பழம்பெரும் பின்னணி பாடகி ஜமுனா ராணி வயது மூப்பு காரணமாக மரணமடைந்தார். அவருக்கு 88 வயது.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் சிங்கள மொழிப் படங்கள் என பல்வேறு மொழிகளில் 6,000-க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியவர் ஜமுனா ராணி.
தென்னிந்திய சினிமாவின் இசை வரலாற்றில் தனித்துவமான இடத்தைப் பெற்றவர். பல தசாப்தங்களாக நீண்ட அவரது இசைப் பயணம், 1950 மற்றும் 1960-களில் மிகவும் பிரபலமான பின்னணி குரல்களில் ஒன்றாக அவரை உயர்த்தியது.
1938-ம் ஆண்டு ஆந்திர மாநிலத்தில் பிறந்த ஜமுனா ராணி, தனது 7-வது வயதில் “தியாகய்யா” என்ற படத்தின் மூலம் திரையுலகில் பாடகியாக அறிமுகமானார்.
குழந்தைத்தனமான குரலுக்கு சொந்தக்காரர். 1952-ம் ஆண்டு வெளிவந்த “கல்யாணி” என்ற படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானார். கமல்ஹாசன் நடித்த ‘நாயகன்’ படத்தில் இளையராஜா இசையில் இடம் பெற்ற “நான் சிரித்தால் தீபாவளி” என்ற பாடலையும் ஜமுனா ராணி பாடினார்.
“காளை வயசு கட்டான சைசு, செந்தமிழ் தன் மொழியாள், பாட்டொன்று கேட்டேன், காட்டில் மரம், சின்னச் சின்ன சிட்டு, காவேரி தாயே, உங்க மனசு ஒரு தினுசு, தாரா தாரா வந்தாரா, எந்த நாளும் சந்தோஷமே, யாரடி நீ மோகினி, குங்குமப்பூவே கொஞ்சும் புறாவே, மாமா மாமா மாமா, ஆசையும் என் நேசமும்” என புகழ்பெற்ற பல பாடல்களை பாடியவர்.
1940 முதல் 1960 வரை தென்னிந்திய இசை உலகத்தில் தவிர்க்க முடியாத ஆளுமையாக திகழ்ந்தார்.
‘தேவதாஸ்’ திரைப்படத்தில் இடம்பெற்ற “ஓ தேவதாஸ்” பாடலின் சிறுவர் குரலையும் அவர் பாடினார்.
திரை இசை பாடல்கள் உள்ளவரை அவரது பல பாடல்கள் ரசிகர்களின் மனதில் நிலைத்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
அவன் திரை உலகில் அறிமுகமான காலம், ஜிக்கி, பி.லீலா, எம்.எல். வசந்தகுமாரி போன்ற முன்னணி பின்னணி பாடகிகள் ஆதிக்கம் செலுத்திய காலமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அவ்வளவு பெரிய பாடகிகள் இருந்த காலத்திலும் தனக்கென ஒரு தனித்துவத்தை ஜமுனாராணியும் உருவாக்கிக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
