படம் : கெணத்த காணோம்
நடிப்பு: யோகி பாபு, ரெய்ச்சல் ரெபாகா, லவ்லின் சந்திரசேகர், ஜார்ஜ் மரியான், ரமேஷ் கிருஷ்ணன், கவிதா பாரதி, ராமகிருஷ்ணன்
தயாரிப்பு: ஆர் ரமேஷ் பாபு, ஜெகன் பாஸ்கரன்
இசை: நிவாஸ் கே பிரசன்னா
ஒளிப்பதிவு : வி தியாகராஜன்
இயக்கம்: சுரேஷ் சங்கையா
பி ஆர் ஓ : ஸ்ரீ வெங்கடேஷ்
கதை : ராமநாதபுரம் மாவட்டம் கோடங்கிபட்டி கிராமத்தில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. மணிவாசகம் (யோகி பாபு) கோயில் பூசாரி மற்றும் சிற்பங்கள் செய்பவராக இருக்கிறார். மழை பெய்து வருட கணக்கில் ஆகிவிட்டதால் தண்ணீர் பஞ்சம் கிராமத்தில் தலை விரித்தாடுகிறது. தண்ணீருக்காக ஊரில் கிணறு வெட்ட ஊர் மக்கள் முடிவு செய்து மணிவாசகம் இடத்தில் கிணறு வெட்டுகின்றனர். கிணறு வெட்ட பூதம் கிளம்பியது போல் அங்கு தண்ணீருக்கு பதில் டைனோசர் எலும்புக்கூடு கிடைக்கிறது. அதைக் கண்டு ஊர் மக்கள் அதிர்ச்சி அடைகின்றனர். அந்த இடத்தை போலீசும் தொல்லியல் ஆராய்ச்சியாளர்களும் ஆக்கிரமிக்கின்றனர். அதன் பிறகு நடப்பது என்ன என்பதுதான் படத்தின் சுவாரஸ்ய காட்சிகளாக அமைகிறது.
யோகி பாபு சோலோ ஹீரோவாக நடிக்கும் படங்களில் ஏதாவது ஒரு சமுதாய கருத்தை மையமாகக் கொண்டு கதைகளை தேர்வு செய்வது அவரது சிறந்த கதை தேர்வுக்கான அடிப்படையாக அமைகிறது அதுவே வெற்றியாகவும் அமைகிறது. அந்த வகையில் கெணத்தை காணோம் படமும் தண்ணீர் பஞ்சத்தை மையமாக வைத்து கதை உருவாக்கப்பட்டிருக்கிறது.
நான்தான் ஹீரோ என்ற எந்த பந்தாவும் காட்டாமல் இயல்பான நடிப்பின் மூலம் மனதில் பதிகிறார் யோகி பாபு.
தன்னுடைய இடத்தில் கிணறு தோண்ட வேண்டும் என்று ஊர் மக்கள் கேட்கும் போது இ’ந்த இடத்தை கொடுத்து விட்டால் நான் எங்கே போய் வசிப்பது’ என்று அவர் கேட்கும் கேள்விகளில் நியாயம் இருக்கிறது. பின்னர் கிணறு வெட்ட இடம் கொடுத்ததும் ஊர் மக்களே கிணறு தோண்ட அங்கு டைனோசர் எலும்புக்கூடு கிடைப்பது எதிர்பாராத ஷாக்.
டைனோசர் எலும்பு கூடு கிடைத்ததும் ஊரில் பல இடங்களை தோண்டி தொல்லியல் ஆராய்ச்சி செய்ய வேண்டும் என்று அரசு முடிவு செய்தபோது ஊர் மக்கள் எல்லாம் பாதிக்கப்படுவார்கள் என்பதை உணர்ந்து யோகி பாபு செய்யும் தந்திரமான ஒரு யுக்தி படத்தை கிளைமாக்ஸ் வரை பரபரப்பாக கொண்டு செல்கிறது.
யோகி பாபுவுக்கு ஜோடியாக லவ்லின் சந்திரசேகர் நடித்திருக்கிறார். இவர்களது பெண் பார்க்கும் படலமும் தனி சேப்டராக அமைந்து கலகலப்பு ஏற்படுத்துகிறது. ஆங்காங்கே ஊர் மக்கள் செய்யும் ரவுசு , நீரோட்டம் பார்க்கும் பெருசு, நத்தை போல் ஊர்ந்து செல்லும் மற்றொரு பெருசு போன்ற பாத்திரங்கள் என யாரும் வீண் இல்லை என்ற அளவுக்கு கலகலப்புக்கும் காட்சி விறுவிறுப்புக்கும் பயன்பட்டிருக்கிறார்கள்
தொல்லியல் அதிகாரிகளாக வரும் ரெய்ச்சல் ரெபாகா, ராமகிருஷ்ணன் அளவான நடிப்பு வழங்கி இருக்கிறார்கள்.
ஒரு கிடாயின் கருணை மனு என்ற ஒரு அழகான படத்தை அளித்த சுரேஷ் சங்கையா மற்றொரு அர்த்தமுள்ள படத்தை கெணத்த காணோம் என்ற பெயரில் வழங்கி இருக்கிறார். கதையை மேலோட்டமாக நுனிப்புல் மேயாமல் ஒரு கிராமத்தில் எதிர்பாராத ஆக்கிரமிப்பு நடந்தால் அதை எப்படி எதிர்கொள்ளலாம் என்ற யோசனை தரும் வகையில் படத்தை இயக்கியிருப்பது அவருக்கு பாராட்டுகளை பெற்றுத்தரும். ஆனால் அந்தப் பாராட்டுகளை ஏற்றுக்கொள்ள அவர் உயிரோடு இல்லை என்பது வருத்தமான விஷயம்.
படத்தை ஆர் ரமேஷ் பாபு, ஜெகன் பாஸ்கரன் தயாரித்திருக்கிறார்கள்.
நிவாஸ் கே பிரசன்னாவின் உயிரோட்டமான இசை, வி தியாகராஜனின் கேமரா கிராமத்தை மூலை முடுக்கலாம் கவர்ந்து வந்திருக்கிறது.
கெணத்த காணோம் – ஒரு கிராமத்தின் வாழ்வியல் போராட்டம்.

Review by
k . Jayachandhiran
trending cinemas now. com
