நடிகர் ஹிப் ஹாப் ஆதி தனது புதிய படங்கள், உலக அளவிலான இசை நிகழ்ச்சி பயணம் மற்றும் தமிழ் தொல்லியல் ஆராய்ச்சி ஆவணப்பட தயாரிப்பு பற்றி பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:
இந்த வருடத்தில் நான் படங்கள் எதுவும் நடிக்கவில்லை. அதற்கு காரணம் உலகம் முழுவதும் தமிழர்கள் வாழும் நாடுகள் எல்லாவற்றிலும் என்னுடைய இசை நிகழ்ச்சி நடத்திக் கொண்டிருக்கிறேன். பெரும்பாலான நாடுகளில் நடந்து முடிந்திருக்கிறது. அதற்கு நல்ல வரவேற்பும் கிடைத்தது. அடுத்த ஆறு மாதங்களுக்கு தொடர்ச்சியாக வெளிநாடு சுற்றுலா சென்று இசை நிகழ்ச்சிகள் நடத்த இருக்கிறேன். இதனால் என்னால் இந்த வருடம் எந்த படத்திலும் நடிக்க முடியாத சூழல் அமைந்துவிட்டது. ஆனாலும் மூக்குத்தி அம்மன் இரண்டாம் பாகம் போன்ற ஒரு சில படங்களுக்கு இசை அமைக்க மட்டும் ஒப்புக் கொண்டிருக்கிறேன்.
ஜோ படத்தை இயக்கிய ஹரிஹரன் ராம் இயக்கம் புதிய படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறேன் அதற்கான சூட்டிங் என்னுடைய இசை உலக சுற்றுப்பயணம் முடியும் தருவாயில் மூன்று மாதத்தில் இந்த படத்தை நடித்து முடிக்க திட்டமிட்டு இருக்கிறேன். இது தவிர இன்னொரு படத்திலும் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளேன்.
திரை உலகத்துக்கு வருவதற்கு முன்பிருந்த எனக்கு ரசிகர்கள் மற்றும் பத்திரிகை யாளர்கள் வரவேற்பும் ஆதரவும் அளித்து வருகிறார்கள்.. திரை உலகுக்கு வந்த பிறகு ஆதரித்ததுடன் தொடர்ந்து ஆதரித்தும் வருகிறார்கள். இசை, நடிப்பு பணி தவிர தயாரிப்பு பணியிலும் நான் ஈடுபட்டதற்கும் ஆதரவளித்தார்கள். அதற்காக நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
ஹிப் ஹாப் தமிழாவில் திரைத்துறை தவிர சமூகம் சார்ந்த பணிகளையும் மேற்கொண்டு செய்து வருகிறோம். ஹிப் ஹாப் தமிழா ரசிர்கள் மன்றத்தை அமைப்பு ரீதியாக மாற்ற முடிவு செய்து ஹிப் ஹாப் தமிழா பவுண்டேஷன் உருவாக்கப்பட்ட
டிருக்கிறது. அதன் மூலம் கல்லூரியில் படிக்கும் ஏழை மாணவ மாணவிகள், மற்றும் தகுதியானவர்களை தேர்வு செய்து அவர்களது படிப்புக்கு உதவ முடிவு செய்யப்பட்டிருக்கிறது. அதற்கான நடைமுறைகள் தொடங்கி நடந்து வருகிறது. சத்தியபாமா கல்லூரியில் இதுபற்றி அறிவித்திருக்கிறோம். இதைத்தொடர்ந்து ஒவ்வொரு மாவட்டத்திலும் தகுதியான மாணவ மாணவிகளை தேர்வு செய்து அவர்களுக்கு உதவ முடிவு செய்யப்பட்டிருக்கிறது.
ஏனென்றால் படிப்பு என்பது மிகவும் அத்தியாவசியமான விஷயமாகும். வாழ்க்கைக்கு ஆதாரமாக விளங்குவது படிப்பு. இதை நான் அனுப்பபூர்வமாக உணர்ந்தவன்.
