படம்: போட்
நடிப்பு: யோகி பாபு, கௌரி கிஷன், சின்னி ஜெயந்த், குலப்புளி லீலா, எம். எஸ். பாஸ்கர், சாம்ஸ், மதுமிதா, ஷாரா, மாஸ்டர் அக்ஷத் தாஸ் ஆகியோருடன் ஹாலிவுட் நடிகர் ஜெஸ்ஸி ஃபோக்ஸ்-ஆலன்
தயாரிப்பு: பிரபாபிரேம்குமார், சி கலைவாணி
இசை: ஜிப்ரான் வைபோதா
ஒளிப்பதிவு: மாதேஷ் மாணிக்கம்
இயக்கம்: சிம்பு தேவன்
பி ஆர் ஓ: நிகில் முருகன்
சுதந்திரத்திற்கு முந்தைய கதையாக உருவாகி இருக்கிறது போட். இரண்டாம் உலகப்போர் உலகெங்கும் நடந்து கொண்டி ருக்க இந்தியாவில் சுதந்திரப் போராட்டம் தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது. அப்போது ஜப்பான் சென்னை நகரம் மீது குண்டு வீசும் என்ற பதற்றம் ஏற்படுகிறது. சென்னையில் இருக்கும் பல லட்சம் மக்கள் பல்வேறு இடங்களுக்கு தப்பி செல்கிறார்கள் ஒரு சிறு கூட்டம் படகில் ஏறி நடுக்கடலுக்கு தப்பி செல்கிறது. அந்த படகில் யோகி பாபு, எம் எஸ் பாஸ்கர், சாமஸ், கௌரி கிஷன் உள்பட 10 பேர்கள் ஏறி விடுகிறார்கள். நடுக்கடலில் படகில் இருக்கும் இவர்களை சுறா மீன் தாக்குகிறது. இதனால் படகு சேதமாகிறது. இரண்டு பேர் கடலில் குதித்தால்தான் படகில் பாரம் குறைந்து மீதமுள்ளவர்கள் தப்பிப்பார்கள் என்ற நிலை ஏற்படுகிறது. இதற்கிடையில் நடுக்கடலில் ஒரு வெள்ளைக்கார அதிகாரியும் துப்பாக்கியுடன் படகில் ஏறி விடுகிறான். இதனால் பாரம் அதிகமாகிறது. எந்த நேரத்திலும் படகு மூழ்கிவிடும் என்ற அபாயத்தில் இருக்கும்போது எந்த இரண்டு பேர் கடலில் குதித்து மற்றவர்களை உயிர் பிழைக்க வைப்பார்கள் என்ற முடிச்சு தான் கிளைமாக்ஸ் வரை படத்தை நகர்த்தி செல்கிறது.
கடல் நடுவே கொண்ட கதை ஏற்கனவே சில வந்திருந்தாலும் அவையெல்லாம் ஒரு சிறிய நேரத்துக்குள் காட்சிகள் முடிந்துவிடும் ஆனால் போட் படத்தை பொருத்தவரை படத்தின் 80 சதவீத காட்சிகள் முழுக்க முழுக்க கடலில் படமாக்கப்பட்டி ருப்பது தான் மிகப்பெரிய விஷயம்.
சிறிய படகில் யோகி பாபு, கௌரி கிஷன், சின்னி ஜெயந்த், குலப்புளி லீலா, எம். எஸ். பாஸ்கர், சாம்ஸ், மதுமிதா, ஷாரா, மாஸ்டர் அக்ஷத் தாஸ், ஹாலிவுட் நடிகர் ஜெஸ்ஸி ஃபோக்ஸ்-ஆலன் என 10 பேர் எப்படித்தான் அலைகடலின் சீற்றத்தையும் , சுட்டெரிக்கும் வெயிலையும், தாகம் தவிக்கும் நாவையும் பொறுத்துக் கொண்டு நடித்தார்களோ? அவர்கள்படும் சிரமம் காட்சிகளில் முழுக்க முழுக்க வெளிப்பட்டிருக்கிறது. அந்த உழைப்புக்கு கைகுலுக்கி பாராட்டலாம்.
