மோனிகா புரடக்க்ஷன்ஸ் சார்பில் பி சண்முகம் தயாரிக்கும் படம் அரிசி.
இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் ரா.முத்தரசன் விவசாயியாக நடிக்கிறார். அவரது மனைவியாக ரஷ்யா மாயன் நடிக்கிறார். முக்கிய வேடத்தில் சமுத்திரக்கனி நடிக்கிறார். இவர்களுடன் இளங்கோ, சுபா, சிசர் மனோகர், ராஜா திருநாவுக் கரசு, அர்ஜுன்ராஜ், மகிமை ராஜ் நடிக்கின்றனர்.
இப்படத்துக்கு இசை அமைக்க இசைஞானி இளையராஜாவிடம் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. ஜான்சன் ஒளிப்பதிவு செய்கிறார். அசோக் சாலமன் எடிட்டிங் செய்கிறார். சேது ரமேஷ் அரங்கம் அமைக்கிறார். மகேந்திர பிரசாத் இணை தயாரிப்பு செய்கிறார்.
பிரபல இயக்குனர்களிடம் பணியாற்றிய எஸ்.ஆர்.விஜய குமார் கதை, திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார்.
அரிசி படம் பற்றி இயக்குனர் எஸ்.ஆர்.விஜயகுமார் கூறியதாவது:
அரிசி படம் முழுக்க விவசாய பின்னணியில் உருவாகும் படம். அந்த காலத்தில் விவசாயிகள் அறுவடை செய்த பிறகு தங்கள் வீட்டுக்கு நெல்லை கொண்டு வந்து தங்களுக்கு வேண்டிய அரிசியை வீட்டில் களஞ்சியத்தில் சேர்த்து விட்டு தங்கள் தேவைக்கு போக மீதியை விற்பனை செய்வார்கள். ஆனால் இந்த காலத்தில் அறுவடை செய்யும் நெல் குவியலை வயலிலேயே வைத்து விற்றுவிட்டு வெறும் கையோடு வீடு திரும்புகிறார்கள். தேவைக்கான அரிசியை பின்னர் விலை கொடுத்து வாங்குகி றார்கள். இந்த நிலை ஏற்பட்டது ஏன் ? தாங்கள் உற்பத்தி செய்யும் நெல்லுக்கு அவர்களால் விலை நிர்ணயம் செய்ய முடியாதது ஏன்? என்ற பல்வேறு கேள்விகளுக்கு இப்படம் விடை சொல்லும்
இப்படத்தில் விவசாயியாக தோழர் ரா. முத்தரசன். நடித்திருக் கிறார். அவர் பேசும் வசனங்கள் அர்த்தம் பொதிந்ததாக இருக்கும். சமுத்திரகனி பேசும் வசனங்களும் அனல் தெறிக்கும். இப்படத்தின் படப்பிடிப்பு கும்பகோணம் பகுதியில் குடவாசல் அருகே உள்ள. சிறு சிறு கிராமங்களில் 35 நாட்கள் நடந்து முடிந்திருக்கிறது. அப்பகுதி விவசாயிகளும் இப்படத்தில் நடித்திருக்கின்றனர்.
அரிசி என்ற டைட்டிலுடன் டேக் லைனாக அம்மாவின் மறுபெயர் என வைத்திருக்கிறேன்.
இவ்வாறு இயக்குனர் எஸ் ஆர் விஜயகுமார் கூறினார்.
