Trending Cinemas Now
Uncategorized

தமிழ் சினிமாவில் வரலாற்று படங்கள் .ஒரு பார்வை.

TMJA தீபாவளி மலருக்கு:

தமிழ் சினிமாவில் வரலாற்று படங்கள் .ஒரு பார்வை.

தமிழ் திரையுலகில் பிளாக் அண்ட் ஒயிட் காலத்திலிருந்தே சரித்திரப்  படங்கள், புராணப் படங்கள் வந்துக் கொண்டிருக்கின்றன, சரித்திர படங்களுக்கு முன்பாக புராணப் படங்கள்தான் எம்.கே. தியாகராஜா பாகவதர் காலத்தில் வந்தன. பல புராணப் படங்கள் பக்தியை பேசினாலும் சில படங்கள் சாதி பாகுபாடு, இன பாகுபாடு போன்றவற்றைக் கொண்டிருந்தன.
1950கள் வரை i தொடால் தீட்டு, கைபட்டால் குற்றம். ஆண்டான் – அடிமை. மேல் சாதி- கீழ்சாதி. உயர்ந்தவன்- தாழ்ந்தவன். ஏழை -பணக்காரன் என பல பாகுபாடுகள் வலியுறுத்தப்பட்டன.  இந்த காலகட்டத்தில்தான் திரையுலகில் ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்தும் வகையில்  சமூக நீதி கருத்துகளை  தாங்கியபடி திமுக தலைவர் மறைந்த முத்தமிழிறிஞர் கலைஞர் கருணாந்தி எழுதிய பராசக்தி திரைக்கு வந்தது, இது தமிழ் சினிமா வரலாற்றை புரட்டிப் போட்டது.

சேர சோழ, பாண்டிய மன்னர்களின் ஆட்சியை மையமாக கொண்டும், வெள்ளையனை எதிர்த்து போராடிய மன்னர்கள், சுதந்திர தியாகிகள் போன்றவர்களை மையமாக கொண்டும் சரித்திர படங்கள் வந்தன. புரட்சித் தலைவர் எம் ஜி ஆர், நடிகர் திலகம் சிவாஜி பல சரித்திரப் படங்களில் நடித்தனர். சரித்திரத்தில் இடம் பிடித்த சில தனிமனிதர்களின் வாழ்க்கையும் வாழ்க்கை சரித்திர படங்களாக வந்துள்ளன.

மன்னர் கால கதைகளை மையமாக கொண்டு மர்மயோகி, நாடோடி மன்னன், சர்வாதிகாரி, ஆயிரத்தில் ஒருவன், மன்னாதி மன்னன், , வீர்பாண்டிய கட்ட பொம்மன், ராஜராஜ சோழன், உத்தம புத்திரன், தூக்கு தூக்கி, வஞ்சிக்கோட்டை வாலிபன், அரசகட்டளை, மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன், சுதந்திரத்தை மையமாக கொண்டு கப்பலோட்டிய தமிழன், காந்தி, காம ராஜ், பாரதி என எண்ணற்ற படங்கள் வந்தன. இதில் சில படங்கள் கற்பனை கதைகளாவும் அமைந்தன. பல, சரித்திர பின்னணியில் உருவாகின. அதில்  சில துளிகளை இப்போது காணலாம்:

*  வீரபாண்டிய கட்ட பொம்மன்: 18ம் நூற்றாண்டில் தென்னிந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்த வீரபாண்டியனின் வரலாற்றை சொல்லும் படமாக உருவானது. இதில் வீரபாண்டிய கட்டபொம்மனாக  சிவாஜி, நடித்திருந்தார்.  ஜெமினி கணேசன், பத்மினி, எஸ்.வரலட்சுமி போன்றவர்களும் பிரதான வேடங்களில்  நடித்திருந்தனர். பி. ஆர்.பந்துலு இயக்கினார். 1959ம் ஆண்டு மே 16ல் வெளியானது.

* காஞ்சித்தலைவன்: பல்லவர்கள், சாலுக்கிய மன்னர்களுக்கிடையேயான மோதலை சொல்லும் படம். நரசிம்ம பல்லவராக எம் ஜி ஆர் நடித்திருந்தார். பி.பானுமதி சோழ குமாரியாக நடித்திருந்தார். இப்படம் 1963ம் ஆண்டு அக்டோபர் 25ல் வெளியானது.

