திரைப்பட இயக்குனர், கதாசிரியர் வி சி குகநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறிதாவது:
என் தமிழ் உறவுகளே…
நமது புதிய முதல்வர் ஒரு பகுத்தறிவுவாதி என்பதனால், பதவிக்கு வந்த உடனே
பெருந்தொற்றை விரட்டியடிக்க, மக்களைக் காப்பாற்ற விஞ்ஞான ரீதியாக எதை எதை உடனடியாகச் செய்ய வேண்டுமோ,
அவற்றைத் துரிதமாக செய்துகொண்டு இருக்கிறார்.
பிராண வாயு தயாரிப்புக்கான தொழிற்சாலைகள்…
பிற மாநிலங்களில் இருந்து கிடைப்பதை விரைந்து கொண்டுவர ஏற்பாடுகள்…
மருந்துகளை நமது மாநிலத்திலேயே தயாரிக்க நடவடிக்கைகள்…
வெளிநாட்டில் இருந்து நேரடியாக மருந்துகளை
மாநில அரசே இறக்குமதி…
அதற்கான நிதிகளை உருவாக்குதல்…
தனித்தனியாக எல்லாவற்றையும் கண்காணிக்க தனித்தனி குழுக்கள்…
பரவலாக, தமிழ்நாடு முழுவதும் பாரபட்சமற்ற முறையில் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் பணியாற்ற ஏற்பாடுகள்…
நோக்கம், பேச்சு, செயல்பாடு எல்லாமே வெளிப்படைத் தன்மையுடன் விரைவாக நடைபெறுவது,
துன்ப மேகங்கள் நம்மைச் சூழ்ந்திருக்கும் துயரமான இந்த நேரத்தில் நமக்கு சற்று ஆறுதலைத் தருகிறது.
அப்பா ஆட்சி, அம்மா ஆட்சி என்று தனக்கான தற்காப்பு கேடயங்களை முன்னிறுத்தாமல்,
பகுத்தறிந்து, பலரின் கருத்துக்களைக் கேட்டறிந்து அவர் செயலாற்றுவதை வரலாற்று சிறப்பாக வருங்காலம் போற்றும்.
அவரைப் புகழ்வதல்ல என்னுடைய நோக்கம்.
எனக்கு அது தேவை இல்லாதது.
உலகெல்லாம் பரந்து கிடக்கும் என் ரத்த உறவுகளே…
உலகமே தடுமாறிக்கொண்டு இருக்கும் இந்த வேளையில், தாயகத் தமிழ்நாட்டையும், தமிழ் மக்களையும் பெருந்தொற்றில் இருந்து காப்பாற்ற முதல்வர் போராடிக்கொண்டு இருக்கிறார்.
அவருக்கு உதவிக்கரம் நீட்டி, அவர் கரங்களை பலப்படுத்தி, தாயக மக்களைக் காப்பாற்றுவது நம் தலையாயக் கடமை.
அவர், ‘கைகளை தட்டுங்கள்… விளக்கேற்றுங்கள்… வீதியில் வந்து நில்லுங்கள்… பெருந்தொற்று ஓடிவிடும்’ என்றெல்லாம் நமக்கு விளையாட்டு காட்டவில்லை…
விஞ்ஞான ரீதியாக செயல்படுகிறார்.
இதையும் ஒரு போராகவே நான் கருதுகிறேன்.
இதில் நாம் வெற்றி அடைய நிதி தேவை. மருந்துகள் தேவை. மருத்துவர்கள் தேவை. இன்னும் என்னென்னவோ தேவை இருக்கிறது.
முடிந்ததை எல்லாம் நாம் செய்துகொடுத்து, நமது முதல்வரின் கைகளை வலுப்படுத்த வேண்டும்.
இது ஒரு நல்ல வாய்ப்பு.
தமிழர்களே…
அதனை பயன்படுத்திக் கொண்டு, ஒரு புதிய வரலாறு படையுங்கள்…
இந்தப் போரில் நீங்கள் ஜெயிக்க வேண்டும்.
இவ்வாறு வி சி .குகநாதன் கூறியுள்ளார்p