ஏழிசை மன்னர் எம்.கே.தியாக ராஜா பாகவரது நாடக குழுவில் இடம் பெற்ற பழம் பெரும் நடிகை வி.வசந்தா. நேற்று மாலை 3.40 மணியளவில் அவரது வீட்டில் காலமானார். 82 வயதான இவர் நீண்ட நாட்களாக உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார்.
நாடகத்திலிருந்து திரையுலகில் நுழைந்த இவர், ‘இரவும் பகலும்’ படத்தில் நடிகர் ஜெய்சங்கருக்கு ஜோடியாகவும் , ‘கார்த்திகை தீபம்’ படத்தில் அசோகனுக்கு ஜோடியாக வும் நடித்திருந்தார்.
‘மூன்றாம் பிறை’ படத்தில் ஸ்ரீதேவியின் அம்மாவாக, ‘ராணுவ வீரன்’ படத்தில் ரஜினிகாந்த்தின் அம்மாவாக நடித்துள்ளார்.
மேலும் மூன்று முகம் உள்ளிட்ட தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் இவர் நடித்துள்ளார். திரை உலகை சேர்ந்தவர்களும் நடிகர் சங்க நிர்வாகிகளும் இவரது மறைவுக்கு இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இன்று பிற்பகல் இறுதி சடங்கு நடந்தது.
இரங்கல் செய்தி
தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி :
சின்னஞ்சிறு வயதில், ஏழிசைமன்னர்.
எம்கே. தியாகராஜாவின் குழுவிலிருந்து ஆரம்பிக்கிறது
வி. வசந்தா அவர்களின் கலைப் பயணம்.. பாடலிலிருந்து நாடகம், நாடகத்திலிருந்து சினிமாவென அவரின் கலையுலக எல்லைகளை விரிவாக்கி கொண்டே பயணித்தார். எத்தனை நினைவில் நிற்கும் கதாபாத்திரங்கள்,
‘இரவும் பகலும்’ படத்தில் நடிகர் ஜெய்சங்கர் அவர்களுக்கு ஜோடியாகவும் , ‘கார்த்திகை தீபம்’ படத்தில் அசோகன் அவர்களுக்கு ஜோடியாகவும் நடித்திருந்தார். ‘மூன்றாம் பிறை’ படத்தில் ஸ்ரீதேவி அவர்களின் அம்மாவாக, ‘ராணுவ வீரன்’ படத்தில் ரஜினிகாந்த் அவர்களின் அம்மாவாக நடித்துள்ளார்.
கலைக்கு மொழி உண்டா என்ன? தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு, மலையாளம் ,கன்னடப் படங்களில் கோலோச்சினார்.
எப்போதும், புன் சிரிப்பு… தாய்மை வடியும் பேச்சு தானாக முன்வந்து உதவும் மனப்பான்மை…
நல்லதொரு ஆன்மா.. இன்று (19.05.2023) தன் பயணத்தை முடித்து கொண்டது. ஆனால் அவர் கலைப்படைப்புகள் என்றும் நம் நினைவில் நிழலாடிக்கொண்டேயிருக்கும் அன்னாரை இழந்து வாடும் உற்றார்க்கும், சுற்றத்தார்க்கும், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் அனுதாபங்கள்.
இவ்வாறு எம்.நாசர் கூறியுள்ளார்.
