சென்னையில் மிகப் பிரமாண்டமாக டிஜிட்டல் ஸ்டுடியோ நடத்தி வரும் நிறுவனம் பெஸ்ட் காஸ்ட். இந்நிறுவனம் தற்போது திரைப்பட தயாரிப்பில் ஈடுபட்டிருக்கிறது. இந்நிறுவனத்தின் தலைவர் முரளி கபீர் தாஸ் தயாரிக்கும் முதல் படம் “அந்த 7 நாட்கள்”. இப்படத்தை எம் .சுந்தர் எழுதி இயக்குகிறார். இவர் பிரபல இயக்குனர் கே. பாக்யராஜிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர்.
“அந்த 7 நாட்கள்”படம் பற்றி இயக்குனர் எம் .சுந்தர் கூறியதாவது:
எனது குருநாதர் இயக்குனர் கே பாக்யராஜ் சாரிடம் உதவி இயக்குனராக பணியாற்றுவதற்காக நான் ஐந்து வருடம் அவர் பின்னால் சுற்றித்திரிந்து பிறகுதான் அவர் என்னை தனது டீமில் இணைத்துக் கொண்டார். அவரிடம் நான் நிறைய கற்றுக் கொண்டேன். தற்போது நான் இயக்கும் படத்திற்கு அந்த ஏழு நாட்கள் என்று பெயரிடப்பட்டி ருக்கிறது.
நான் படம் இயக்க சரியான தயாரிப்பு நிறுவனம் கிடைக்க வேண்டும் என்று காத்திருந்தேன். அந்த வகையில் எனது காத்திருப்புக்கு பலன் தரும் வகையில் பெஸ்ட் காஸ்ட் நிறுவனம் அமைந்தது. இது நான் செய்த பாக்கியம். இப்பட நிறுவன தலைவர் தயாரிப்பாளர் முரளி கபிர்தாஸ் சாரையும் மற்றும் நிறுவன தலைமை செயல் அதிகாரியையும் சந்தித்து கதை கூறினேன். அந்த கதை அவர்களுக்கு பிடித்திருந்தது. மேலும் அதில் சில கருத்துக்களையும் அவர்கள் தெரிவித்தார்கள் அது கதைக்கு மெருகு சேர்க்கும் விதத்தில் இருந்ததால் அதை ஏற்றுக் கொண்டேன். இந்தப் படத்திற்கு அந்த ஏழு நாட்கள் அல்லது டார்லிங் டார்லிங் டார்லிங் என்ற டைட்டில் வைக்க வேண்டும் என்று எண்ணினேன். இந்த இரண்டு டைட்டில் தான் இந்த கதைக்கு மிகவும் பொருத்தம்.
எனது குருநாதர் கே பாக்யராஜ் சாரை அணுகி அவரிடம் இந்த கதையை கூறினேன். அவருக்கும் மிகவும் பிடித்திருந்தது. கதையில் எந்த மாற்றமும் செய்யாமல் சில விஷயங்களை சேர்த்தால் நன்றாக இருக்கும் என்று யோசனை கூறினார்.
அது பயனுள்ளதாக இருந்தது. இந்த கதைக்கு எந்த டைட்டில் பொருத்தமாக இருக்கும் என்று அவரிடம் ஆலோசித்தேன்..அநத ஏழு நாட்கள் பொருத்துமாக இருக்கும் என்று நான் கூறினேன். அவர் முழு மனதுடன் ஏற்றுக்கொண்டார். அந்த ஏழு நாட்கள் படம் எனது குருநாதர் இயக்கிய மாபெரும் படைப்பாகும். மிகப்பெரிய வெற்றியை படைத்தது. அந்த படத்தின் டைட்டிலை என் படத்துக்கு நான் கேட்டபோது அவர எனக்கு பயன்படுத்த அனுமதி தந்ததோடு வாழ்த்துக்கள் கூறினார் . இதுதான் அவரிடம் உள்ள பெருந்தன்மையாகும் . அவர் இயக்கிய அந்த ஏழு நாட்கள் கதைக்கும் என்னுடைய கதைக்கும் எந்த ஒரு சம்பந்தமும் கிடையாது. எனது கதை முற்றிலும் புதிய கதை.
அந்த ஏழு நாட்கள் கதை பற்றி கேட்கிறார்கள்.. நூறு வருடங்களுக்கு ஒரு முறை ஏற்படும் ஒரு சூரிய கிரகணம் சில வருடங்களுக்கு முன்பு உருவானது. அந்த காலகட்டத்தில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை பின்னணியாக வைத்து தான் இந்த கதை அமைக்கப்பட்டிருக்கிறது. இதை ஒரு சயின்ஸ் பிக்சன் என்று கூறலாம். அத்துடன் இளம் ஜோடி ஒன்றின் அழகான காதல் கதையும் இணைந்திருக்கிறது.