படகை செலுத்தும் படகுக்காரராக யோகி பாபு வேடப்பொருத்தம் ஏககச்சிதம். கைகளில் துடுப்புகளை அசைத்துக் கொண்டு அவர் கவனமாக வசனங்கள் பேச வேண்டிய காட்சிகளில் தடுமாறாமல் பேசி இருப்பதும், அதற்கேற்ப முக பாவங்கள் காட்டி இருப்பதும் பண்பட்ட நடிகராக அவரை மனதில் பதிய வைக்கிறது.
படகில் சுற்றி வரும் சுண்டெலிக்கு கூட யோகி பாபு பரிவு காட்டி பசியாற வைப்பது மனிதம் எல்லோருக்கும் வேண்டும் என்பதை உணர்த்துகிறது.
தமிழர்கள் யாரும் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடவில்லை என்பது போல் சாம்ஸ் வடநாட்டு சுதந்திர தியாகியை குறிப்பிடும் போது நெற்றிப் பொட்டில் அடிப்பதுபோல் வீரபாண்டிய கட்டபொம்மன், வேலுநாச்சியார் போன்ற சுதந்திரப் போராட்ட வீரர்களின் பெயர்களை பட்டியலிட்டு சொல்லும்போது அரங்கில் கைதட்டல் எழுகிறது.
யோகி பாபு பேசும் பேச்சுக்களை கேட்டு அவர் வசம் கௌரி கிஷன் மனதை பறி கொடுத்துவிட்டு இது காதலா மரியாதையா என்று தெரியவில்லை என சொல்லும் போது இருவருக்கும் உள்ள வயது வித்தியாசம் பெரிதாக இடிக்கிறது. இந்த காட்சி தேவையா என்று கூட தோன்றுகிறது எதற்காக இயக்குனர் இப்படி யோசித்தார் என்று தான் புரியவில்லை…
மேல் ஜாதி, தாழ்ந்த ஜாதி என்ற வித்தியாசத்தை வசனங்களால் சுட்டிக்காட்டி அதற்கு சவுக்கடி கொடுத்து இருக்கிறார் இயக்குனர் சிம்பதேவன்.
குலப்புலி லீலா பாட்டியின் கதாபாத்திரமும் சென்டி மென்ட்டுக்கு உதவி இருக்கிறது.
முழுக்க முழுக்க படம் கடலிலேயே படமாக்கி இருப்பது ஒரு மெத்தனத்தை ஏற்படுத்தினாலும் கதையை முழுக்க முழுக்க அந்த இடத்திலேயே சொல்ல வேண்டிய சூழலால் இயக்குனர் சிம்பு தேவன் வேறு காட்சிகளுக்கு முக்கியத்து வம் தராமல் விட்டிருக்கிறார்.
கடல் நடுவே ஆகாயத்தில் பறவைகள் பறப்பது கடலுக்கு அடியில் இருக்கும் நீல வண்ணங் களின் அதிசயம் கடலின் நீல வண்ணம் என எப்படி எல்லாம் காட்சியை அழகுபடுத்த முடியுமோ அப்படி எல்லாம் அழகுபடுத்தி இருக்கிறார் ஒளிப்பதிவாளர் மாதேஷ் மாணிக்கம், கூடவே கிராபிக்ஸும்.
ஜிப்ரான் இசை கை கொடுத் தாலும். கடல் மீன்கள் போன்ற ஏற்கனவே கடல் நடுவே படமாக்கப்பட்ட படங்களில் இடம் பெற்ற பாடல்கள் நம் காதுக்குள் ஒலிப்பதுபோல் அப்படி எந்த இசைக்கும் இங்கு ஜிப்ரானுக்கு வாய்ப் பில்லை.
பிரபாபிரேம்குமார், சி கலைவாணி தயாரித்திருக்கிறார்கள்.
போட் – நடுக் கடல் அனுபவம்.