2016 இல் தொடங்கி 2019 வரை நான்கு வருடம் தமிழ் எழுத்துக்கள் எவ்வாறு உருவானது என்பது பற்றிய ஒரு வரலாற்று ஆவணப்படத்தை உருவாக்கினோம். அது எல்லா தரப்பிலும் வரவேற்பு பெற்று தந்தது. இந்த ஆவணப்படம் முடியும் தருவாயில் பொருநை என்ற தமிழ் தொல்லியல் ஆராய்ச்சி ஆவண படம் உருவாக்குவது பற்றி முடிவு செய்து அதற்கான பணிகளை மேற்கொண்டோம். 2021ம் ஆண்டில் தமிழக அரசு சார்பில் தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் தமிழர்களின் தொல்லியல் ஆராய்ச்சியை கண்டறிய பல்வேறு இடங்களை தேர்வு செய்து ஆராய்ச்சிகளை மேற்கொள்ள பணிகள் தொடங்கிய போது அவர்களது அனுமதியுடன் அந்த பணிகளை ஆவண படமாக்க 2021 முதல் படபபிடிப்பை தொடர்கினோம். இந்த ஆராய்ச்சியில் நிச்சயம் பெரிய கண்டுபிடிப்புகள் இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருத்து கூறி வந்தனர். எங்களுக்கும் அந்த நம்பிக்கை இருந்தது. அந்த நம்பிக்கை இந்த ஆராய்ச்சியில் உண்மையானது.
கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு தமிழக முதல்வர் மு. க.ஸ்டாலின் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதில். உலக அளவில் பழமை வாய்ந்த இரும்பு கலாச்சாரம் தொடங்கியது தமிழ் மண்ணில் இருந்து தான் என்ற கண்டுபிடிப்பு நிகழ்த்தப்பட்டது குறித்து அறிவித்தார். இந்த அறிவிப்பு உலகையே தமிழகம் பக்கம் திரும்பி பார்க்க வைத்தது. ஆனால் இதற்கு முன்பு இரும்பு கண்டுபிடிக்கப்பட்டது துருக்கி நாட்டில் உள்ள ஒரு பகுதியில் என்று குறிப்பிடப்பட்டு வந்தது. தற்போது அந்த வரலாறு மாறி இருக்கிறது. இரும்பு கண்டுபிடிக்கப்பட்டது அதாவது பழமையான இரும்பு காலாச்சாரம் தமிழகத்தில் தான் தோன்றியது என்ற வரலாற்று உண்மை வெளியாகி இருப்பது சரித்திர முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
உலகிலேயே தொல்லியல் ஆராய்ச்சி நிகழ்வு ஒன்றை ஆவணப்படுத்துவது இதுவே முதன்முறை. நான்கு வருடமாக நடந்து வந்த இந்த பணியில் எவ்வளவோ மணிக்கணக்கில் படப்பிடிப்புகள் நடத்தப்பட்டுள்ளன. அதில் தேர்வு செய்து இரண்டு மணி 30 நிமிடம் அளவுக்கு ஆவணப்படமாக சுருக்கி கொண்டுவர முயற்சி செய்திருக்கிறோம். முற்றிலுமாக இது இரண்டு மாதத்தில் முடிக்கப்பட்டு பிறகு உலக முழுவதும் கொண்டு செல்லும் வகையில் பல்வேறு உலக திரைப்பட விழாக்களில் திரையிட முடிவு செய்திருக்கிறோம். அதன் பிறகு இதனை தமிழக மக்களுக்கு கொண்டு செல்லும் வகையில் என்ன முயற்சி எல்லாம் மேற்கொள்ள முடியுமோ அதை எல்லாம் மேற்கொண்டு தமிழக மக்களுக்கு எப்படி தமிழ் எழுத்துக்கள் வரலாற்று ஆவணப்படம் தமிழியை பொதுவுடமையாக வழங்கினோமோ அதுபோல் பொருநை ஆவணப் படத்தையும் உலகின் பழமையான இரும்பு கலாச்சாரம் என்ற ஆவண படத்தை பொதுவுடமையாக வழங்க தயாராக இருக்கிறோம்.
சினிமா, இசை தவிர இந்த தமிழ் ஆர்வம் உங்களுக்கு எப்படி வந்தது என்று சிலர் கேட்கிறார்கள். இது நாங்கள் திரை உலகுக்கு வருவதற்கு முன்பே மாணவர்களாக இருந்தபோதே உள்ளுக்குள் பொங்கி எழுந்த உணர்வாகும். ரத்தத்தில் ஊறிய இந்த உணர்வு. ஜல்லிக்கட்டு போராட்ட காலத்திலிருந்து எங்களது தமிழ் உணர்வு வெளிப்பட்டு கொண்டுதான் இருக்கிறது. அப்போது நாங்கள் உணர்வுபூர்வமாக அந்த பணிகளை செய்து கொண்டிருந்தோம். இப்போது உணர்வுபூர்வத்துடன் மட்டுமல்லாமல் ஆதாரத்துடன் சொல்ல வேண்டும் என்ற பக்குவத்தையும் பெற்று அதன்படி பணியாற்றி வருகிறோம். டக்கரு டக்கர், தமிழன்டா, ஹிப் ஹாப் அமைப்புகள் மூலம் எங்களது இந்த பணிகள் தொடர்ந்து நடக்கும்.
இவ்வாறு ஹிப் ஹாப் ஆதி கூறினார்.