படம்: வீரமே வாகை சூடும்
நடிப்பு: விஷால், டிம்பிள் ஹயாதி, யோகிபாபு, மாரிமுத்து, துளசி, கவிதா பாரதி, ஆர் என் ஆர் மனோகர், பாபுராஜ், பில்லி முரளி, ரவீணா, கே எஸ் ஜி வெங்கடேஷ், மஹா காந்தி, மரியம் ஜார்ஜ், பிளாக் ஷிப் தீப்தி
தயாரிப்பு: விஷால் பிலிம் பேக்டரி சார்பில் விஷால்
இசை: யுவன் சங்கர் ராஜா
இயக்கம்: து.ப.சரவணன்
பி ஆர் ஓ : ஜான்சன்
போலீஸ் கான்ஸ்டபிள் மகன் விஷால். எதையும் தட்டிக் கேட்கும் துணிவுள்ளவர். போலீஸ் அதிகாரியாக வேண்டும் என்ற எண்ணத்துடன் இருக்கிறார். தன் தங்கையிடம் வம்பிழுக் கும் ரவுடியின் தம்பியை அடித்து உதைக்கிறார் விஷால். புற நகர் பகுதியில் உள்ள ஆலை ஒன்றால் அப்பகுதியில் குடிநீர் பாதிக்கப்படுவதாக மக்கள் போராட்டம் நடக்கிறது. முதலை பண்ணையில் வேலை பார்க்கும் தந்தை ஒருவரின் மகளை ஆலை அதிபரின் தம்பி மானபங்கம் செய்ய துரத்தி ஆள்மாறட்டமாக விஷாலின் தங்கையை கடத்தி வந்து விடுகிறான். இந்நிலையில் ஆலையை எதிர்த்து போராடும் மக்களின் பிரதி நிதியை ஆலை அதிபர் கடத்தி வந்து கொலை செய்கிறார். இந்த சம்பவத்தை விஷாலின் தங்கை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். கொலையை கண்ணால் பார்த்த சாட்சி என்பதால் விஷாலின் தங்கையை கொலை செய்கின்றனர். ஆனால் தங்கை காணாமல் போனதாக எண்ணி ஊர் முழுக்க தேடுகிறார் விஷால். ஒரு கட்டத்தில் அவளை கடத்தி சென்று கொலை செய்துவிட்டார்கள் என்பதை அறிந்து அதிர்ச்சி அடைகிறார். தங்கையை கொன்றவர்களை பழிவாங்க வேட்டையை தொடங்குகிறார் விஷால். ஆனால் கொலையாளியை கண்டு பிடிக்க முடியாமல் திணறுகிறார். தங்கை காணாமல் போன இடத்திலிருந்து மீண்டும் தேடுதல் வேட்டை தொடங்கி கொலையாளியை எப்படி சாதுர்யமாக கண்டுபிடித்து பழி வாங்குகிறார் என்பதே கிளைமாக்ஸ் .
போரஸ் என்ற கதாபாத்திரத்தில் வழக்கத்தைவிட வேகமான ஆக்ஷன் காட்சிகளில் நடித்திருக்கிறார் விஷால் . தன் தங்கையிடம் வம்பு செய்யும் ரவுடி தம்பியின் கையை உடைத்து விட்டு பிறகு ரவுடியை நேரில் சந்தித்து, ”உன் தம்பியின் கையை நான்தான் உடைத்தேன்” என்று சொல்லி நியாயத்தை எடுத்துச் சொல்லும் விஷால் துணிச்சலை வெளிப்படுத்துகிறார்.
தங்கை கொலை செய்துவிட்டார்கள் என்று தெரிந்ததும் கோபம் அடையும் விஷால், “ இதுக்குத்தான் என்னை அமைதியாக இரு என்று சொல்லாதீர்கள் என்றேன், அப்போதே தட்டிக்கேட்டிருந்தால் இப்படி நடந்திருக்காது” என தந்தை மாரிமுத்துவிடம் சொல்லும்போது கோபத்தில் வெடிக்கிறார்.

தங்கையை கொன்றது யார் என்பதை கண்டறியும் முயற்சியில் இறங்கும் விஷால், கூலிப்படையினர் ஒவ்வொரு வரையாக கண்டுபிடித்து அவர்களை நெய்யப் புடைத்து இறுதியில் பிரதான கொலையாளியை கண்டு பிடிக்கும் காட்சிகள் படத்தை விறுவிறுப்பாக நகர்த்துகிறது.
”இங்கிருக்கும் 16 பேர்களில் ஒருத்தன்தான் மாரி அவனை நீயே கண்டுபிடி” என்று சவால்விடும் கூலிப்படையினரை நோண்டி நுங்கெடுத்து துவம்சம் செய்யும் விஷால், கிளைமாஸில் கொலைகார வில்லனிடம் பயங்கரமாக மோதுவது இருக்கையின் நுனிக்கு வரவழைக்கும் ஹைலைட் ஆக்ஷன் காட்சி.
அனல் அரசு, ரவி வர்மா, தினேஷ் மூன்று மாஸ்டர்களும் சிறப்பு கவனம் எடுத்து ஆக்ஷன் காட்சிகள் அமைத்திருக்கின் றனர்.
கதாநாயாகியாக டிம்பிள் ஹயாதி நடித்துள்ளார். காதல் டூயட் மட்டும் பாடிவிட்டு செல்லாமல் விஷால் சோர்வடையும் போது அவருக்கு ஊக்கம் கொடுக்கும் வசனம் பேசி காட்சிகளில் திருப்பங்களை ஏற்பட உதவி இருக்கிறார்.
விஷாலின் தந்தையாக மாரிமுத்து உருக்கம் காட்டுகிறார். யோகிபாபு விஷாலுடனே படம் நெடுகிலும் உலா வருகிறார். கேப் கிடைக்கும்போது நக்கலான பஞ்ச் பேசி சிரிக்க வைக்கி றார்.
விஷால் பிலிம் பேக்டரி சார்பில் விஷாலே படத்தை தயாரித்திருக்கிறார். துணிச்சல் மிக்க ஒரு இளைஞனின் கதையை ஆக்ஷன் அதிரடியாக இயக்கி உள்ளளார் டைரக்டர் து.ப.சரவணன். மூன்று சம்பவங்களை கிளைமாக்ஸில் ஒன்றிணைத்திருப்பது பாராட்டு பெறும்.
யுவன் சங்கர் ராஜா இசையில் பாடல்கள் இனிமை. பின்னணி இசையில் ஹாலிவுட் படம் போல் அரங்கமே அதிர்கிறது.
வீரமே வாகை சூடும் – விஷாலின் கமர்ஷியல் வெற்றி பட பட்டியலில் இப்படம் இடம்பிடிக்கும்.

By
ஜெயச்சந்திரன்
