலும் புஜ்ஜி வந்த பிறகு இனி ஆட்டுக்கறியே சாப்பிட மாட்டேன் என்று சொல்லி சைவ பட்சியாக மாறுவது பல குழந்தைகளையும் அதே போல் மனம் திருந்த செய்யும்.
ஒரு ஆட்டுக்குட்டியை தேடி செல்லும் அண்ணன் தங்கை பயணம் வெவ்வேறு ஊர்களுக்கு செல்வதும் கார் துரத்தல், கடத்தல் திருட்டுத்தனம் மோதல் என்று காட்சிகள் செல்வது எதிர்பார்க்காத திருப்பங்கள்.
ஆட்டுக்குட்டியை கசாப்பு கடையில் வைத்து 5 மணிக்குள் பணத்தை தராவிட்டால் வெட்டி விடுவேன் என்று மிரட்டும் கசாப்பு கடைக்காரர் வரதராஜன் எதார்த்தமான வில்லத்தனத்தை காட்டி இருக்கிறார். குழந்தைகள் கெஞ்சி கேட்கிறார்களே என்று கூட கொஞ்சமும் பரிதாபம் காட்டாமல் அவர்களிடம் கறாராக பேசி காசை கொண்டு வரும்படி விரட்டுவது கடுப்பாக இருந்தாலும் காட்சியை விறுவிறுவென கொண்டு செல்ல பயன்பட்டிருக்கிறார்.
குழந்தைகளுக்காக ஆட்டுக் குட்டியை கண்டுபிடித்து தர எல்லா முயற்சிகளையும் எடுக்கும் ஹீரோ கமல் குமார் மனதில் இடம் பிடிக்கிறார். அதேபோல் படத்தில் நடித்திருக்கும். வைத்தீஸ்வரி,
கார்த்திக் விஜய் , லாவண்யா கண்மணி, நக்கலைட்ஸ் ராம்குமார் ,நக்கலைட்ஸ் மீனா ஆகிய வரும் தங்கள் பாத்திரங்களை வீணடிக்கவில்லை.
ராம் கந்தசாமி படத்தை இயக்கி தயாரித்திருக்கிறார். சிறுவர்களுக்கான படமாக மட்டுமல்லாமல் ஒரு உயிரை கொல்லக்கூடாது என்ற உணர்வை சொல்லும் வகையில் கதை கருவை அமைத்து அதை சுவாரஸ்யமாக சொல்லி இருப்பது அப்ளாஸ் பெறுகிறது.
கார்த்திக் ராஜா படத்தின் கதையை கேட்டுவிட்டு சம்பளமே இல்லாமல் இசையமைப்பதாக கூறி தனது பெருந்தன்மையை காட்டி இருக்கிறார்.
அருள்மொழி சோழன் ஒளிப்பதிவு எதார்த்தத்தை மீறவில்லை
புஜ்ஜி – குழந்தைகள் மனதை வெல்வது போல் விருதுகளையும் வென்று வரும் .

