படம்: சார்பட்டா பரம்பரை
நடிப்பு: ஆர்யா, பசுபதி, ஜான் கொக்கென், கலையரசன்,துஷ்ரா விஜயன் சந்தோஷ் பிர்தான், ஜான் விஜய், அனுபமா,, சஞ்சனா நட்ராஜன். ஜி.எம்.சுந்தர், ஷபீர் கல்லரக்கல், காளி வெங்கட்.
தயாரிப்பு: கே 9 ஸ்டுடியோஸ், நிலம் புரடக்ஷன்
இசை: சந்தோஷ் நாரயணன்
ஒளிப்பதிவு: முரளி ஜி
இயக்கம்:பா.ரஞ்சித்
வட சென்னை பகுதியில் 70களின் காலகட்டங்களில் குத்து சண்டை போட்டி பிரபலம். சார் பட்டா பரம்பரை, இடியாப்ப பரம்பரை என பல்வேறு குழுக்கள் தங்களது அணி வீரர்களை களம் இறக்கி பலப்பரீட்சை நடத்துகின்றனர். இதில் சார்பட்டா பரம்பரைதான் டாப் இடத்திலிருக்கிறது. அவர்களை வீழ்த்த இடியப்ப அணி கங்கணம் கட்டிக்கொண்டு வேலை பார்க்கிறது. போட்டி ஒன்றில் சார்பட்டா வீரர் இடியாப்ப அணியிடம் தோற்கிறார். அவர்களை இடியாப்ப அணியினர் கிண்டல் செய்கின்றனர். கோபம் அடைந்த சார்ப் பட்டா அணி வாத்தியார் பசுபதி அடுத்த போட்டியில் உங்களை தோற்கடிக்கிறேன், அதில் ஜெயிக்காவிட்டால் குத்து சண்டை போட்டியிலிருந்து விலகி விடுவதாக கூறுகிறார். இடியப்ப அணியை சேர்ந்த வேம்புலி, டான்ஸ் ரோஸ் போன்றவர்கள் பலே வித்தைக்காரர்கள். சார்பட்டா அணியில் வீரர் ஒருவரை களத்துக்கு பசுபதி தேர்வு செய்ய அவரோ பசுபதியிடம் பயிற்சி எடுக்காமல் மிலிட்டரி நபர் ஒருவரிடம் பயிற்சி எடுக்கிறார். அது பசுபதிக்கு பிடிக்கவில்லை. அவருக்கு பதிலாக கபிலனை தேர்வு செய்கிறார் பசுபதி. அவருக்கு பயிற்சி அளித்து இடியாப்ப அணியை வீரர்கள் வேம்புலி, டான்ஸ் ரோஸ் இருவரையும் எப்படி வீழ்த்துகிறார் என்பதே கிளைமாக்ஸ்.
வடசென்னை துறைமுக தொழிலாளர்களின் பொழுதுபோக்காக ரோசமான ஆங்கில் குத்துச்சண்டை நடக்கிறது. இதில்தான் சார்பட்டா அணிகள் உள்ளிடவர்கள் மோதுகின்றனர். அந்தக் காலகட்ட படம் என்பதால் அதற்கேற்ற பின்னணி, நடிகர்களின் ஹேர் ஸ்டைல், உடை, குத்துச் சண்டைக்கான ஓலையால் வேயப்பட்ட மைதானம் என தத்ரூபமாக அமைக்கப்பட்டதால் காட்சிகள் இயற்கை தன்மையை இழக்காமல் படமாகி இருக்கிறது.
சார்பட்டா பரம்பரை அணியின் வாத்தியாராக பசுபதி நடிக்கிறார். கபிலனாக ஆர்யா, வேம்புலியாக ஜான் கொக்கென், டான்ஸிங் ரோஸாக ஷ்பீர், கலையரசன் உள்ளிட்டவர்கள் பாக்ஸர்களாக வேடம் ஏற்றிருக்கின்றனர். ஒவ்வொருவரும் தங்களது கதாபாத்திரங்களுக்குள் முழுமையாக தங்களை அர்ப்பணித்திருப்பதால அந்தந்த பாத்திரமாக வாழ்கின்றனர்.
ஆரம்பம் முதல் கால் பகுதி படம் வரை ஆர்யா ஒரு பார்வையாளராகவே வருகிறார். இவர் எப்போது சட்டையை கழற்றிவிட்டு குத்துச்சண்டை மேடையில் குதிக்கப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு காட்சி நகர நகர அதிகரிக்கிறது.
அம்மாவின் அதட்டலுக்கு பயந்து குத்து சண்டை வீரராக ஆவதற்கு தயங்கும் ஆர்யா ஒரு கட்டத்தில் பசுபதியை எதிர் அணியினர் அவமானப்படுத்துவதை கண்டு பாக்ஸராக களம் இறங்க முடிவு செய்ததும் ஆர்வம் தொற்றிக்கொள்கிறது.
