போராடி வெல்லும் நீதி
படம் : பொன்மகள் வந்தாள்
நடிப்பு :ஜோதிகா, தியாகராஜன், கே.பாக்யராஜ், ஆர்.பார்த்திபன், பாண்டிய ராஜன், பிரதாப்போத்தன்
தயாரிப்பு: சூர்யா, ஜோதிகா
இசை : கோவிந்த் வசந்தா
ஒளிப்பதிவு : ராம்ஜி
இயக்கம் :ஜெ.ஜெ.பிரட்ரிக்
ரிலீஸ்: அமேசான் பிரைம்
ஊட்டி பகுதியில் இளம் பெண்கள் கடத்தி பலாத் காரம் செய்து கொல்லப்படுகின்றனர். வட நாட்டுப்பெண் ஜோதி மீது அந்த பழி விழுகிறது சைக்கோ கொலைகாரி என்று பிடித்து அவரை போலீசார் என்கவுண்டர் செய்கின்றனர். வருடங்கள் உருண்டோடுகிறது. பெட்டிஷன் பெத்துராஜ் (பாக்யராஜ் )மீண்டும் ஜோதி வழக்கை விசாரிக்க கேட்கிறார். அந்த வழக்கில் பாக்ய ராஜ் மகள் வெண்பா (ஜோதிகா) வழக்கறிஞராக ஆஜராகிறார். இதையறிந்த தொழிலதிபர் வரதராஜன் (தியாகராஜன்) ஐகோர்ட் வக்கீல் பார்த்திபனை ஜோதிகாவுக்கு எதிராக வாதாட நியமிக்கிறார். தியாகராஜன் இந்த வழக்கில் ஆர்வம் காட்டுவது ஏன்? ஜோதிகா உண்மையிலேயே பாக்யராஜ் மகளா? கோர்ட் தீர்ப்பு எப்படி வருகிறது என்பதற்கு கிளை மாக்ஸ் பதில் அளிக்கிறது.
சட்டம் ஒரு இருட்டறை அதில் வக்கீலின் வாதம் ஒளிவிளக்கு என்று அறிஞர் ஒருவர் கூறியிருக்கிறார். அப்படி ஒரு ஒளிவிளக்காக வாழ்ந்து காட்டியிருக்கிறார் ஜோதிகா. தனது தரப்பு வாதங்களை ஒவ்வொன்றாக எடுத்து நம்பிக்கையுடன் வைக்க அதை ஒவ்வொன்றாக தனது பாணியில் அழுத்தமாக உடைத்தெறியும்போது நீதி யை தன் வாதத்துக்கு வளைத்து விடுவாரோ என்ற சந்தேகம் எழுகிறது.
ஒவ்வொருமுறை தனது வாதங்கள் நிராகரிக்கப்படும்போது மனம் உடைந்து வெதும்பும்போது மனதை நெகிழவைக்கிறார் ஜோதிகா. மீண்டும் அவர் வைக்கும் வாதங்கள் பொய்யான ஆதாரங்கள் மூலம் சிதறடிக்கும்போது அடுத்து என்ன ஆதாரம் கொண்டு வரப்போகிறார் என்ற எதிர்பார்ப்பையும் ஏற்படுத்துகிறார்.
ஒரு கட்டத்தில் என்கவுண்டர் செய்யப் பட்ட ஜோதியின் மகளே நான்தான் என பெரிய குண்டு தூக்கிப் போட்டு கோர்ட்டை நிசப்தமாக்குவது சரியான திருப்பம்.
ஜோதியாக மற்றொரு கதாபாத்திரத் தையும் ஜோதிகாவே ஏற்றிருப்பது பொருத்தம். அவர் வைக்கும் வாதங் களில் உண்மை இருப்பதை உறுதி செய்ய அந்த பாத்திரம் துணை நிற்கிறது.
தியாகராஜன் அலட்டலே இல்லாமல் வில்லத்தனத்தை காட்டி அசத்தி இருக்கிறார் தராசில் ஒருபக்கம் ஜோதிகா என்றால் மறுதட்டாக தியாக ராஜன் ஸ்கோர் செய்திருக்கிறார்.
பாக்யராஜின் ஸ்கிரீன்பிளே மூளைக்கும் இயக்குனர் கொஞ்சம் வேலை கொடுத்திருந்தால் இன்னும் சுவாரஸ்யம் கூடியிருக்கும். பாண்டிய ராஜனுக்கு அதிக வேலையில்லை. நீண்ட நாட்களுக்கு பிறகு பிரதாப் போத்தன் நடித்திருக்கிறார். நீதிபதியாக கடமையை செய்தாலும் தியாக ராஜினிடம் பெட்டி வாங்கு வதுபோன்ற காட்சி நெருடுகிறது.
அமேசான் பிரைமில் படம் வெளியாகி இருக்கிறது
ஒ டி டி யில் படம் வெளியீடு என்பதால் தண்ணி அடிக்கும்போதும் எந்த தணிக்கையும் இல்லை.
கோர்ட், வழக்கு விசாரணை என்று ஒரே நேர் கோட்டில் கதை பயணிக் கிறது.
வசனங்களில் திருப்பம் இருந்தாலும் ஆழம் குறைவு.
முதல் காட்சியிலேயே துப்பாக்கி சத்தம் கேட்கும்போது சூர்யாவின் காக்க காக்க படத்தின் முதல் காட்சி நினைவுக்கு வருகிறது.
இசை தனி ஆவர்த்தனம் செய்யாதது கதைக்கு வலு. ராம்ஜியின் ஒளிப்பதிவு காட்சிக்கு ஏற்ற பரபரப்பை அதிகரித்திருக்கிறது.
‘பொன்மகள் வந்தாள்’ பெண்களின் அபய குரலை உயர்த்திப்பிடிக்கிறது.