* ராஜா தேசிங்கு: செஞ்சியை ஆண்ட ராஜா சுவரூப் சிங் பண்டெல்லா மன்னரை மையமாக கொண்ட கதை. இதில் எம் ஜி ஆர் தேசிங்கு ராஜா வேடம் ஏற்றிருந்தார். பானுமதி, பத்மினி போன்றவர்களும் நடித்திருந்தனர். இப்படம் 1960ம் ஆண்டு செப்டம்பர் 2ம் தேதி வெளியானது.

* ராணி சம்யுக்தா:  இளவரசி சம்யுக்தாவின் உருவப்படத்தைப் பார்த்த பிருத்விராஜன் காதல் கொள்கிறார். அவரை அவமதிக்க, சம்யுகதாவின்  தந்தை ஜெயச்சந்திரன், இளவரசியின் சுயம்வரம் (மணமகனைத் தேர்ந்தெடுக்கும் சடங்கு) நடைபெறும் அரண்மனை மண்டபத்தின் நுழைவாயிலில் அவரது சிலையை நிறுவுகிறார்.. அதைக் கேட்டு, பிருத்விராஜன் குதிரையில் அந்த இடத்திற்கு விரைந்து தனது காதலியை தூக்கிச் செல்கிறார், அங்கிருந்த மற்றவர்கள் அதிர்ச்சியடைந்து திகைத்துப் போகிறார்கல்.

இதில் எம் ஜிஆர், பிருத்விராஜானாகவும், ராணி சம்யுக்தாவாக  பத்மினியும் நடித்தனர், டி.யோகானந்த் இய்க்கியிருந்தார். இப்படம்  1962 ஜனவரி மாதம் 14ம்தேதி திரைக்கு வந்தது.

* மன்னாதி மன்னன்:  உரையூர் இளவரசன் மணிவண்ணன் நடன மங்கை சித்ராவை காதலிக்கிறார். சோழ மன்னன் கனிகண்ணனும் சித்ராவை விரும்புகிறார். இந்த காதல் மோதல் அரச மோதலாக மாறுகிறது. இதில் மணிவண்ணனாக எம் ஜிஆர், சித்ராவாக பத்மினி. கனிகண்ணனாக பி.எஸ்,வீர்ப்பா நடித்திருந்தனர். எம்.நடேசன் இயக்கியிருந்தார். 1960ம் ஆண்டு அக்டோபர் 19ல் வெளியானது.

*  ராஜராஜ சோழன்: ராஜராஜ சோழன் தஞ்சை பெரிய கோயிலை கட்டுகிறார். பின்னர் சோழ சாம்ராஜ்யத்தை அழிக்கக வரும் எதிரிகளை எப்படி ராஜராஜன் வீழ்த்துகிறார் என்பதை கதை சொல்கிறது. ராஜராஜ சோழனாக சிவாஜி நடித்திருந்தார். இப்படத்தை ஏ.பி.நாகராஜன் இயக்கியிருந்தார்.

* சிவகங்கை சீமை:  சிவகங்கை சீமையை 1801ம் ஆண்டு பிரிட்டிஷார் கைப்பற்ற வரும் போது பிரிட்டிஷாரை எதிர்த்து சின்ன மருது, பெரிய மருது போராடிய வரலாற்றை மையமாக கொண்டு உருவான படம். கவியரசு கண்ணதாசன் இக்கதையை எழுதியிருந்தார். டி.கே.பகவதி, எஸ்.எஸ். ராஜேந்திரன் நடித்திருந்தனர். கே.சங்கர் இயக்கியிருந்தார். 1959ம் ஆண்டு மே மாதம் 19ல் வெளியானது.

*  பூம்புகார்:  மதுரை ஆண்ட முதலாம் பாண்டிய  நெடுஞ்செழியன் கோவலன், கண்ணகி மையமாக கொண்ட கதை. பி.நீலகண்டன் இயக்கியிருந்தார். எஸ்.எஸ். ராஜேந்திரன், சி.ஆர். விஜயகுமாரி நடித்திருந்தனர். 1964ம் ஆண்டு செப்டம்பர் 18ம் தேதி வெளியானது.

