படம்: சீதா ராமம்
நடிப்பு: துல்கர் சல்மான், ராஷ்மிகா, மிருணால் தாகூர், பெர்ல கட்டா சுமந்த்குமார், பிரகாஷ்ராஜ், சச்சின் கடேகர், பூமிகா சாவ்லா, ரோகிணி, ராகுல் ரவீந்திரன், கவுதம் வாசுதேவ் மேனன், வெண்ணிலா கிஷோர், தருண் பாஸ்கர், சுனில், முரளி ஷர்மா
தயாரிப்பு: அஸ்வினி தத், சுவப்னா தத்
இசை: விஷால் சந்திரசேகர்
ஒளிப்பதிவு : பி.எஸ்.வினோத், சி.எஸ்.கிருஷ்ணா
இயக்கம் அனுராகபுடி
பி ஆர் ஓ: யுவராஜ் ( தமிழ்)
ராணுவத்தில் லெப்டினென்ட் அதிகாரியாக இருக்கிறார் ராம் (துல்கர் சல்மான்). ராணுவ வீரர்களை பேட்டி எடுக்க வரும் ரோகிணியிடம், ” தான் தனி ஆள். உறவென்று சொல்ல யாரும் கிடையாது “என்கிறார் ராம் இந்த விஷயத்தை ரேடியோவில் பகிரும் ரோகிணி ராமுக்கு ஒரு தாயாக தான் கடிதம் எழுதியதாக சொல்கிறார். இதையடுத்து இந்தியா முழுவதிலிருந்தும் ராமுக்கு பலர் கடிதம் எழுதி நலம் விசாரிக்கின்றனர். சீதா மகாலட்சுமி (மிருணால் தாகூர்) என்பவர் அவரை காதல் கணவனாக ஏற்றுக் கொண்டு கடிதம் எழுதுகிறார். அந்த கடிதம் ராமை ஈர்க்கவே சீதாவை தேடி பயணப்படுகிறார்ராம். பல இடங்களில் தேடி ஒரு வழியாக கண்டுபிடிக்கிறார். கண்முன் ராம் வந்து நின்றதும் திணறிப்போகும் சீதா அவரை தவிர்க்க முடியாமல் பழகுகிறார். எளிய குடும்பத்தை சேர்ந்தவர் சீதா என்றெண்ணி ராம் பழகுகிறார். ஆனால் சீதாவோ அரண்மனையின் இளவரசி அவரது நிஜப் பெயர் நூர்ஜஹான். ரன் ரின் உண்மையான காதல் சீதாவை நெகிழ வைக்கிறது அவரும் ராமை காதலிக்கிறார். ஒரு கட்டத்தில் அரண்மனைக்கு இந்த விஷயம் தெரிய வர அதிர்ச்சி அடைகின்றனர்.சீதாவை வேறு நாட்டு இளவரசருக்கு திருமணம் செய்ய எண்ணுகின்றனர் அதை மறுத்து அரண்மனையை விட்டு சீதா வெளியேறுகிறார் அவர் ராமை திருமணம் செய்தாரா? இல்லையா ?என்பதை இந்தியா- பாகிஸ்தான் ராணுவ மோதலுடன் படம் பதில் சொல்கிறது.
காதல் கதைகள் பல வித கோணங் களில் வெளியாகியிருக்கிறது. சீதா ராமம் பெயருக்கு ஏற்றதுபோல் ஒரு மாறுபட்ட காதல் கதைதான். துல்கர் சல்மான், மிருணால் தாகூர் மறக்கமுடியாத காதல் ஜோடிகளாக பதிந்துவிடுகின்றனர்.
ராணுவ லெப்டினன்ட்டாக துல்கர் சல்மான் ஒரு மாறுபட்ட நடிப்பையும், ராமாக காதல் மன்னனாகவும் வாழ்ந்திருக்கிறார்.
1964 ம் ஆண்டு பின்னணியில் கதை தொடங்கி 80களில் முடிவது போல் அமைக்கப்பட்டிருக்கின்றது. அதற்கான காட்சிகளில் கொஞ்சமும் சமரசம் செய்து கொள்ளாமல் தத்ரூபமாக அமைத்திருப்பது படத்தை அதிஅற்புதமாக தூக்கி நிறுத்துகிறது.
