Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

கானா பாடலுக்கு கைகொடுக்கும் ஹிப் ஹாப் ஆதியின் மீசைய முறுக்கு 2 : பிரஸ் மீட்டில் ஆதி பேச்சு..

‘மீசைய முறுக்கு 2’ இசைக் கலைஞர்களின் வாழ்க்கை, போராட்டம், கனவுகளைப் பேசும் உலகளாவிய கதை – ஹிப்ஹாப் தமிழா ஆதி.

செப்டம்பர் 25 முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது ஹிப்ஹாப் தமிழா ஆதியின் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மீசைய முறுக்கு 2’

ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வரும் ‘ஆரா 10/10’, ‘பப்பாளி பழமே, ‘கோயிந்தம்மா’, ‘அடி போடி’, ‘கலைவானியே’ பாடல்கள்.

ஹிப்ஹாப் தமிழா ஆதி எழுதி, இயக்கி, இசையமைத்து உருவாக்கியுள்ள மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படமான ‘மீசைய முறுக்க 2′ திரைப்படம் செப்டம்பர் 25-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இளமைத் துடிப்பு, இசையின் கொண்டாட்டம், வண்ணமயமான கதாபாத்திரங்கள் மற்றும் ஆழமான உணர்வுகளை உள்ளடக்கிய இப்படம் ரசிகர்கள் மத்தியில் ஏற்கெனவே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

படத்தின் உலகளாவிய திரையரங்க வெளியீட்டை முன்னிட்டு, சென்னையில் ‘மீசைய முறுக்கு 2’ படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து படத்தின் பிரமாண்டமான புரமோஷன் பயணம் தொடங்கவுள்ளது.

நிகழ்ச்சியில் பேசிய படத்தின் எழுத்தாளர், இயக்குநர் மற்றும் நாயகன் ஹிப்ஹாப் தமிழா ஆதி கூறியதாவது:

“இரண்டு வருடங்கள் உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிறகு, மீண்டும் ஒரு திரைப்படத்தின் மூலம் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். ஒரு புதிய பயணத்தைத் தொடங்குவதற்கு முன்பாக, பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மிகக் குறுகிய காலத்தில் இந்த பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெறுவதற்கு காரணமாக இருந்த அனைவருக்கும் நன்றி. குறிப்பாக, நமது தயாரிப்பாளர் சுந்தர் சி சார் அவர்களுக்கு இது மிகவும் முக்கியமான ஒரு தருணம் என்பதால், இந்த நிகழ்வு எனக்கு கூடுதல் அர்த்தம் கொண்டதாக இருக்கிறது.”

‘மீசைய முறுக்கு’வுக்கும் ‘மீசைய முறுக்கு 2’வுக்கும் உள்ள வித்தியாசம்!

முதல் பாகத்திலிருந்து இரண்டாம் பாகம் எவ்வாறு மாறுபடுகிறது என்பது குறித்து பேசிய ஆதி கூறியதாவது:

“‘மீசைய முறுக்கு’ என்னுடைய வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட ஒரு பயோபிக். ஆனால், ‘மீசைய முறுக்கு 2’ அதைவிட மிகவும் பரந்த கதைக்களத்தைக் கொண்டது. இது இசை, இசைக் கலைஞர்கள் மற்றும் அவர்களது வாழ்க்கையைப் பற்றிய உலகளாவிய கதை. இசையைத் தங்களது வாழ்க்கைப் பாதையாகத் தேர்ந்தெடுக்கும் மனிதர்களின் கனவுகள், போராட்டங்கள், பயணங்கள் மற்றும் உணர்வுகளை இப்படம் பேசுகிறது.”

இசையில் ஒலிக்கும் கானா கலைஞர்களின் வாழ்க்கை!

‘மீசைய முறுக்கு 2’ படத்தின் முக்கியமான அம்சங்களில் ஒன்றாக கானா கலைஞர்களின் உலகமும் அவர்களது வாழ்க்கையும் இடம்பெற்றுள்ளது. தங்களது வாழ்வில் எதிர்கொள்ளும் அனுபவங்களையும் போராட்டங்களையும் பாடல்களின் வழியாக வெளிப்படுத்தும் கலைஞர்களின் உலகத்தை இப்படம் பதிவு செய்கிறது.

இதுகுறித்து ஆதி மேலும் கூறியதாவது:

“குறிப்பாக, கானா கலைஞர்கள் தங்களது போராட்டங்கள், வாழ்க்கை அனுபவங்கள் மற்றும் பயணங்களை பாடல்களாக வெளிப்படுத்தி, தங்களது கலையின் மூலம் வாழ்க்கையை நடத்தி வருகிறார்கள். அவர்களது கதைகளும், அவர்கள் வாழும் உலகமும் இந்தப் படத்தின் முக்கியமான பகுதியாக இருக்கிறது. அவர்களது குரலையும் வாழ்க்கையையும் பதிவு செய்ய வேண்டும் என்ற எண்ணம் இந்தப் படத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.”

மறைந்த விவேக் சாரின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது!”

