படம்: ஜோதி
நடிப்பு: வெற்றி, ஷீலா ராஜ்குமார், ராஜா சேதுபதி, கிருஷ்ணா க்ருப்
தயாரிப்பு: எஸ் பி ஆர் ஸ்டுடியோஸ் எஸ்.பி.ராஜா சேதுபதி
ஒளிப்பதிவு: சேசி ஜெயா
இசை: ஹர்ஷவர்தன் ராமேஸ்வர்
இயக்கம்: ஏ.வி.கிருஷ்ண பரமாத்மா
பி ஆர் ஒ: வின்சன்.சி.என்.
நகரில் நான்கு நாளில் பிரசவம் ஆகவிருக்கும் டாக்டர் ஒருவரின் கர்ப்பிணி மனைவி ஜோதியின் (ஷீலா) வயிற்றை அறுத்து குழந்தையை திருடி செல்கிறான் மர்மநபர். இதையறிந்து போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ( வெற்றி) அதிர்ச்சி அடைகிறார். துருவி துருவி விசாரணை நடத்துகிறார். மர்மநபரை நெருங்கியது போல் தோன்றினாலும் அவனை கண்டறிய முடியவில்லை. பலர் மீது சந்தேகப்பார்வை விழுந்தாலும் அவர்கள் குற்றவாளிகளாக உறுதி செய்யமுடிய வில்லை.ஒரு கட்டத்தில் குழந்தை கடத்தலுக்கு பின்னால் ஒரு கூட்டம் வியாபாரம் நடத்தும் விவகாரம் அம்பலமாகிறது. ஆனாலும் வயிற்றை கிழித்து குழந்தையை திருடும் பயங்கரம் நடந்தது எப்படி நடந்தது என்பதற்கு கிளைமாக்ஸில் விடை தெரியும்போது கைத்தட்டல் அரங்கில் எதிரொலிக் கிறது.
கடலூரில் நடந்த ஒரு உண்மை சம்பவம் இன்னும் சிலநிஜசம்பங்களின் அடிப்படையில் உருவாகியிருக்கிறது இக்கதை.
குழந்தை திருட்டு நடப்பது தெரிந்தவிஷயம் கர்ப்பிணி வயிற்றை கிழித்து குழந்தை திருடுவது கதைக்காக சொல்லப்பட்டதா என்றால் அமெரிக் காவில் சில வருடங்களுக்கு முன் இப்படியொரு சம்பவம் நடந்ததாக இயக்குனர் கூறுகிறார்.
த்ரில்லாக கதை சொல்ல வேண்டும் என்பதற்காக அல்லாமல் த்ரில்லாகவும் அதே சமயம் சமூக அக்கறையுடனும் கதையை சொல்லியிருக்கும் இயக்குனர், தயாரிப்பாளர் என ஒட்டுமொத்த குழுவுக்கும் ஜெ போடலாம்.
சிறந்த நடிகை என்று பாராட்டப்பெறும் ஷீலா ராஜ்குமார் கர்ப்பிணி வேடத்தில் நடித்திருக்கிறார். தொடக்கம் முதல் படுக்கையிலேயே கிடக்கும்போது இவர் நடிப்பை பயன்படுத்தாமல் விட்டுவிட்டர் களோ என்ற சந்தேகம் எழுகிறது. எல்லாவற்றுக்கும் வட்டியும் முதலுமாக கிளைமாக்சில் கர்ப்பிணி தோற்றத்தி லேயே ருத்ர தாண்டவம் ஆடி மிரளவிட்டிருக்கிறார் ஷீலா.
போலீஸ் சப் இன்ஸ்பெக்டராக எதார்த்த மான நடிப்பில் மனதுக்குள் நுழைந்து விடுகிறார் வெற்றி. கிளைமாக்ஸில் சுடுகாட்டில் வில்லனுடன் மோதி தெறிக்கவிடுகிறார். கான்ஸ்டபிள் குமரவேல் வெற்றியுடனே சுற்றுகிறார். அவ்வப்போது சில சந்தேகங்களை கிளப்பி கதை வேகமாக நகர உதவியிருக் கிறார்.

சில மருத்துவர்கள் செய்யும் சட்டவிரோத செயல்களை நேரடியாக சொல்லி யிருப்பது அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி. படத்தில் வரும் எந்த பாத்திரமும் வீண் இல்லை என்று சொல்லும் அளவுக்கு எல்லோரையும் முக்கியபாத்திர மாக்கியிருக்கிறார் இயக்குனர்.
ஷீலாவுக்கு உதவும் கதாபாத்திரத்தில் தயாரிப்பாளர் ராஜா சேதுபதியே நடித்திருக்கிறார். இளவயதுக்காரார் துடிப்பான நடிப்பை வெளியிட்டுள்ளார்.
எஸ் பி ஆர் ஸ்டுடியோஸ் எஸ்.பி.ராஜா சேதுபதி தயாரித்திருக்கிறார்.
ஹர்ஷவர்தன் ராமேஸ்வர் இசை படத்திற்கு தூணாக தாங்கி நிற்கிறது.
ஏ.வி.கிருஷ்ண பரமாத்மா நாட்டுக்கு சொல்லவேண்டிய கதையை நெற்றிப்பொட்டில் அறைந்ததுபோல் சொல்லியிருக்கிறார்.
ஜோதி- இவள் கணவனிடம் நீதி கேட்கும் நவீன கண்ணகி.

