Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

சட்டசபை தேர்தல் : திரைப்பட இயக்குனர் வி. சி. குகநாதன் பரபரப்பு அறிக்கை

இது கட்சிகளுக்கிடையே நடக்கப் போகும் தேர்தல் அல்ல…

இன்றைய சூழலில் திராவிடத் தமிழர்களின் உண்மையான கழகம் எது என்பதையும்,
நம் மக்கள் எத்தனை சதவீதம் அந்தக் கழகத்தை ஆதரிக்கிறார்கள் என்பதையும் இந்தியத் திருநாட்டிற்கும் உலகத்திற்கும் எடுத்துச் சொல்லப் போகும் தேர்தல்.

234 தொகுதிகளையும் வென்று காட்டி, உண்மையான திராவிடக் கட்சி இதுதான் என்று உலகிற்குக் காட்டவேண்டிய தேர்தல்.

கழகம் என்றால் என்ன,
கட்சி என்றால் என்ன என்று புரியாதவர்கள்
குடும்ப அரசியல் என்று பேசுகிறார்கள்.

பல குடும்பங்கள் இணைந்து உருவாக்கியதே கழகம்.
கழகம் என்பது ஒற்றை மரமே.
அதன் வேர்கள், விழுதுகள், கிளைகள், இலைகள், பூக்கள், காய்கள் அனைத்துமே ஒன்றுக்கு ஒன்று உறவுதான். என்ன ஜாதி, என்ன மதம் என்ற கேள்விக்கே அங்கே இடமில்லை.

புரியாத புண்ணாக்குகள் கழகத்தை கம்பெனி என்கிறார்கள். இரண்டு CEOகளுடன் நடத்தப்படும் கம்பெனி எது என்று மக்களுக்கு நன்றாகவே தெரியும்.

எப்படி ஒரு தலைமுறை தங்கள் உயிர்களை களப்பலி ஆக்கி, அண்ணலின் அகிம்சையைக் கவசமாக்கி இந்திய சுதந்திரத்தைப் பெற்றதோ, அதேபோல்
பெரியார், அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் திராவிட ஆட்சியை உருவாக்கி காத்து வளர்த்தனரே…
அதை முடிவுக்குக் கொண்டுவர முயலும் நேர்விரோத சக்திகளை வேரோடு வெட்டி சாய்க்க வேண்டிய தேர்தல் இது.

இதில் வெற்றி மட்டும் அல்ல நமது குறிக்கோள்.
இந்த மண்ணின் புனிதத்தை, வீரத்தை, விவேகத்தை, சுயமரியாதையை, மாநில சுயாட்சி தத்துவத்தை, ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற வாழ்க்கை நெறியை சிதைத்துவிட எந்த சக்தியாலும் முடியாது என்பதை
தமிழராய் நாம் ஒன்றாய் நின்று உணர்த்த வேண்டிய தேர்தல்.

வறட்டு கௌரவத்திற்காகவோ, ஜாதி மேல் உள்ள மரியாதைக்காகவோ, நமது ஆள் நான்கு சதவீதமோ ஐந்து சதவீதமோ ஓட்டு வாங்கினார் என்று தம்பட்டம் அடிப்பதற்காகவோ ஓட்டுக்களை பிரிப்பது,
இந்தத் தேர்தலில் தமிழினத்தின் தனித்தன்மையை சிதைத்துவிடும்.

நான் ஒரு போராளியாக இருந்திருந்தால், ஆயுதம் ஏந்தி இந்தத் தேர்தலில் சில்லறைத் தலைவர்களை தேர்தலை விட்டு ஒதுக்கி வைத்திருப்பேன்.

இது தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மிகமிக முக்கியமான ஒரு தேர்தல்.
தேர்தலில் வெற்றியல்ல நாம் வேண்டுவது, அது நிர்ணயிக்கப்பட்டு விட்டது.

மற்றைய மாநிலங்கள் எதிர்பார்ப்பது, தமிழ்மாநிலத்தில் தாமரை சார்ந்த கொள்கைகள் ஓரளவாவது ஏற்கப்படுகிறதா என்பதைத்தான்…

சுயமரியாதை, சமூகநீதி, பகுத்தறிவு, மாநில சுயாட்சி, பெண்ணுரிமை, பார்ப்பனியம் நீங்கலான பக்தி மார்க்கம், இருமொழிக் கொள்கை…
இவை சற்றாவது அசைக்கப்பட்டு விட்டதா என்பதை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் எதிரிகள்.
அதைத் தெரிந்து கொள்வதுதான் அவர்களுக்கு இந்தத் தேர்தலில் அவசியமாகிறது.

ஆட்சிக் கட்டிலில் அடிமை சாசனம் எழுதிக் கொடுத்துவிட்டு, ஒட்டிக்கொண்டு இருக்கும் உத்தமர்கள் கூட்டணி ஒன்று
பவனி வந்துகொண்டு இருக்கிறது.
அந்தக் கூட்டணி இரண்டு இடங்களிலோ நான்கு இடங்களிலோ வெற்றி பெற்றாலே, நாம் சற்று இறங்கிவிட்டோம் என்றேதான் பொருள்படும்.

கட்சி இறங்கியது, கழகம் இறங்கியது எனப் பொருள்படாது.
தமிழக மக்கள் தடுமாறுகிறார்களா என்ற கேள்விக்கு அது இடம் தந்துவிடும்.

அதற்கு இடம் கொடுக்காமல் இந்த தேர்தலில் எது தேவையானது என்பதை உணர்ந்து மக்கள் ஒரே பக்கம் வாக்கு செலுத்தி தமிழர்களைத் தலைநிமிர வைக்க வேண்டும். திராவிடத் தமிழர்கள் தங்கள் உரிமைகளை இப்படித்தான் நிலைநாட்ட வேண்டும்.

நமது அடுத்த தலைமுறை எதை நோக்கிப் போகிறது, புதிய தலைமுறை எப்படிப்பட்டது என்பதை
இந்தத் தேர்தல் மூலம்தான் நாம் மக்களுக்கு புரியவைக்க வேண்டும்.

மக்களுக்கு என்று நான் சொல்வது, மற்ற மக்களுக்கு. இந்த மாநிலம் இல்லாத இந்திய மக்களுக்கு.
ஏனென்றால், அவர்கள் இந்த மாநிலம் தங்களுக்கு வழிகாட்டும் என்று எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.

திரைப்பட இயக்குனர் தயாரிப் பாளர் முன்னாள் பெப்சி தலைவர் வி சி. குகநாதன் கூறி உள்ளார்

Related posts

Actress AksharaGowda got Vaccinated

Jai Chandran

தமிழரசன் (பட விமர்சனம்)

Jai Chandran

GV Prakash Kumar’s Adangathey

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend