தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் பங்கேற்கும் அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்காதது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார். அதில், “யாதுமுணர்ந்தே தவிர்த்தோம், பகையின் சூதுமறிந்தே தகர்த்தோம் என்று குறிப்பிட்டுள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைத் தலைவர்களில் ஒருவரான ஆதாவ் அர்ஜுன் தொகுத்து வெளியிட்ட “எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்” என்ற புத்தக வெளியீட்டு விழா சென்னையில் டிசம்பர் 6ம் தேதி நடைபெற்றது. இந்த விழாவில் நடிகரும், தவெக கட்சித் தலைவருமான விஜய் கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிட்டார். முன்னதாக இந்த விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி திருமாவளவன் கலந்து கொண்டு அம்பேத்கர் புத்தகத்தை பெற்றுக் கொள்வார் என தகவல் வெளியானது. ஆனால் இது குறித்து அரசியல் வட்டாரத்தில் பரபரப்பும் சர்ச்சையும் ஏற்பட்டது.
திமுக கூட்டணியில் இருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் பங்கேற்கும் விழாவில் கலந்து கொண்டால் அது திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்தும் என்று பல்வேறு அரசியல் கட்சியினர் கருத்து தெரிவித்தனர். இதனால் இந்த விழாவில் திருமாவளவன் பங்கேற்பாரா? மாட்டாரா? என்பது குறித்து ஒரு மாத காலம் டிவிகளில் விவாதங்கள் நடைபெற்றன.
இந்நிலையில்தான் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், தமிழக வெற்றி கடக தலைவர் விஜய் பங்கேற்கும் அம்பேத்கர் புத்தகம் வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ளப் போவதில்லை என்று விளக்கமான அறிக்கை ஒன்றை வெளியிட்டார். பரபரப்பான அந்த அறிக்கையில் திருமாவளவன் கூறியதாவது:
அம்பேத்கர் குறித்து நூல் அம்பேத்கரின் நினைவு நாளில் சென்னையில் வெளியிடப்பட்டது. நடிகர் விஜய் இந்நிகழ்வில் பங்கேற்கவிருக்கிறார் என்பது ஏற்பாட்டாளர்கள் உள்ளிட்ட எங்களை தவிர வேறு யாருக்கும் தெரியாது. ஆனால், திடுமென ஒரு தமிழ் நாளேடு இதனை பெரிய செய்தியாக-தலைப்புச் செய்தியாக வெளியிட்டது. திமுகவுக்கும் விசிகவுக்கும் இடையிலுள்ள நட்புறவில் அய்யத்தைக் கிளப்பி, கருத்து முரண்களை எழுப்பி, திமுக கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்துவதும், அதன் மூலம் கூட்டணியில் விரிசலை உருவாக்குவதும் தான் அதன் உள்நோக்கமாக இருக்கமுடியும். என் மீதான அரசியல் நன்மதிப்பையும் நம்பகத் தன்மையையும் கேள்விக்குள்ளாக்குவதும் தான் அந்த நாளேட்டின் நோக்கம்.
இந்த நூல் வெளியீட்டு விழாவுக்கு அரசியல் உள்நோக்கம் கற்பித்து அதனைப் பூதாகரப்படுத்திய அந்த நாளேட்டின் சதி அரசியல் பற்றி ஏன் ஒருவரும் வாய் திறக்கவில்லை? விசிக ஏற்கனவே ஒரு கூட்டணியைத் தோழமை கட்சிகளோடு இணைந்து உருவாக்கியிருக்கிறது. திமுக தலைமையிலான அந்தக் கூட்டணியைக் கட்டுக்கோப்பாக வைத்திருப்பதையும் அதன் மூலம் தமிழ்நாட்டில் சனாதன சக்திகளைக் காலூன்றவிடாமல் தடுப்பதையும் தனது முதன்மையான கடமைகளாகவும் கொண்டு செயலாற்றி வருகிறது. திமுக கூட்டணியை உடைக்க வேண்டுமென்கிற செயல் திட்டத்தோடு நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமும் ஏதேதோ பிதற்றிக் கொண்டிருப்பவர்கள். இவர்களில் யாரும், ஏன் ஏற்கனவே இசைவளித்த திருமாவளவனை விட்டு விட்டு நிகழ்ச்சியை நடத்திட முடிவெடுத்தது?- என்கிற கேள்வியை எழுப்பவில்லை.
விஜயை கொண்டே அவர்கள் விழா நடத்தட்டும் என்று மிகமிக தொடக்க நிலையிலேயே அவர்களிடம் எனது நிலைப்பாட்டைக் கூறிவிட்டேன். ‘விஜய்யைத் தவிர்த்திட முயற்சி செய்யுங்கள்’ என்று நான் கூறியிருந்தாலும், அதனை அவர்களால் ஏற்றுக்கொள்ள இயலுமா என்றால், அதற்கு வாய்ப்பில்லை என்பது தான் மிகவும் இயல்பான உண்மை நிலையாகும். ஆதவ் அர்ஜூன் கட்டுப்பாட்டில் திருமா இருப்பது உண்மையெனில், அவர் அழைத்தும்கூட ஏன் திருமா இந்த நிகழ்வில் பங்கேற்கவில்லை என்கிற கேள்வி எழுவதும் இயல்புதானே?. ‘திருமாவை யாரும் அப்படி கட்டுக்குள் வைத்திருக்க முடியாது. எனவே, யாதுமுணர்ந்தே தவிர்த்தோம்! பகையின் சூதுமறிந்தே தகர்த்தோம்.
இவ்வாறு அறிக்கையில் திருமாவளவன் கூறியிருக்கிறார்.