ஹீரோவாக நடிக்க யார் பொருத்தமாக இருப்பார்கள் என்று தேடிக் கொண்டிருந்தபோது சிலரை அழைத்து பார்த்தபோது சில பிளஸ், சில மைனஸ்கள் . இருந்தது. பின்னர் இன்ஸ்டாவில் தேடிய போது அஜிதேஜ் என்ற இளைஞர் கிடைத்தார் அவரை நேரில் அழைத்து நடித்துக் காட்ட சொன்னபோது கதாபாத்திரத்திற்கு மிகவும் பொருத்தமாக இருந்தார்.
அவரை ஒப்பந்தம் செய்தோம். இவரது நிஜப் பெயர் வினித். பெஸ்ட் காஸ்ட் தயாரிப்பாளர் அவருக்கு அஜிதேஜ் என பெயர் மாற்றம் செய்தார். .
ஹீரோயின் ஶ்ரீசுவேதா. இவர் மலையாள வெப் சீரிஸ் நடித்திருக்கிறார். இவரையும் இன்ஸ்டாகிராமில் பார்த்து தான் தேர்வு செய்தோம். ஹீரோவுக்கும் ஹீரோயினிக்கும் கெமிஸ்ட்ரி பொருத்தமாக இருந்ததால் கதைக்கு ஜோடி பொருத்தமும் சரியாக அமைந்துவிட்டது.
இப்படத்தில் கே. பாக்யராஜ் சாரும் முக்கிய வேடமுன்றில் நடிக்கிறார் அதாவது அமைச்சராக நடிக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானல் மற்றும் சென்னையில் 45 நாட்கள் நடந்து முடிந்தது.
இப்படத்தின் ஒளிப்பதிவை கோபிநாத் துரை செய்திருக்கிறார்.
இசையை சச்சின் சுந்தர் அமைக்கிறார். இவர் எனது மகன்தான். இசையில் நல்ல தேர்ச்சி பெற்றவர். இவர் மூலமாகத்தான் தயாரிப்பாளர் அறிமுகம் கிடைத்தது. படம் இயக்கும் வாய்ப்பும் அமைந்தது. மோகன் ராஜன் பாடல்கள் எழுதுகிறார்.
எடிட்டிங் மற்றும் வி எஃப் எக்ஸ் பணியை முத்தமிழன் ராமு கவனிக்கிறார். ஸ்டன்ட் காட்சிகளை ராகேஷ் அமைத்திருக்கிறார். டி கே தினேஷ்குமார் அரங்கம் நிர்மாணிக்கிறார்.. பிஆர்ஓ சுரேஷ் சந்திரா.
இவ்வாறு இயக்குனர் எம் .சுந்தர் கூறினார்.
தயாரிப்பாளர் முரளி கபீர் தாஸ் கூறியதாவது:
முதலில் எனக்கு படம் தயாரிக்கும் எண்ணம் எதுவும் இல்லை. இயக்குனர் சுந்தர் மகன் சச்சின் என்னை அடிக்கடி சந்திப்பார். அப்போது தனது தந்தை பற்றியும் என்னிடம் கூறியிருக்கிறார். இந்த நிலையில் படம் தயாரிக்கும் முடிவை திடீரென்று எடுத்தோம். அப்படி உருவான படம் தான் அந்த ஏழு நாட்கள். இப்படம் செப்டம்பர் 12ம் தேதியில் திரைக்கு வருகிறது.
இனி தொடர்ந்து பட தயாரிப்பில் ஈடுபட பெஸ்ட் காஸ்ட் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதேசமயம் மிகப்பெரிய பட்ஜெட் படம் தயாரிக்கும் எண்ணம் கிடையாது. திட்டமிட்டு மீடியம் பட்ஜெட்டில் தொடர்ந்து படங்கள் தயாரிப்போம். புதுமுக இயக்குனர்கள் டெக்னீஷன்கள், புதுமுக நட்சத்திரங்களுக்கு வாய்ப்பு கொடுப்பது முக்கிய நோக்கமாகவும். அதேசமயம் அனுபவம் வாய்ந்த நடிகர்களும் நடிகைகளும் இந்த புது முகங்களுடன் இணைந்து நடிப்பார்கள். தற்போது மற்றொரு படத்தையும் தயாரித்து வருகிறோம் அது பற்றி விரைவில் அறிவிப்போம். நல்ல கதைகள், திறமையாளர்கள் இருந்தால் எங்கள் நிறுவனத்தை அணுகலாம். தலைமை செயல் அதிகாரியை சந்தித்து கதைகள் கூறலாம்.
மக்கள் நல்ல படங்களுக்கு வரவேற்பு அளித்து வருகிறார்கள். அந்த வகையில் மக்களுக்கும் ரசிகர்களுக்கும் பிடித்தமான படங்களை தயாரித்தளிக்க உள்ளோம்.
இவ்வாறு தயாரிப்பாளர் முரளி கபீர் தாஸ் கூறினார்.
.
.