முதலில் டான்ஸிங் ரோஸிடம் மோது, அதில் ஜெயித்தால் வேம்புலியிடம் மோதலாம் என ஆர்யாவுக்கு ஜி.என்.குமார் சவால் விட்டதும் இரண்டே ரவுண்டில் டேன் சிங்ரோஸை வீழ்த்துகிறேன் என ஆர்யா சொன்னதும் அந்த மோதல் எப்போது என்ற எதிர்பார்ப்பு எகிறுகிறது.
காமெடியன்போல் தோற்றத்தலிருக்கும் டான்ஸிங் ரோஸ் ஷமீர் குத்து சண்டை மேடைக்கு வந்ததும் அந்தர் பல்டிகள் அடித்தும், நடனமாடியபடி மோதியும் அசத்துகிறார். அவரை நெருங்கும்போதெல்லாம் இரண்டே ரவுண்டுதான் நீ காலி என ஆர்யா எச்சரிப்பதும் சொன்னபடி அவரை அடித்து சாய்ப்பதும் அசத்தல்.

வேம்புலியாக வரும் ஜான் கொக்கென்னுடன் ஆர்யா மோதும் குத்து சண்டை காட்சியில் அனல் வீசுகிறது. ஆனால் பாதியிலேயே ஆட்டத்தை கலவரம் செய்துமுடித்துக்கொண்டு வேம்புலி ஓடியதும் காட்சியில் சுணக்கம் ஏற்படுகிறது அதன்பிறகு அரசியல் மாற்றம், எமர்ஜன்சி, திமுக ஆட்சி கலைப்பு, கைது என்று காட்சிகள் திசை மாறிச் செல்கின்றன. ஆர்யாவும் அடியாள்போல் சாராய தொழிலுக்கு உடந்தையாக இருக்கிறார். கட்டுமஸ்த்தான உடம்பை இழந்து தொந்தியும் தொப்பையுமாக மாறி ஆளே அடையாளம் தெரியாமல் மாறிவிடுகிறார்.
பாதியில் முடிந்த சண்டை மீண்டும் எப்போது வரும் என்ற ஏக்கம் கிளைமாக்ஸ் நெருங்க நெருங்க அதிகரிக்கிறது. இழந்த உடம்பை மீட்டு மீண்டும் பாக்ஸராக மாறும் ஆர்யா வேம்புலியை எதிர்கொள்ளும்போது என்ன நடக்குமோ என்ற பயம்கலந்த உணர்வு ரசிகர்களை இருக்கையின் நுனிக்கு வரவழைக்கிறது.
ரங்கன் வாத்தியராக வரும் பசுபதி நடிப்பில் கெத்து காட்டுகிறார். அதேபோல் இடியாப்ப அணி மாஸ்டர் ஜி.என்.குமாரும் தன் பங்கை நிறைவு செய்கிறார். ஆங்கிலோ இண்டியனாக வரும் ஜான் விஜய் தமிழ், ஆங்கிலம் கலந்து பேசியும் எம் ஆர் ராதா ஸ்டைலில் பஞ்ச் வசனங்கள் பேசியும் கவர்கிறார். ஆர்யாவின் அம்மாவாக வரும் அனுபாமாவுக்கு இது புதுவித அனுபவத்தை தரும் வேடம் என்பதில் சந்தேகமில்லை.
நேரடியாக கட்சிகளின் பெயர்களை படத்தில் பயன்படுத்தி இருப்பது ஒடிடியில் படம் வெளியாகும் நிலையிலேயே சர்ச்சை ஏற்படுத்திய நிலையில் தியேட்டரில் வெளியாகி இருந்தால் என்னவாகி இருக்கும் என்பதை கணிக்க முடியவில்லை.
எமர்ஜன்சி காலம், கலைஞர் கருணாந்தி, மக்கள் திலகம் எம் ஜி ஆர் ஆகியோரின் படங்களையும் இந்திராகாந்தியின் படத்தையும் காட்டி காட்சிகளில் எந்த வில்லங்கமும் இல்லாமல் பக்குவமாக படமாக்கி சுவரஸ்யமாக்கி இருக்கிறார் இயக்குனர் பா.ரஞ்சித்.
சந்தோஷ் நாராயாண்ன் இசை, அன்பறிவு சண்டை காட்சிகள் மற்றும் அரங்க அமைப்பாளரின் கைவண்ணம் கூடுதல் பலம் சேர்க்கிறது.
சார்பட்டா பரம்பரை- அரசியல் நெடியுடன் ஒரு குத்தச்சண்டை களம்.
