படம்: பிளட் மணி (Blood Money)
நடிப்பு: பிரியா பவானி சங்கர், கிஷோர், ஹிரிஷ், பஞ்சு சுப்பு, வினோத் சாகர், ஸ்ரீலேகா ராஜேந்திரன்
தயாரிப்பு: இர்பான் மாலிக்
இசை:சதிஷ் ரகுநந்தன்
ஒளிப்பதிவு: ஜி.பாலமுருகன்
இயக்கம்: சர்ஜுன் கே.எம்.
ரிலீஸ்: ZEE 5
பி ஆர் ஒ: சதிஷ் (AIM)
குடும்பத்தை நல்லவிதமாக வாழவைக்கும் எண்ணத்துடன் பட்டுக்கோட்டையை சேர்ந்த அண்ணன், தம்பி குவைத்தில் வேலை செய்யச் செல்கின்றனர். அங்கிருந்து குடும்பத்தின ருக்கு வரும் தகவல் அதிர்ச்சி அளிக்கிறது. ஒரு பெண்ணை விபத்து ஏற்படுத்தி கொன்றதற்காக இருவருக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்ற அந்நாட்டு கோர்ட்டு உத்தரவிடுகிறது. மறுநாள் தூக்கு தண்டனை நிறைவேற்றும் நிலையில் அந்த தகவல், டிவி நிருபர் ரெய்சலுக்கு தெரிய வருகிறது. ஏற்கனவே அவர்களது தண்டனையை குறைக்க கேட்டும் குவைத் அரசு மறுத்த நிலையில் மீண்டும் தூக்கிலிருந்து அண்ணன், தம்பி இருவரையும் காப்பாற்றும் முயற்சியில் ரெய்ச்சல் முயற்சி மேற்கொள்கிறார். உண்மையில் நடந்தது என்ன என்பதை அறிய ஆராயும் பணியில் பல திடுக்கிடும் தகவல்கள் சேகரிக்கிறார். அதன் அடிப்படையில் போராடி இருவரின் உயிரையும் அவரால் காப்பாற்ற முடிகிறதா என்பதை கிளைமாக்ஸ் விடை அளிக்கிறது.
பிளட்மணி என்று படத்திற்கு டைட்டில் வைக்கப்பட்டிருப்பது எதற்காக என்று ஆவலுடன் பார்க்கத் தொடங்கியதும் அதன் அர்த்தம் உயிர் காக்கும் சக்தி வாய்ந்தது என்பது தெரிகிறது.
விபத்தில் ஒருவரை கொன்று விட்டால் அந்த குடும்பத்துக்கு பல லட்சம் நஷ்ட ஈடு தரப் பட்டு அந்த குடும்பத்தாரிட மிருந்து மன்னிப்பு கடிதம் பெற்றுத்தந்தால் சம்பந்தப் பட்டவர்கள் தூக்கிலிருந்து தப்பிக்க குவைத்தில் சட்டம் உள்ளது.
குவைத் நாட்டில் வேலைசெய்யும் கிஷோர் மற்றும் அவரது தம்பி இருவரும் அங்குள்ள சிறையில் அடைபட்டு வேதனை யில் விம்முவது உருக்கம்.
கிஷோருக்கும் அவரது தம்பிக்கும் நாளை மதியம் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என்று தீர்ப்பு வந்ததும் அதைக்கேட்டு கிஷோர் அவரது தம்பி கதறுவதும் நெஞ்சை பிழிகிறது.
கிஷோர் மற்றும் அவரது தம்பியின் உயிரை காப்பாற்ற பிரியா பவானி உண்மையான முயற்சிகளை கையிலெடுத்து அதில் பல்வேறு காரணங்களை கண்டறிவதும் அதைக் கொண்டு டிவியில் செய்தி வெளியிட்டு பரபரப்பான சூழலை உருவாக்கி அடுத்து என்ன நடக்குமோ என்ற பதற்றத்தை காட்சிக்கு காட்சி அதிகரிக்கச் செய்கிறது.
அவமானங்களை தாங்கிக் கொண்டு சக ஊழியர்களின் உதவியுடன் குவைத்தில் தூக்கு தண்டனையை எதிர்நோக்கி இருக்கும் கிஷோர் மற்றும் அவரது தம்பியை தொடர்பு கொள்ள முயல்வதும், விபத்தில் இறந்ததாக கூறப்படும் பெண்மணியின் குடும்பத்தாரிடம் மன்னிப்பு கடிதம் வாங்கி வர திருட்டுப் படகில் இலங்கை செல்வதும் என பிரியா பவானி படத்தை தோளில் சுமந்திருக்கிறார்.
ஒரு கட்டத்தில் எல்லாமே முடிந்து விட்டது போன்ற உணர்வில் விரக்தி அடையும் பிரியா திடீரென்று கிடைக்கும் சிறு தகவலை கொண்டு சுறுசுறுப்பு அடைந்து முயற்சிகளை தொடர்வது என பம்பரமாக சுழன்றிருக்கிறார்.
கிஷோரையும் அவரது தம்பியின் தூக்கு தண்டனையையும் குறைக்க பெற்றோரிடம் மன்னிப்பு கடிதம் வாங்கி வர இலங்கைக்கு திருட்டு கப்பலில் ஏறிச் செல்லும் பிரியா பவானி திடுக் திடுக்கென நெஞ்சை படப்படக்க செய்கிறார்.
பிளட்மணி என்று பெயர் வைத்தநிலையில் அப்படத்தை ரத்தம் கொதிக்கும் வகையில் இரண்டு உயிர்களின் ஊசலாட்டத்தை மையப்படுத்தி படத்தை சஸ்பென்சாக இயக்கி இருக்கும் இயக்குனர் சர்ஜுன் கே .எம். பெயரை தட்டிச் செல்கிறார்.
ZEE 5 உடன் இணைந்து இர்பான் தயாரித்திருக்கிறார்.
சதிஷ் ரகுநந்தன் இசை அமைத்திருக்கிறார். ஜி.பாலமுருகன் ஒளிப்பதிவும் துணை நிற்கிறது.
பிளட் மணி – வெளிநாடு செல்ல துடிப்பவர்களுக்கு படிப்பினை.

