நடிகர் கோட்டா சீனிவாச ராவ் மறைவுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியதாவது:
ஒளி பாய்ச்சும் அந்த கண்கள் இமைகளை மூடிக்கொண்டது, சிம்மம் போல் கர்ஜித்த குரல்வளை அடங்கிக் கொண்டது, அவதாரம் பலவெடுத்து மாபெரும் கலைஞன் கடைசியில் முகத்தை இறுக்கிக் கொண்டு படுத்திருக்கிறான் ..
ஆயிரம்தொட்ட, ஒன்றுக்கொன்று மாறுபட்ட, கதாபாத்திரங்கள் காலத்தால் அழியாத அணுகுமுறை.. விஞ்ஞான வளர்ச்சிக்கு நன்றி! எத்தனையோ பெருங் கலைஞர்கள் காலத்தோடு கரைந்துவிட திரு. கோட்டா சீனிவாசா ராவ் நடித்த படங்கள் ஆய்வுக்கும், ஆராதிக்கவும் பதிவு பெற்றிருக்கின்றன…
தெலுங்கு மொழி மீது அவன் கர்வமும், பெருமையும் பாராட்டாமல் எப்படி இருக்க முடியும். தம் மொழி பேசும் நடிகர்களின் உரிமை பற்றி குரல் எழுப்பிய தோழன், தலைவன்.. எத்துனை விருதுகள், எத்தனை பட்டங்கள் பத்மஸ்ரீ அவனுக்கு கிரீடம்..
தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என அவன் உதடுகள் பேசாத மொழியுண்டோ.. அண்ணா கோட்டா சீனிவாச ராவ்! தங்கள் இடம் தங்களுக்கானது.. நிரப்புவார் யாரும் இல்லை.. முயன்றாலும் முடியாது.
உன் பிரிவு.. எங்கள் துயர்.. ஆன்மா சாந்தியடைய தென்னிந்திய நடிகர் சங்கம் இயற்கையை வேண்டுகிறது.
இவ்வாறு தென்னிந்திய நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியுள்ளது.
