சாதிச் சான்றிதழ் வழங்க அதிகாரிகள் மறுத்ததால் குறவர் இனத்தைச் சார்ந்த தொழிலாளி வேல்முருகன் உயிரிழப்புக்கு அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் ரா.சரத்குமார் இரங்கல் தெரிவித்திருக்கிறார். அது வருமாறு:
காஞ்சிபுரம் மாவட்டம், படப்பையைச் சேர்ந்த வேல் முருகன் எனும் மலைக்குறவர் இனத்தைச் சேர்ந்த தொழிலாளி 5 ஆண்டுகளாக போராடியும், தனது மகனுக்கு சாதி சான்றிதழ் பெற முடியாததால் சென்னை உயர்நீதி மன்ற வளாகத்தில், தீக்குளித்து உயிரிழந்த துயரச் சம்பவம் மிகவும் வருத்தமளிக்கிறது.
கல்வி நிலையங்களில் அரசு கேட்கும் ஆவணங்களை முறை யாக சமர்ப்பிப்பதற்காக, தன் பிள்ளைகளின் எதிர்கால நலனுக்காக அரசு அலுவலகம் சென்று சாதிச் சான்றிதழ் கோரிய ஒரு குடிமகனுக்கு 5 ஆண்டுகளாக சாதிச் சான்றிதழ் வழங்காமல் அதிகாரிகள் நடந்து கொண்ட விதமும், அலட்சியப்படுத்தி அலைக்கழித்த செயலும், சட்டத்திற்கு புறம்பான அத்து மீறலாக கருதப்பட்டு கண்டிக் கத்தக்கது.
தொழிலாளி வேல்முருகன் அவரது தனி விருப்பத்திற்காக சாதிச் சான்றிதழ் கோரவில்லை. அரசின் சலுகை பெறவும், சமுதாயத்தில் அவரது குழந்தைகளின் எதிர்காலம் நன்முறையில் அமைத்து தருவதற்காக கல்வி நிலையங்களில் சமர்ப்பிப்பதற் காகவும் மட்டுமே கோரியுள்ளார் எனும் போது, குடிமகனிடம் ஆவணங்களை கேட்கும் அரசு, அதை தராமல், அடிப்படையை உணராமல் அலட்சியப்படுத்துவது எந்த விதத்தில் நியாயம்?
வேல்முருகனுக்கு மன உளைச்சல் ஏற்படுத்தி தற்கொலைக்கு தூண்டிய, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அனைவர் மீதும் பாரபட்சமின்றி துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படுவது அவசியம். அதேவேளையில், தீக்கிரையாகி உயிருக்கு போராடும் வேல்முருகனுக்கு முதலுதவி சிகிச்சை வழங்காமல், கேள்விகள் கேட்டுக் கொண்டி ருப்பது சமூகத்தின் மனிதாபி மானமற்ற தன்மையை பறைசாற்றி மனித இனத்தை வெட்கக்கேடான நிலைக்கு தள்ளியுள்ளது.
கருகிய உடலுடன் கேள்விக்கு பதில் கூறும் அந்த காணொலியை காணும் உள்ளங்கள் பதறுவது அதிகாரிகளுக்கும், அரசிற்கும் தெரியவில்லையா? சம்பவ இடத்தில் இருந்த மனிதர்களுக்கு மனிதாபிமானத்தை பற்றி பாடம் புகட்ட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இனி எந்தவொரு சூழலிலும் இதுபோன்ற அவலம் நடந்தேறாத வாறு கூடுதல் கவனத்துடன் அரசு அலுவலகங்கள் கண்காணித்து செயல்பட வேண்டும் எனவும், எந்த கோரிக்கையை வேல்முருகன் விட்டுச் சென்றாரோ, அதனை உடனடியாக பரிசீலித்து, தமிழக அரசு மலைக்குறவர் இன மக்களுக்கு சாதிச் சான்றிதழ் வழங்கிட வேண்டுமெனவும் கேட்டுக் கொள்கிறேன்.
மேலும், அவரது குடும்பத்தின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, உரிய இழப்பீடும், குடும்பத்தில் ஒருவருக்கு வேலைவாய்ப்பும் வழங்கிட வேண்டும் எனவும் தமிழக அரசை கேட்டுக் கொள்கிறேன்.
அவரது குடும்பத்தார்க்கும், நண்பர்களுக்கும், உற்றார் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு ரா.சரத்குமார் கூறியுள்ளார்.
