Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

இந்திய வர்த்தக, தொழில்.கூட்டமைப்பு தெற்கு தலைவர் கமல்ஹாசன்

இந்திய நடிகர் கமல்ஹாசன், இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை கூட்டமைப்பின் (FICCI) ஊடகம் மற்றும் பொழுதுபோக்குக் குழுவின் தெற்கு மண்டலத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னையில் நடைபெற்ற FICCI-யின் ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு வணிக மாநாடு தெற்கு இணைப்பு 2025-ல் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.

தென்னிந்திய ஊடகம் மற்றும் பொழுதுபோக்குத் துறையில், உள்ளடக்கம், பார்வையாளர்கள் என்ற இரு பெரும் சக்திகளே பிரதானமாக இருக்கின்றன. நாம் டிஜிட்டல் யுகத்தின் முதல் கட்டத்திற்குள் நுழையும் வேளை இது. இப்போது நம் நாட்டின் செழுமையான பன்முகத்தன்மையைப் பிரதிபலிக்கும் துணிச்சலான, படைப்பாற்றல் மிக்க கதைசொல்லல் மூலம் உள்ளடக்கத்துக்கும் பார்வையாளர்களுக்கும் திருப்தி தரவேண்டும். அது நம் தலையாய கடமை. மாறிக்கொண்டே இருக்கும் சூழலில், நம் கதையாடல் ஆற்றலை முழுமையாகப் பயன்படுத்துவதன் மூலம்தான் நமது தொழில்துறை செழித்திருக்கும் என்பதை உறுதி செய்ய முடியும்.

நீண்ட காலமாக நமது தொழிலைப் பிரித்து வைத்திருக்கும் மொழி, புவியியல் ஆகிய எல்லைகளைத் தகர்த்தெறிந்து, ஒட்டுமொத்த 140 கோடி பார்வையாளர்களையும் இணைக்கும் சக்தியாக இந்திய ஊடகம் மற்றும் பொழுதுபோக்குத்துறை எதிர்காலத்தில் உருவெடுக்கும் என்று நான் நம்புகிறேன். மொழி எல்லைகளைக் கடந்து நிற்கும் பார்வையாளர்கள் இருந்தால், நமது வளமான கலாச்சாரப் பாரம்பரியத்தை உலகுக்குப் பறைசாற்றும் வகையில், மிகப் பிரமாண்டமான பட்ஜெட்டில் பெரிய, தரமான படைப்புகளை உருவாக்க முடியும்.

நாம் போற்றி வளர்க்கும் படைப்பாளர் பொருளாதாரம், சமூகத்தை வடிவமைத்து உலகையே ஆட்கொள்ளும் வல்லமை உடையது. இந்த மகத்தான ஆற்றலை உண்மையாக்க, அரசாங்கத்தின் முழுமையான ஆதரவு இன்றியமையாதது. அது ஒழுங்குமுறைச் சீர்திருத்தங்கள் வாயிலாகவோ, எளிமையான வணிகச் செயல்பாடுகள், கடன் வசதி அளிப்பது அல்லது வளர்ந்து வரும் படைப்பாளிகள், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் கலைஞர்களுக்கான பயிற்சி அளிப்பதன் மூலமாகவோ அமையலாம். உணர்வுப்பூர்வமான ஆழம் நிறைந்த படைப்பாற்றல் மிக்க கதைகளுக்கும், மனதைக் கொள்ளை கொள்ளும் நிகழ்ச்சிகளுக்கும் என்றென்றும் அதிகத் தேவையிருக்கும்.

இந்தியாவின் தொழில்நுட்ப பலங்களான அனிமேஷன் மற்றும் விஷுவல் எஃபெக்ட்ஸ் (VFX) போன்றவை படைப்பாக்க உருவாக்கத்தில் உலகளாவிய உற்பத்தி மையமாக நம்மை நிலைநிறுத்துகிறது. அறிவுசார் சொத்துக்களில் முதலீடு செய்து, திறமையானவர்களை வளர்ப்பதன் மூலம் உலகளாவிய படைப்பு உருவாக்கத்தில் நாம் முன்னணியில் திகழ முடியும். அனைத்து பிராந்தியங்கள், மொழிகள் மற்றும் கலாச்சாரங்களுக்கிடையில் கூட்டிணைப்பை ஏற்படுத்துவது, அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் அனைவருக்கும் பிரதிநிதித்துவம் தரும் ஒரு தொழில்துறையை உருவாக்குவதற்கு முக்கியப் பங்காற்றும். FICCI மற்றும் EY-யின் இந்த அறிக்கை போன்ற முன்னெடுப்புகள் தகவல்தொடர்பு இடைவெளிகளைக் குறைத்து, முன்னேற்றத்திற்கான உறுதியான அடித்தளத்தை அமைக்கும்.

இந்த அறிக்கையின் 25ஆவது ஆண்டுவிழாவைக் கொண்டாடும் இந்த வேளையில், ஒரு துணிச்சலான எதிர்காலத்தை இலக்காகக் கொண்டு பயணிக்க அனைவரையும் நான் அழைக்கிறேன். இது இந்தியாவின் ஊடகம் மற்றும் பொழுதுபோக்குத் துறையை 28 பில்லியன் டாலர் மதிப்பிலிருந்து 100 பில்லியன் டாலர் மதிப்பிலான தொழில்துறையாக உயர்த்துவதோடு, ஒரு பில்லியன் இந்தியர்களின் எண்ணங்களை எதிரொலிப்பதுடன், உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களைக் கவர்ந்திழுக்கும் படைப்புகளை உருவாக்கும்.

Related posts

பிரபாஸ் ஜோடியாக சலார் படத்தில் நடிக்கிறார் ஸ்ருதிஹாசன்

Jai Chandran

Team #LIGER wrapped up the entire shoot

Jai Chandran

‘கபடதாரி’ படப்பிடிப்பில் சிபிராஜ் மற்றும் படக்குழுவினருடன் இணைந்தார் நந்திதா.

CCCinema

Leave a Comment

Share via
Send this to a friend