படம் : மகா சேனா
நடிப்பு: விமல், சிருஷ்டி டாங்கே, யோகிபாபு , ஜான் விஜய்
கபீர் துஹான் சிங்,
மஹிமா குப்தா,
விஜய் சேயோன் ,
அல்ஃப்ரெட் ஜோஸ்,
சுபாங்கி ஜா,
சிவகிருஷ்ணா , இலக்கியா
தயாரிப்பு: மருதம் புரொடக்ஷன்ஸ்
இசை: ஏ.பிரவீன் குமார்
பின்னணி இசை – உதய் பிரகாஷ் யு பி ஆர்
ஒளிப்பதிவு: மனாஸ் பாபு
டி ஆர்.
இயக்கம்: தினேஷ் கலைச்செல்வன்
பிஆர்ஓ: ரேகா
யாளி மலைப்பகுதியில் மலையின் உச்சியில் குரங்கணி பகுதியில் வசிக்கும் மக்களுக்கும், அடிவாரத்தில் வசிக்கும் மக்களுக்கும் ஜென்ம பகை. குரங்கணி பகுதி மக்களின் வழிபாட்டு தெய்வமான யாளி சிலையை கைப்பற்ற அடிவாரப் பகுதி மக்கள் முயற்சிக்கிறார்கள். இதில் இரு ஊர்களுக்கும் மோதல் ஏற்படுகிறது.
இந்த மோதலை தனக்கு சாதகமாக பயன்படுத்த பார்க்கிறார் காட்டிலாக அதிகாரி ஒருவர். ஒரு கட்டத்தில் இரு ஊர் மக்களுக்கும் நேருக்கு நேர் மோதல் நிகழ்கிறது அடுத்து நடந்தது என்ன என்பதுதான் கிளைமாக்ஸ்.
கிராமத்து இளைஞராகவும், நகரத்து இளைஞராகவும் விமலை பார்த்துக் கொண்டிருந்த நிலையில் இப்படத்தில் மலைப்பிரதேச மக்களின் பிரதிநிதியாக செங்குட்டுவன் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
தோற்றத்தில் எந்த வித்தியாசமும் இல்லாவிட்டாலும் நடிப்பில் வித்தியாசம் காட்டியிருக்கிறார்.
பெரிய யானை மீது அமர்ந்தபடி வரும் முதல் காட்சியிலேயே இவ்வளவு தைரியமாக ஒற்றை ஆளாக எப்படி யானை மீது அமர்ந்தார் என்ற ஒரு வியப்பை ஏற்படுத்துகிறார் விமல்
ஆயுதங்களுடன் தாக்கும் ஸ்டண்ட் வீரர்களுடன் விமல் மோதி சமாளிப்பாரா என்ற சந்தேகம் ஏற்பட்டாலும் ஓரளவுக்கு சமாளித்திருக்கிறார் என்று கூறலாம். ஆனாலும் ஆக்சன் காட்சிகளில் அவர் இன்னும் வேகம் காட்ட வேண்டியது அவசியம். அப்போதுதான் அவரால் எதார்த்த நடிகர் என்ற தளத்திலிருந்து ஆக்சன் நடிகர் என்ற இடத்திற்கு செல்ல முடியும்.
மகள் இறந்த காட்சியில் விமல் கதறி அழுது உருக்கத்தை காட்டி இருப்பது மனதை கலங்க வைக்கிறது.
விமல் ஜோடியாக சிருஷ்டி டாங்கே நடித்திருக்கிறார். குழி விழுந்த கன்னத்தில் அவர் சிரித்தபடி நடனமாடும் காட்சிகள் அழகு. ஒரு சில காட்சிகளில் கோபமாக பேசி ஆச்சரியப்பட வைக்கிறார்.
சுத்த தமிழ் பேசி கங்காவாக நடித்திருக்கும் நடிகை யார் என்று கேட்க வைக்கிறார் மஹிமா குப்தா. அவருக்கு ஜோடியாக நடித்திருக்கும் விஜய் சேயோன் தனது
உடற் கட்டை காட்டி மிரள வைக்கிறார்.
யோகி பாபு வழிகாட்டியாக வந்து டேய் வாடா போடா என்று வழக்கம்போல் மற்றவர்களை அதட்டிப் பேசி சிரிக்க வைக்க முயற்சிக்கிறார்.
படத்தில் காட்சிகள் ஒவ்வொன்றும் நீண்டிருப்பது சோர்வை ஏற்படுத்துகிறது. குறிப்பாக கிளைமாக்ஸ் சண்டைக்காட்சியை குறைத்தால் விறுவிறுப்பு கூட வாய்ப்பிருக்கிறது.
இயக்குனர் தினேஷ் கலைச்செல்வன் மலைப்பகுதி மக்களின் வாழ்வியலை சொல்லி இருக்கிறார். இந்த கால கட்டத்தில் கூட நரபலி தருவதுபோல் ஒரு சில காட்சிகள் வைத்திருப்பது அதிர்ச்சி தருகிறது.
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் முழு படப்பிடிப்பு நடத்தப்பட்டிருப்பதால் படம் பார்க்கும் பொழுது மலைப்பகுதிக்கு சென்று உலாவரும் ஒரு உணர்வு ஏற்பட வைக்கிறார் ஒளிப்பதிவாளர்
மனாஸ் பாபு.
ஏ.பிரவீன் குமார் இசையில் பாடல்கள் கேட்கும் படி உள்ளது
உதய் பிரகாஷ் U P R பின்னணி இசை இரைச்சலை குறைக்க வேண்டியது அவசியம்.
மகா சேனா – விமலின் வித்தியாசமான படம்.

Review By
K.Jayachandhiran
trending cinemas now.com