எனக்கு உறவுகள் என்று யாரும் கிடையாது என்று எதார்த்தமாக துல்கர் சொல்லும்போது எல்லோரையும் உறவுகளாக மாற்றிக்கொள்ளபோகிறார் என்று யூகிக்க முடியவில்லை மறுநாள் முதல் மூட்டை மூட்டையாக அவருக்கு எல்லா மாநிலங்களிலிருந்தும் கடிதங்கள் வந்து குவிவதும் ஒரு பெண் அவரை அண்ணனாக எண்ணி அதிரசம் செய்து அனுப்புவதும் என உறவுகள் பெருகுகின்றன.
சீதா மகாலட்சுமியின் காதல் மனைவி கடிதம் துல்கரை மட்டுமல்ல இளவட்டங்களையும் மயக்குகிறது. சீதாவான மிருணாலை தேடி துல்கர் புறப்பட்டதும் காதல் பயணமும் தொடங்குகிறது.
மிருணாலை தேடி ரயிலில் புறப்படும் துல்கர் ஒருவழியாக அவரை கண்டுபிடித்ததும் அவரது அழகில் துல்கர் மட்டுமல்ல ரசிகர்களும் லயித்துவிடுகிறார்கள்.
மிருணாலிடம் கண்ணியம் காப்பதுடன் காதல் மொழிகளை தமிழில் கோர்த்து மாலையாக சூட்டும் துல்கரின் தமிழ் உச்சரிப்புக்கு ஒரு சபாஷ் போடலாம்.
தனக்கு கடிதம் எழுதிய சக மனிதர்களையும் சந்திக்கும் துல்கர் தங்கையாக கடிதம் எழுதியவரின் வீட்டுக்கு செல்ல அவரோ குழந்தையை காப்பாற்ற விபசாரம் செய்வதை யறிந்து அதிரும் துல்கர் அவரை மட்டுமல்லாமல் அந்த தொழிலில் ஈடுபட்டுள்ள மற்ற பெண்க ளையும் மீட்டு மறுவாழ்வளிப்பது நெகிழ வைக்கிறது.
இறுதிகட்டத்தில் பாகிஸ்தான் சிறையில் கைதியாக சிக்கிக் கொள்ளும் துல்கர் உயிர்பிழைக்க வாய்ப்பு கிடைத்தும் அதை சக கைதிக்கு விட்டுக் கொடுப்பது அவரது கேரக்டரின் மீது தனி மரியாதை ஏற்படுத்துகிறது.
சீதா மகாலட்சுமியாக மிருணால் தாகூர் வாழ்ந்திருக்கிறார். துல்கர் மீதான காதலை அழகு சிரிப்பிலும், கவர்ச்சி பார்வையிலும் வெளிப்படுத் துவது அழகோ அழகு.
பாகிஸ்தானுக்கு சென்ற துல்கர் என்னவானார் என்று தெரியாமல் மிருணால் தவிக்கும் தவிப்பு இந்த காதல் ஜோடி எப்படியாவது ஒன்று சேர வேண்டுமே என்ற தவிப்பை ஏற்படுத்துகிறது.
ராஷ்மிகா பாகிஸ்தான் பெண்ண ணாக மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். வழக்கமான அவரது கண் மிரட்ட லுக்கு இயக்குனர் கட்டுப் பாடு போட்டிருக்கிறார். ஆனால் நடிப்புக்கு கட்டுப்பாடு போடவில்லை. ஆனாலும் ராஷ்மிகாவின் மீதான எதிர்பார்ப்பு கொஞ்சம் ஏமாற்றம் அளிக்கிறது.
மதன் கார்க்கியின் பாடல்களும் விஷால் சந்திரசேகரின் இசையும் தேனோடு கலந்த பாலாக இனிக் கிறது.
பி.எஸ்.வினோத், சி.எஸ்.கிருஷ்ணா இருவரின் ஒளிப்பதிவும் கண்களுக்கு இதமாக வண்ணங்களையும் பனிச்சாரலையும் தூவுகிறது. அரண்மனை காட்சிகள் பிரமிப்பு.
கற்பனை எல்லாவற்றையும் காட்சிகளாகவும் , சுவையான திரைக்கதையாகவும் திரட்டி தந்திருக்கும் இயக்குனர் அனுராகபுடி கிளைமாக்ஸ் முடியும்போது அரங்கில் கைதட்டல் பெறுகிறார். நூர்ஜ ஹானை சீதா மகாலட்சுமியாக மாற்றியதற்காகவும் இயக்குனரை பாராட்டலாம்.
சீதா ராமம்- அழகு பொங்கும் காதல் காவியம்.