*  மதுரை வீரன்: காவிரியையொட்டிய தொட்டியம் பகுதி இளவரசி பொம்மியை தாழ்ந்த ஜாதியை சேர்ந்த வீரன் காதலிக்கிறான்.இதன் பின்னணியில் இப்படத்தின் கதை அமைக்கப்பட்டது. மதுரை வீரனாக எம் ஜிஆர் நடித்திருந்தார். பொம்மியாக பி.பானுமதி நடித்திருந்தார். டி.யோகானந்த் இப்படத்தை இயக்கியிருந்தார். 1956ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13ம் தேதி ரிலீஸானது.

* மதுரை மீட்ட சுந்தர பாண்டியன்: சுந்தரபாண்டியன் என்ற துணிச்சலான இளவரசன். ஒரு பயங்கரமான அரசனின் கைகளில் இருந்து ஒரு ராஜ்யத்தை காப்பாற்றுகிறான். பைந்தமிழ் குமரன் என்ற பயணக் கவிஞர் என்ற அடையாளத்தின் கீழ், அவர் தனது வார்த்தைகளால் மக்களின் உணர்வைத் தூண்டி, சுதந்திரம் மற்றும் உரிமைகளைக் காக்கும் தனது லட்சியத்தை எப்படி நிறைவேற்றுகிறார் என்பது கதை.

சுந்தரபாண்டியனாக எம் ஜி ஆர் நடித்திருந்தார். இப்படத்தை எம் ஜி ஆர் இயக்கியிருந்தார். 1978 ஜனவர் 14ம் தேதி வெளியானது.

* ஆயிரத்தில் ஒருவன் (2010): 12ம் நூற்றாண்டில் சோழர்களை ஆட்சியிலிருந்து பாண்டியர்கள் விரட்டுகின்றனர். தங்கள் வாரிசுகளை காப்பாற்ற சோழர்கள் கூட்டம் ரகசிய இடத்தில் வசிக்கின்றனர், அவர்கள் வசிப்பிடத்தை சரித்திர ஆராய்ச்சியாளர் கண்டுபிடிக்க செல்கிறார். அதன்பிறகு நடப்பது என்ன என்பதை மையமாக கொண்டு இக்கதை அமைக்கப் பட்டிருந்தது. செல்வ ராகவன் இயக்கியிருந்தார். இதில் மெய்ஞானந்த சிவபாத சேகர சோழராக ஆர். பார்த்திபன், மூன்றாம் ராஜேந்திர சோழனின் வழித்தோன்றல் மற்றும் நாடுகடத்தப்பட்ட சோழ வம்சத்தின் மன்னனாக நடித்திருந்தார். போர்ட்டராக கார்த்தி நடித்தி ருந்தார். ரீமாசென், ஆண்டிரியா ஆகியோரும் நடித்திருந்தனர். 2010ம் ஆண்டு ஜனவர் 14ம் தேதி படம் வெளியானது.

* பொன்னர் சங்கர்: பெரியமலை கொழுந்து கவுண்டர் மன்னரின் குடும்பத்தை மையமாக கொண்ட கதை. கலைஞர் கருணாநிதி எழுதிய பொன்னர் சங்கர் நாவலை மைய மாக வைத்து இப்படம் உருவானது. பொன்னர், சங்கர் இருவேடங்களில் பிரஷாந்த் நடித்திருந்தார்.  தியாகராஜன் இயக்கியிருந்தார். 2011ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 9ல் வெளியானது.

*  பொன்னியின் செல்வன்: 10ம் நூற்றாண்டில் சோழ ராஜ்ஜியத்தை  வீழ்த்த  நடக்கும் சதியை மையமாக வைத்து கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவவலை ஆதாரமாக கொண்டு இப்படம் உருவாகியிருக்கிறது. மணிரத்னம் இயக்கியுள்ளார். விக்ரம், ஜெயம்ரவி, கார்த்தி, சரத்குமார், பார்த்திபன், ஐஸ்வர்யாராய், திரிஷா போன்றவர்கள் நடித்துளனர். இப்படம் சென்ற 2022ல் செப்டம்பர் 30ல் வெளியானது. இப்படத்தின் இரண்டாம் பாகம் 2023ல்  வெளியாக உள்ளது.

