அமரர் எம்ஜிஆர் குறித்து தெலுங்கு நடிகர் ராஜேந்திர பிரசாத் கூறிய கருத்துக்கு நடிகர் விஷால் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
சமீபத்தில் ஐதராபாத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் தெலுங்கு திரையுலகின் மூத்த நடிகரான ராஜேந்திர பிரசாத்,
பழைய நடிகர் காந்தாராவை புகழ்ந்து பேசும் விதமாக பேசியபோது ஒப்பீட்டளவில் எம்ஜிஆர் குறித்து பேசிய வார்த்தைகள் கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளன.
இந்த நிலையில் தென்னிந்திய நடிகர் சங்க பொது செயலாளர் விஷால், நடிகர் ராஜேந்திர பிரசாத்தின் பேச்சுக்கு தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “சமீபத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் நமது தெலுங்கு திரையுலகை சேர்ந்த நடிகர் ராஜேந்திர பிரசாத் அவர்கள் பேசிய கருத்துக்கள் அதிர்ச்சி தருவதாகவும் அருவருக்கத்தக்கதாகவும் இருக்கின்றன. உங்கள் மீது அதிக மதிப்பு வைத்திருக்கும் அதே சமயம், ஒரு ஜாம்பவான் நடிகராக மட்டுமல்லாமல் நாட்டின் தலைசிறந்த தலைவரான மறைந்த புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களை குறித்து தாங்கள் பேசிய பேச்சுக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாகவே இந்த பதிவை வெளியிடுகிறேன்.

நீங்கள் தெலுங்கு திரையுலகில் புகழ்பெற்ற நடிகரான திரு காந்தாராவ் அவர்களை பற்றி புகழ்ந்து பேசுவது பெருந்தன்மையுடன் ஏற்கத்தக்கது என்றாலும், அதேசமயம் மக்கள் மனதில் என்றென்றும் நீங்காமல் இடம் பிடித்துள்ள மறைந்த ஜாம்பவான் நடிகர் எம்ஜிஆர் ஐயா பற்றி மதிப்பு குறைவாக பேசிய வார்த்தைகள் எங்கள் மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.
இந்த சமயத்தில் எது முக்கியமானது, அவசியமானது என்பதை நீங்கள் தெரிந்து கொண்டு இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். இந்த பிரச்சனை சார்பாக நீங்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் என உங்களிடம் கேட்பதற்கு கூட நான் என் மன்னிப்பை தெரிவித்துக் கொள்கிறேன், ஆனால் ஒரு நடிகனாக இருப்பதால் எதிர்காலத்தில் உங்களைப் போன்ற ஒரு அந்தஸ்தில் உள்ள நடிகரை இதே போன்று
யாரேனும் பேசினாலும், இதை போல தான் நான் கண்டனம் தெரிவிக்கும் வகையில் இருக்கும்.. என நல்லெண்ணத்துடன் நம்புகிறேன்.
இவ்வாறு விஷால் கூறியுள்ளார்.
தென்னிந்திய நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை
நண்பரும் சக நடிகருமான டாக்டர் ராஜேந்திர பிரசாத் அவர்களுக்கு, தற்போது தாங்கள் மேடை ஒன்றில் மாபெரும் நடிகர் காந்தாராவ் அவர்களைப் பற்றி பேசிய, பாராட்டிய காணொளி கண்டேன். ஒரு நடிகர் இன்னொரு நடிகரை பாராட்டுவது மகிழ்ச்சிக்குரியது. திறனை பரஸ்பரம் சிலாகிப்பது உன்னதமானது. ஆனால் தாங்கள் மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களை கீழ்த்தரமான முறையில் ஒப்பிட்டு பேசியது எனக்கு அதிர்ச்சியூட்டும் மனச்சங்கடத்தை ஏற்படுத்தியது.
இது எனக்கு மட்டுமல்ல. இதை காணும் ஒவ்வொரு தமிழனுக்கும் ஏற்படுத்தும். தமிழருக்கு மட்டுமல்ல… உங்கள் சகாக்களே புண்பட்டு பேசிய ஒலி செய்திகள் அனுப்பியுள்ளனர். இச்செயல் கண்டிக்கத்தக்கது. நமக்குள் அதாவது தமிழ் தெலுங்கு சினிமா துறையில் திறமையானவர்களை பரிவர்த்தனை செய்துகொள்வது ஒரு நீண்டகால மரபாகவே இருந்து வருகிறது. நடிகர்கள் இயக்குனர்கள் இசை விற்பன்னர்கள் என எல்லாரையும் என். டி.ஆர் , ஏ.என்.ஆர், எஸ் வி ரங்காராவ், சாவித்திரி, சாராதாம்மா, வாணிஸ்ரீ என பட்டியல் நீளும் நடிகர்களை நாங்கள் எங்கள் குடும்பத்தில் ஒருவராக போற்றுகிறோம். திரு எம் ஜி ஆர் அவர்கள், வெறும் நடிகர் மட்டும் அல்ல. தமிழகத்தை ஆண்ட தலைவரும் கூட அரசியலுக்கு அப்பாற்பட்ட ஒரு ஆளுமை. திரு என்.டி ராமாராவ் அவர்கள் கட்சி தொடங்கியதற்கு ஒரு முக்கிய காரணமாகவும் திரு.எம்.ஜி.ஆர் அவர்கள் இருந்திருக்கிறார். நான் விடயத்தை நீட்டிக்க முயலவில்லை. தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவனாக மட்டுமல்ல. ஒரு சினிமா காரனாக உங்களிடமிருந்து ஒரு மன்னிப்பை எதிர்பார்க்கிறேன். அது கட்டாயப்படுத்துதல் காரணமாக இல்லாமல் உங்கள் உள் மனதில் இருந்து அம் மன்னிப்பு வரவேண்டும் என்பதே எங்கள் எதிர்பார்ப்பு நிறைவு செய்வீர் என்றே நம்புகிறேன்.
# தென்னிந்திய நடிகர் சங்கம
