படம்: மழையில் நனைகிறேன்
நடிப்பு: அன்சன் பால், ரெபா ஜான், மேத்யூ வர்கீஸ். அனுபமா குமார், கிஷோர் ராஜ், ராஜ்குமார், வெற்றிவேல் ராஜா
தயாரிப்பு: ராஜ் ஸ்ரீ வென்சர்ஸ்
இசை: விஷ்ணு பிரசாத்
ஒளிப்பதிவு: ஜே கல்யாண்
இயக்கம்: டி சுரேஷ்குமார்
பி ஆர் ஓ: சுரேஷ் சந்திரா
ஜீவா செபாஸ்டின்(அன்சன் பால்) பணக்கார வீட்டு பிள்ளையாக இருந்தாலும் எந்த வேலையும் செய்யாமல் வெட்டியாக சுற்றுகிறார். இவருக்கு பிராமண பெண் ஐஸ்வர்யா (ரெபா ஜான்) மீது காதல் பிறக்கிறது. திடீரென்று இருவரும் விபத்தில் சிக்குகின்றனர். பின்னர் இவர்கள் காதலுக்கு குடும்பத்தில் பிரச்சனை. வர பதிவு திருமணம் செய்து கொள்கிறார்கள். வீட்டை விட்டு துரத்தப்படும் இருவரும் தங்கள் வாழ்வில் எப்படி முன்னேறுகிறார்கள், இவர்கள் காதல் திருமணத்தில் ஏற்பட்ட திடீர் திருப்பங்கள் என்ன என்பதற்கு கிளைமாக்ஸ் பதில் அளிக்கிறது.
புதுமுக நடிகர் அன்சன் பால் தொடக்க காட்சிகளில் சற்று கடுப்பேற்றும் விதத்தில் நடிக்கிறார் காட்சிகள் செல்லச் செல்ல கதாபாத்திரத்தில் செட்டாகி விடுகிறார்.
ரக்கடு பாய் லுக்கில் வரும் அன் சன் பின்னர் சாஃப்ட் லுக்கிற்கு மாறுகிறார். ஆனால் வீட்டை விட்டு மனைவியுடன் வெளியே வரும் அன்சன் நாட்டாமை பட பாணியில் ஒரே பாடலில் வசதி வாய்ப்பு வந்து விடுவதெல்லாம் ஓல்ட் ஸ்டைல்.
ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ரெபா ஜான் அழகு பதுமையாக வருகிறார். நடிப்பில் ஓவர் ஆக்டிங் இல்லாமல் இயல்பாக நடித்து கவர்கிறார். தொடக்கத்தில் அவரை எவ்வளவு அழகாக காட்டினார்களோ கிளைமாக்ஸ் அவ்வளவு பரிதாபமாக காட்டுவது உறுத்துகிறது.
இளவட்ட காதல் கதையாக தொடங்கி எதிர்பார்க்காத டிவிஸ்ட்கள் வைக்கப்பட்டிருக்கிறது. ஏதாவது ஒரு டிவிஸ்ட்டை ஓபன் செய்தாலும் கதையும் ஓபன் ஆகிவிடும்.
ஒரு டிக்கெட் வாங்கினால் இரண்டு படம் என்று முன்பெல்லாம் டூரிங் தியேட்டரில் காட்டுவார்கள் அந்த பாணியில் மழையில் நனைகிறேன் படத்துக்கு ஒரு டிக்கெட் வாங்கினால் நான்கு படத்தை பார்த்த உணர்வு ஏற்படுகிறது. கதையை பொறுத்தவரை நாட்டாமை பாணியில் ஒரே பாட்டில் பணக்காரன்.ஆவது, சிம்பு நடித்த அச்சம் என்பது மடமையடா படத்தின் இன்டர்வல் காட்சி, வெண்ணிலா கபடி குழு முக்கிய காட்சி, ஏன் இன்னும் சொல்லப்போனால் அலைகள் ஓய்வதில்லை ஸ்டோரி லைன் என எல்லா படங்களிலிருந்தும் கலவையாக கலந்தடித்த காட்சிகள் படத்தை இட்டு நிரப்பி இருக்கின்றன.
ராஜ ஸ்ரீ வென்சர்ஸ் படத்தை தயாரித்திருக்கிறது.
காதல் கதையாக தொடங்கி திரைக்கதையில் குழம்பி எப்படி முடிப்பது என்று தெரியாமல் திணறி இயக்குனர் டி சுரேஷ்கமார் திக்குமுக்காடியிருக்கிறார்
ஜே கல்யாண் ஒளிப்பதிவு பளிச்சிடுகிறது. விஷ்ணு பிரசாத் இசை நலம்.
கதாநாயகியை ஐயங்கார் வீட்டு பெண்ணாக காட்டிவிட்டு அந்த வழக்கில் வசனங்களை பேச வைக்காமல் சாதாரணமாக பேசி இருப்பது கதையோடு ஒட்ட.வில்லை. ஒரு இடத்தில் பூணூல் காட்டுகிறார்கள், இன்னொரு வசனத்தில் சமத்து என்ற வசனத்தை சொல்கிறார்கள்.
மமழையில் நனைகிறேன் – மனதை நனைக்கவில்லை..