* காந்தி: மன்னர்கள் பற்றிய சரித்திர படங்கள் தவிர பிரிட்டிஷாரை எதிர்த்து போராடி இந்தியாவுக்கு சுதந்திரம் பெற்று தந்த தேசத் தந்தை மகாத்மா காந்தியின் வாழ்க்கை சரித்திர கதை ”காந்தி” பெயரில் படமானது. ரிச்சர்ட் அட்டன்பரோ இப்படத்தை இயக்கினார்.  காந்தி வேடத்தில் பென் கிங்ஸ்லே நடித் தார். 1982ம் ஆண்டு டிசம்பர் 3ம் தேதி படம் வெளியானது.

* கப்பலோட்டிய தமிழன்: பிரிட்டிஷாரை எதிர்த்து போராடியதுடன் பிட்டிஷாருக்கு சவால் விடும் வகையில் கப்பல் விட்ட வ.உ.சிதம்பரனார் வாழ்க்கை சரித்திரத்தை மையமாக வைத்து இப்படம் இருவானது. பி.ஆர்.பந்துலு இயக்கியிருந்தார். வ.உ. சிதம்பரம் பிள்ளையாக சிவாஜி நடித்திருந்தார். இப்படம் 1961ம் ஆண்டு நவம்பர் 7ம் தேதி திரைக்கு வந்தது.

*  பாரதி: சுதந்திர தாகப் பாடல்களை நரம்புகள் முறுக்கேற தந்த முண்டாசுக் கவி பாரதி யாரின் வாழ்க்கையை மையமாக வைத்து பாரதி படம் உருவானது. ஞான ராஜசேகரன் இப்படத்தை இயக்கியிருந்தார். பாரதியாக ஷயாஜி ஷிண்டே நடித்தார். அமரசிகா மணியாக தேவயானி நடித்திருந்தார். 2000ம் ஆண்டில் இப்படம் வெளியானது.

* காமராஜ்: தமிழகத்தை ஆண்டதுடன் டெல்லியில் யாரை பிரதமராக்குவது என்பதில் முக்கிய பங்கு வகித்து கிங்மேக்கராக வாழ்ந்த கர்மவீரர் காமராஜரின் வாழ்க்கை சரித்திரம் காமராஜ் என்ற பெயரில் உருவானது. ஏ.பாலகிருஷ்ணன் இயக்கியிருந்தார். காமராஜராக ரிச்சர்ட் மதுரம் நடித்திருந்தார். 2004ம் ஆண்டு பிப்ரவரி 13ம் தேதி இப்படம் வெளியானது.
இப்படத்தின் 2ம் பாகம் தற்போது உருவாகி வருகிறது.

* தலைவி: மறைந்த தமிழக முதல்வர் அதிமுக பொதுச் செயலாளர் ஜெ.ஜெயலலிதா வாழ்க்கை சரித்திரம் தலைவி பெயரில் உருவானது, விஜய் இயக்கியிருந்தார். ஜெயலலிதாவாக கங்கனா ரனாவத் நடித்திருந்தார். இப்படம் 2021ம் ஆண்டு செப்டம்பர் 10ம் தேதி வெளியானது.

மேலும் பிரதமர் மோடி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், கிரிக்கெட் வீரர்கள் கபில்தேவ், சச்சின் டெண்டுல்கர், மஹேந்திரசிங் டோனி போன்ற பிரபலங்களின் வாழ்கை சரித்திர படங்கள்.  ஜான்சி ராணி, மராட்டிய சிவாஜி போன்ற வடநாட்டு சுதந்திர போராட்ட வீரர்கள் பற்றிய சரித்திர படங்களும் உருவாகின.

கட்டுரை by

கே.ஜெயச்சந்திரன்
Trendingcinemasnow.com

Related posts

சுமோ (பட விமர்சனம்)

Jai Chandran

Singer Velmurugan Corona Awareness Song

Jai Chandran

100 பேர் முன்பு நடிப்பது எளிதல்ல – இயக்குனர் கவுதம் மேனன்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend