தமிழக வெற்றிக்கழக தலைவர் ஜோசப் விஜய் சமீபத்தில் தமிழக முதலமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார். அதற்கான விழா சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் நடந்தது. தமிழக கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதே விழாவில் 9 அமைச்சர்களும் பதவி ஏற்று கொண்டனர் ஆனால் அவர்களுக்கு அப்போது துறை ரீதியான எந்த பொறுப்புகளும் ஒதுக்கப்படாமல் இருந்தது .
முதல்வராக பதவி ஏற்றுக் கொண்ட விஜய் தமிழ்நாடு தலைமை செயலகத்துக்கு தனது பணிகளை தொடங்கினார். அங்குள்ள அரசின் முக்கிய ஐஏஎஸ் ஐபிஎஸ் மற்றும் நிதித்துறை அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில் முதல்வர் விஜய் நேற்று புதிய அமைச்சர்களுக்கு துறைகளை ஒதுக்கி அறிவித்திருக்கிறார். விஜய் தனது பொறுப்பில் காவல்துறை, பொதுத் துறை உள்ளிட்ட 16 துறைகளை வைத்திருக்கிறார்.
அமைச்சர்கள் விவரமும் அவர்களது பொறுப்பும் வருமாறு :
முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் பொதுத்துறை, பொது நிர்வாகம், ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் அதிகாரிகள் தொடர்பான துறைகள், காவல்துறை, உள்துறை, சிறப்பு திட்ட அமலாக்கம், மகளிர் நலம், இளைஞர் நலம், குழந்தைகள் நலம், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் உள்ளிட்ட முக்கிய துறைகளை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளார்.

என். ஆனந்த் ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஊரக வளர்ச்சி, ஊராட்சிகள், வறுமை ஒழிப்பு திட்டங்கள் மற்றும் பாசனத் திட்டங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
ஆதவ் அர்ஜுனா பொதுப்பணித்துறை மற்றும் விளையாட்டு மேம்பாட்டு அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். சாலை, கட்டிடங்கள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் உள்ளிட்ட துறைகள் அவரிடம் உள்ளன.
டாக்டர் கே.ஜி. அருண்ராஜ் சுகாதாரம், மருத்துவ கல்வி மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கே.ஏ. செங்கோட்டையன் நிதித்துறை அமைச்சராகவும், ஓய்வூதியம் மற்றும் அதனுடன் தொடர்புடைய பொறுப்புகளையும் கவனிக்க உள்ளார்.
பி. வெங்கடராமணன் உணவு மற்றும் பொதுவிநியோகத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆர். நிர்மல்குமார் மின்சாரம், மாற்று எரிசக்தி, சட்டம், நீதிமன்றங்கள், சிறைத்துறை, ஊழல் தடுப்பு, சட்டப்பேரவை மற்றும் தேர்தல்கள் தொடர்பான துறைகளை கவனிக்க உள்ளார்.
ராஜ்மோகன் பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, தகவல் மற்றும் விளம்பரத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ் மொழி, கலாசாரம், தொல்லியல் மற்றும் திரைப்படத் துறைகளும் அவரிடம் ஒதுக்கப்பட்டுள்ளன.
டாக்டர் டி.கே. பிரபு கனிம வளங்கள் மற்றும் சுரங்கத் துறையை கவனிக்கிறார்.
செல்வி எஸ். கீர்த்தனா தொழில்துறை மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.
