படம்: திரு மாணிக்கம்
நடிப்பு: சமுத்திரக்கனி, அனன்யா, பாரதிராஜா, வடிவுக்கரசி, தம்பி ராமையா, இளவரசு, சாம்ஸ், ஸ்ரீமன் கருணாகரன்
தயாரிப்பு: ஜி பி ஆர் கே சினிமாஸ்
இசை: விஷால் சந்திரசேகர்
ஒளிப்பதி: எம் சுகுமார்
இயக்கம்: நந்தா பெரியசாமி
பி ஆர் ஓ: சதீஷ் (AIM)
நேர்மையாக நடக்கும் ஒரு மனிதனின் கதையாக உருவாகி இருக்கிறது திரு மாணிக்கம்.
கேரளாவில் லாட்டரி சீட்டு விற்கிறார் சமுத்திரக்கனி. அவரிடம் லாட்டரி சீட்டு வாங்க வரும் பாரதிராஜா மூன்று டிக்கெட் தேர்வு செய்து அதற்கு பணம் தர எண்ணும்போது பணம் தொலைந்து போனதை கண்டு அதிர்ச்சி அடைகிறார். மறுநாள் வந்து பணத்தை கொடுத்து விட்டு சீட்டுகளை வாங்கிக் கொள்வதாக கூறிவிட்டு செல்கிறார். அவர் வாங்கிய டிக்கெட்டுக்கு ஒன்றரை கோடி பம்பர் பரிசு விழுகிறது. ஏற்கனவே சமுத்திரகனி. குடும்பம் ஏழ்மையாக இருக்கும் நிலையில் தன்னிடம் இருக்கும் டிக்கெட்டுக்கு ஒன்றரை கோடி விழுந்தாலும் அந்த பணம் பாரதிராஜாவுக்கு தான் சென்று சேர வேண்டும் என எண்ணி அவரிடம் தர செல்கிறார். அதற்குள் விஷயம் தெரிந்து குடும்பம் ஒரு பக்கம், போலீஸ் ஒரு பக்கம் என்று ஆளாளுக்கு சமுத்திரக்கனியை மடக்கி பிடித்து பணத்தை அபகரிக்க முயல்கிறார்கள். இறுதியில் நடப்பது என்ன என்பதற்கு கிளைமாக்ஸ் உருக்கமான பதில் அளிக்கிறது.
தமிழ்நாட்டில் லாட்டரி சீட்டுகள் விற்பனை தடை செய்யப்பட்டிருப்பதால் இப்படத்தின் கதைக்களம் கேரளாவில் அமைக்கப்பட்டிருக்கிறது கேரளாவில் லாட்டரி சீட்டு விற்க தடை கிடையாது
படம் தொடக்கம் முதல் இறுதி வரை எதார்த்தமான பாணியிலேயே அமைக்கப்பட்டு இருப்பதால் நடுத்தர ஏழைக் குடும்ப மனிதர்களின் உணர்வோடு ஒத்துப் போகிறது..
பாரதிராஜா தன் கடைக்கு வந்து லாட்டரி டிக்கெட் தேர்வு செய்துவிட்டு பணம் இல்லாமல் திண்டாடும்போது “அதற்கென்னய்யா சீட்டுகளை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் நாளை வந்து பணம் கொடுங்கள் வாங்கிக் கொள்கிறேன் ” என பாரதிராஜா மீதான நம்பிக்கையை சமுத்திரக்கனி வெளிப்படுத்துவதும், “சீட்டுகளை நீயே வைத்துக்கொள் நாளை பணம் கொடுத்து விட்டு வாங்கிக் கொள்கிறேன்” என்று பாரதிராஜா ஏழ்மையிலும் பிறர் பொருளுக்கு ஆசைப்படாத உணர்வையும் வெளிப்படுத்தும் காட்சிகள் நெகிழ வைக்கிறது.
பாரதிராஜா வாங்கிய டிக்கெட்டுக்கு ஒன்றரை கோடி பரிசு விழுந்திருக்கிறது என்பதை வீட்டில் உள்ள தன் மனைவியிடம் சமுத்திரக்கனி கூறியதும் அந்த டிக்கெட்டை வீட்டிற்கு கொண்டு வரும்படி அவரது மனைவி வற்புறுத்த தொடங்குவதுமுதல் காட்சியில் அடுத்தடுத்த திருப்பங்கள் விறுவிறுப்பை கூட்டுகிறது
ஏழ்மையிலும் நேர்மை என்ற கதாபாத்திரத்திற்கு சமுத்திரக்கனி சரி பொருத்தமான தேர்வு. பெண் வீட்டார்க்கு சொன்னபடி தங்க செயின் போடவில்லை என்பதற்காக மகளின் வாழ்வு பறிபோய் விடுவோமோ என்று பாரதிராஜா பய உணர்வுடன் பதறுவது நடிப்பின் முதிர்ச்சி..
நாடோடிகள் அனன்யா நீண்ட நாட்களுக்கு பிறகு இப்படத்தில் நடித்திருக்கிறார். இன்னும் முகத்தில் இளமை இருந்தாலும் இரண்டு குழந்தைகளுக்கு தாயாக நடித்திருப்பது அவருக்கு பட வாய்ப்பு கைவசம் இல்லாத காரணத்தாலோ என்று எண்ண வைக்கிறது. ஆனாலும் ஒரு பொறுப்பான குடும்ப தலைவியாக அழகான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
முஸ்லிம் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நாசர் கதாபாத்திரம் படத்திற்கு அச்சாணி.
லண்டன் ரிட்டரன் என்று சொல்லிக்கொண்டு வரும் தம்பி ராமையா எம் ஆர் ராதா பாணியில் பேசுவதாக எண்ணி ஓவர் ஆக்டிங் செய்து பாடாய் படுத்தியிருக்கிறார்
படத்தில் இன்னும் நிறைய பிரபலங்கள் நடித்திருக்கிறார்கள்.
ஜி பி ஆர் கே சினிமாஸ் படத்தை தயாரித்து இருக்கிறது.
விஷால் சந்திரசேகர் பின்னணி இசை வேகம் கூட்டுகிறது. எம் சுகுமார் ஒளிப்பதிவு தரம்.
ஏற்கனவே லாட்டரி சீட்டு மையமாக வைத்து வெற்றி நடிப்பில் பம்பர் என்ற படம் திரைக்கு வந்தது. அதே கருவை அதே துரத்தல் காட்சிகளை இயக்குனர் நந்தா பெரியசாமி கவனத்தில் கொள்ளாமல் திரு மாணிக்கம் படத்தை இயக்கிவிட்டாரோ என்று தோன்றுகிறது.
திரு மாணிக்கம் – புதிதல்ல.

