தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் குறித்து தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் சில தினங்களுக்கு முன் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது,’ திரிஷா வீட்டில் இருந்து விஜய் வெளியே வரவேண்டும்’ என்று குறிப்பிட்டார் இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பல்வேறு கட்சி தலைவர்கள் நயினார் நாகேந்திரன் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் நடிகை திரிஷா கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து நடிகை த்ரிஷா சார்பில் அவரது வழக்கறிஞர் நித்யேஷ் நடராஜ் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது :
எனது கட்சிக்காரரும், திரைப்பட நடிகையுமான த்ரிஷா கிருஷ்ணனின் அறிவுறுத்தலின் பேரில் இந்த அறிக்கையை வெளியிடுகிறேன்:
1. எனது கட்சிக்காரரைப் பற்றி ஊடகங்களில் பரவி வரும் அருவருப்பான கருத்து குறித்து இந்த அறிக்கையை வெளியிடப்படுகிறது.
2. மாநில அரசியலில் உயர் பதவியில் இருக்கும் ஒருவர் இத்தகைய அருவருப்பான மற்றும் பொருத்தமற்ற கருத்தை வெளியிடுவார் என்று எனது கட்சிக்காரர் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை.
3. எனது கட்சிக்காரர் எந்த அரசியல் கட்சியுடனும் இணைந்திருக்கவில்லை என்பதையும், அவ்வாறு இருக்கவும் விரும்பவில்லை என்பதையும் மிகத் தெளிவாகக் கூறுகிறார். மேலும், எனது கட்சிக்காரர் கடந்த காலங்களில் இருந்தது போலவே, அரசியலில் எப்போதும் நடுநிலையான நிலைப்பாட்டையே எடுத்துள்ளார்.
4. எனது கட்சிக்காரர் எந்தவொரு அரசியல் செயல்பாட்டிலும் ஈடுபடாமல், தனது தொழிலில் மட்டுமே கவனம் செலுத்த விரும்புகிறார். மிக முக்கியமாக, ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கையை ஒருபோதும் பொது விமர்சனம் அல்லது விவாதப் பொருளாக மாற்றக்கூடாது என்பது பொதுவான நிலைப்பாடு. மேலும், உயர் பதவிகளை வகிக்கும் நபர்கள் பொது விவாதத்தில் பொறுப்பையும், சமநிலையையும் பராமரிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
5. எனது கட்சிக்காரரின் பெயரை அவருடன் தொடர்பற்ற விஷயங்களில் இணைக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