‘மீசைய முறுக்கு’ முதல் பாகத்தில் தனது தந்தை கதாபாத்திரத்தில் நடித்த மறைந்த நடிகர் விவேக் அவர்களின் நினைவையும், இரண்டாம் பாகத்தில் இடம்பெறும் தந்தை கதாபாத்திரத்தையும் குறித்து ஆதி கூறியதாவது:

“முதல் பாகத்தில் எனது தந்தை கதாபாத்திரத்தில் நடித்த மறைந்த விவேக் சாரின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. ஆனால், ‘மீசைய முறுக்கு 2’ மூன்று வெவ்வேறு காலகட்டங்களில் பயணிக்கும் கதை. இதில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தந்தை கதாபாத்திரம் ஒன்று உள்ளது. அந்தக் கதாபாத்திரத்திற்கு பாபா பாஸ்கர் மாஸ்டர்தான் சரியான தேர்வு என்று நான் நினைத்தேன்.”

பாபா பாஸ்கர் மாஸ்டர் இந்தக் கதாபாத்திரத்தை ஏற்றுக்கொண்ட விதம் குறித்தும் ஆதி பகிர்ந்துகொண்டார்:

“ஆரம்பத்தில் இந்தக் கதாபாத்திரத்தை ஏற்றுக்கொள்வதில் அவருக்கு சற்று தயக்கம் இருந்தது. ஆனால், என் மீது நம்பிக்கை வைத்து அந்தக் கதாபாத்திரத்தை ஏற்றுக்கொண்டார். மிகவும் சிறப்பாக நடித்திருக்கிறார். இந்தப் படத்திற்குப் பிறகு தமிழ் சினிமாவில் ஒரு நடிகராக அவருக்கு மிக முக்கியமான இடம் கிடைக்கும் என்று நான் உண்மையாக நம்புகிறேன்.”

பஞ்சாபிலிருந்து சென்னைக்கு வரும் ‘லைலா சிங்’!

‘மீசைய முறுக்கு 2’ திரைப்படத்தின் கதாநாயகியாக கெட்டிகா சர்மா நடித்துள்ளார். இப்படத்தில் அவர் ‘லைலா சிங்’ என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பஞ்சாபிலிருந்து சென்னைக்கு வரும் நடனக் கலைஞராக அவர் தோன்றுகிறார்.

இசை, நடனம், லட்சியம் மற்றும் காதல் என வெவ்வேறு உலகங்களை ஒன்றிணைக்கும் கதைக்களமாக ‘மீசைய முறுக்கு 2’ உருவாகியுள்ளது. இளமைத் துடிப்புடன் கூடிய பொழுதுபோக்கு அம்சங்களோடு, இசைக் கலைஞர்களின் உணர்வுகள் மற்றும் வாழ்க்கைப் போராட்டங்களையும் இப்படம் பதிவு செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

ரசிகர்களைச் சந்திக்க வருகிறது ‘மீசைய முறுக்கு 2’ படக்குழு!

செப்டம்பர் 25-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள ‘மீசைய முறுக்கு 2’ படத்திற்கான புரமோஷன் பயணம் தொடங்கவுள்ளது. கோயம்புத்தூர், மதுரை மற்றும் சென்னை உள்ளிட்ட நகரங்களில் நடைபெறவுள்ள பல்வேறு நிகழ்ச்சிகளின் மூலம் படக்குழுவினர் ரசிகர்களை நேரில் சந்திக்க உள்ளனர்.

தனது திரையுலகப் பயணத்தில் பத்திரிகை மற்றும் ஊடகங்களின் ஆதரவுக்கு நன்றி தெரிவித்த ஆதி கூறியதாவது: “கனவுகளை மட்டுமே கையில் வைத்துக்கொண்டு இந்தத் துறைக்குள் வந்தவன் நான். இந்தப் பயணம் முழுவதும் எனக்கு ஆதரவாக இருந்த, என்னைக் கேள்வி கேட்ட, விமர்சித்த, அதே நேரத்தில் ஊக்கப்படுத்திய அனைத்து பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். என்னுடைய பயணத்தில் நீங்கள் அனைவரும் முக்கியமான ஒரு பகுதியாக இருந்திருக்கிறீர்கள்.”

“இந்தப் படத்தை உருவாக்குவதற்கும், மக்களிடம் கொண்டு செல்வதற்கும் உறுதுணையாக இருந்த சுந்தர் சி சார் மற்றும் குஷ்பு மேடம் ஆகியோருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களின் ஆதரவும் வழிகாட்டுதலும் இந்தப் படத்தின் உருவாக்கத்தில் மிகப்பெரிய பங்காற்றியுள்ளது.”

இசையை மையமாகக் கொண்ட கதை, வண்ணமயமான கதாபாத்திரங்கள், காதல், நடனம், இளமை, போராட்டம் மற்றும் கனவுகள் என பல்வேறு உணர்வுகளை ஒருங்கிணைத்து உருவாகியுள்ள ‘மீசைய முறுக்கு 2’, இசைக் கலைஞர்களின் வாழ்க்கையையும் அவர்களின் கனவுகளையும் எல்லைகளைக் கடந்து உலக ரசிகர்களிடம் கொண்டு செல்ல தயாராகியுள்ளது.

ஹிப்ஹாப் தமிழா ஆதியின் ‘மீசைய முறுக்கு 2’ – செப்டம்பர் 25 முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில்!

Related posts

3வது முறையாக இணையும் “காவல்துறை உங்கள் நண்பன்” பட புகழ், ஆர் டி எம், சுரேஷ் ரவி கூட்டணி !

Jai Chandran

கதையின் நாயகனாக காத்திருந்தேன் – சூரி

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend