படம்: அருள்வான்
நடிப்பு: அருள்நிதி, ஆரவ், ரம்யா பாண்டியன், பேபி கிருத்திகா, ஜான்விஜய், காளி வெங்கட், வி டிவி கணேஷ்
தயாரிப்பு: எஸ் ஜி சரவணன்
இசை: ஜிவி பிரகாஷ் குமார்
ஒளிப்பதிவு : எம் சுகுமார்
இயக்கம்: கணேஷ் விநாயகன்
பிஆர்ஓ : நிகில் முருகன்
கதை: படிப்பறிவு இல்லாத மலைவாழ் மக்களை சில பெரும்புள்ளிகள் ஏமாற்றி அவர்களை அந்த இடத்தை விட்டு அகற்றி ஆக்கிரமிப்பு செய்கின்றனர். எதிர்த்து பேசினால் காட்டிலகா அதிகாரிகளை வைத்து தாக்குவது என்று அடாவடி செய்கிறார்கள். அந்த பகுதியில் வாழும் கந்தன் – அமரவள்ளி ( ஆரவ்- ரம்யா பாண்டியன்) ஜோடியின் அன்பு மகள் குறிஞ்சி (பேபி கிருத்திகா) பக்கத்து ஊரில் இருப்பவர்கள் பள்ளிக்கு செல்வதை பார்த்து தரனும் படிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறாள். கலெக்டரை சந்தித்து கேட்டால் பள்ளிக்கூடம் கட்டித் தருவார் என்று டீச்சர் ஒருவர் சொல்வதைக் கேட்டு கலெக்டரை சந்திக்க மலைக் கிராமத்திலிருந்து வெளியேறும் குறிஞ்சி வழி தெரியாமல் திண்டாடுகிறாள் அவரால் கலெக்டரை சிந்திக்க முடிந்ததா? ஏதேனும் அசம்பாவிதம் நடந்ததா? என்பதற்கு கிளைமாக்ஸ் பதில் அளிக்கிறது.
மலைப்பகுதியில் வாழும் பல்வேறு மலைவாழ் மக்கள் வெவ்வேறு மொழியில் பேசுகிறார்கள். அதில் காடர் பேசும் ஒரு மொழியைத்தான் இப்படத்தில் நடித்திருக்கும் பேபி கிருத்திகா பேசுகிறார் அதோடு அவர் பெற்றோராக வரும் ஆரவ் ரம்யா ஆகியோரும் அந்த மொழியை பேசுகிறார்கள். கன்னடம் மலையாளம் கலந்த மொழியாக இருக்கும் வார்த்தைகள் ஒரு சிலவற்றை புரிந்து கொண்டாலும் புரியாத வார்த்தைகளுக்கு சப்டைட்டில் தமிழில் போடுவது காட்சியை முழுமையாக புரிந்து கொள்ள உதவுகிறது.

மலைவாழ் பகுதியில் வாழும் மலைச்சாதியை சேர்ந்தவராக ஆரவ் நல்ல நடிப்பை வழங்கி இருக்கிறார். மகள் கிருத்திகா படிக்க ஆசைப்பட்டதும் கண்டிப்பாக பள்ளியில் சேர்த்து படிக்க வைப்பதாக அவர் உறுதி கூறுவது நம்பிக்கை வார்த்தை.
முத்துவேல் என்ற கலெக்டர் வேடத்தில் அருள்நிதி நடித்திருக்கிறார். மென்மையான அணுகுமுறை, அமைதியான ஆனால் உறுதியான பேச்சு என அந்த கதாபாத்திரமாகவே மாறி இருக்கிறார். படத்தின் பாதி வரை தலை காட்டாத அருள்நிதி இடைவேளைக்குப் பிறகு வந்தாலும் மேம்பட்ட நடிப்பின் மூலம் மனதில் குடி புகுந்து கொள்கிறார்.
” உனக்கு கண்டிப்பாக நான் கல்வி கற்க ஏற்பாடு செய்வேன்” என்று பேபி கிருத்திகாவுக்கு வாக்கு தரும் அருள்நிதி பின்னர் அந்த வாக்கு பொய்த்து விடக்கூடாது என்பதற்காக கலெக்டர் பதவியை ராஜினாமா செய்து விட்டு ஆசிரியராக களம் இறங்கி புதிய பரிமாணத்தில் தனது கதாபாத்திரத்தை பிரகாசிக்க வைக்கிறார்.
அருள்நிதி முகத்தை திரையில் பார்த்து நீண்ட நாள் ஆகிவிட்டது என்று ஏங்கிக் கொண்டிருக்கும் அவரது ரசிகர்களுக்கு ஆறுதல் தரும் படமாக அருள்வான் இருக்கும்.
ஆரவ் ஜோடியாக வரும் ரம்யா பாண்டியன், கலெக்டர் உதவியாளராக வரும் விடிவி கணேஷ் அளவுடன் நடித்திருக்கிறார்கள்.
எஸ் ஜி சரவணன் படத்தை தயாரித்திருக்கிறார். வானுயர்ந்து நிற்கும் பசுமையான மலை காட்டு பகுதி யை ஒளிப்பதிவாளர் எம் சுகுமார் தனது கேமரா கண்களால் பசுமை மாறாமல் படம் பிடித்திருக்கிறார். ஜிவி பிரகாஷ் குமார் இசை தென்றலாக வீசுகிறது.
உன்னதமான படத்தை தர வேண்டும் என இயக்குனர் கணேஷ் விநாயகன் இப்படத்தை இயக்கியிருக்கிறார். கொள்ளை விருதுகளை இப்படம் தட்டித் தூக்கும் என்பதில் சந்தேகமில்லை. “கீழே இருப்பவன் மேலே வர வேண்டும் என்றால் மேலே இருப்பவன் கீழே இருக்க வேண்டும் என்று அர்த்தமல்ல. இருவரும் சமமாக ஆகிறான்” என்று தான் அர்த்தம் போன்ற வசனங்கள் சிந்திக்க வைக்கின்றன.
அருள்வான் – . கல்விக் கண் திறக்கும் ஆசான்.

Review by
K. Jayachandhiran
Trending cinemas now.com
