படம்: சீதா பயணம்
நடிப்பு: அர்ஜுன் (கௌரவ வேடம்),
நிரஞ்சன், ஐஸ்வர்யா அர்ஜுன், துருவ் சார்ஜா (கவுரவ வேடம்), சத்யராஜ், பிரகாஷ் ராஜ்
தயாரிப்பு: ஸ்ரீ ராம் பிலிம்ஸ் இன்டர்நேஷனல்
இசை: அனுப் ரூபன்ஸ்
ஒளிப்பதிவு: ஜி பாலமுருகன்
இயக்கம்: அர்ஜுன்
ஏ ஆர் ஒ: சதீஷ் (AIM)
நடிகர் அர்ஜுன் நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்கியிருக்கும் படம் சீதா பயணம்.
கதை: சீதா (ஐஸ்வர்யா அர்ஜுன்) சிறு வயதிலேயே தனது தாயை இழக்கிறாள். தந்தை பாசத்தில் வளரும் சீதாவுக்கு கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணமே இல்லாமல் இருக்கிறார். ஒரு சமயம் சமையல் கலை மாநாட்டுக்கு செல்வதற்காக காரில் தனியாக புறப்பட்டு செல்கிறாள். வழியில் அவர் பலரை சந்திக்கிறார். சமையல்கலை மாநாடு நடக்கும் இடத்திற்கு செல்லும் போது திடீர் தீவிபத்து ஏற்படுகிறது. அதில் சீதா உயிர் பிழைக்கிறாள். தான் உயிரோடு இருப்பதற்கு தான் வரும் வழியில் தன்னை இடைமறித்து நிறுத்தி பேசியவர்கள் தான் காரணம் அவர்களை சந்தித்து நன்றி சொல்ல போவதாக
புறப்படுகிறாள். இதில் நடக்கும் எதிர்பாராத திருப்பங்கள் என்ன என்பதுதான் இந்த கதையின் பயணம் .
சீதா என்ற முக்கிய கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா அர்ஜுன் நடித்திருக்கிறார். வந்தோமா போனோமா என்ற சோம்பேறித்தனம் எதுவும் இல்லாமல் சீதா என்ற பாத்திரத்தில் பக்குவப்பட்ட நடிப்பை வெளிப்படுத்தியி ருக்கிறார்.
தனது தந்தை சத்யராஜை அம்மா என்று ஐஸ்வர்யா அர்ஜுன் அழைப்பதும், அதேசமயம் மகளை டாடி என்று சத்யராஜ் அழைப்பதும் தொடக்க காட்சிகளில் கொஞ்சம் குழப்பம் நீடித்தாலும் போகப் போக அவர்கள் எதற்காக அப்படி தங்களை அழைத்துக் கொள்கிறார்கள் என்பதை உணர முடிகிறது.
சமையல்கலை மாநாட்டுக்கு செல்வதாக ஐஸ்வர்யா அர்ஜுன் காரில் புறப்பட்டதும் கதையும் அவரோடு றெக்கை கட்டி புறப்படுகிறது.
மதுரை போகும் வழியில் தன்னை இறக்கி விடும்படி ஐஸ்வர்யாவின் காரை வழிமறித்து லிப்ட் கேட்கும் நிரஞ்சன் முகத்தில் சுறுசுறுப்பும் விறுவிறுப்பும் தெரிகிறது
லிப்ட் கிடைத்தவுடன் காரில் அமர்ந்து கொண்டு அவர் நண்பரிடம் பேசுவது அம்மாவிடம் பேசுவது தாத்தாவிடம் கொஞ்சுவது என்று பல்வேறு சேட்டைகள் செய்யும்போது ஐஸ்வர்யாவை தன் காதல் வலைக்குள் விழ செய்யும் முயற்சிகள் சுவாரஸ்யம் நிறைந்தது.
“யார் என்றே தெரியாத உனக்கு நான் எப்படி காரில் லிப்ட் தருவது ” என்று கேட்டு சந்தேகம் எழுப்பும் ஐஸ்வர்யா, நிரஞ்சனின் பாஸ்போர்ட் முதல் ஐடி கார்டு வரை வாங்கி வைத்துக் கொண்டு லிப்ட் தருவது புது யுக்தி. பார்ப்பதற்கு காமெடியாக இருந்தாலும் நம்மில் யாராவது லிப்ட் தர விரும்பினால் இதுபோன்ற ஒரு முன்னெச்சரிக்கை செய்து கொள்வது நல்லது என்ற யோசனையையும் உரைக்கிறது.
தன்னை வழிமறித்து நிறுத்தி மாநாட்டிற்கு செல்ல தாமதம் செய்ய வைத்தவர்களுக்கு ஐஸ்வர்யா நன்றி சொல்ல புறப்படும் போது, புது ரூட்டில் கதையை கொண்டு செல்ல போகிறது என்று எண்ண வைக்கிறது. அதேபோல் கதையும் புதிய ரூட்டில் பயணிக்கிறது. அதை வீணாக்காமல் குடும்ப சென்டிமென்ட், மனிதாபிமானம், காதல் , ஆக்சன் என்ற அம்சங்களையும் கலந்து அர்ஜுன் இயக்கியிருப்பது அவர் ஒரு கமர்சியல் இயக்குனர் மட்டுமல்ல ரசிகர்களின் நாடித்துடிப்பை அறிந்தவர் என்பதையும் உணர்த்துகிறது.
ஐஸ்வர்யா தந்தையாக வரும் சத்யராஜ் தனி மரமாக நிற்கும் ஒரு தந்தையின் மனக்குமுறலை அழகாக வெளிப்படுத்துகிறார். அதேபோல் நிரஞ்சன் தாத்தாவாக வரும் பிரகாஷ்ராஜ் தனது மூன்று தலைமுறை குடும்பத்தை தாங்கி நிற்கிறார்.
ஹீரோ நிரஞ்சன் எப்படி எல்லாம் ரசிகர்களை தன் பக்கம் இழுக்க முடியுமோ அப்படி எல்லாம் இழுத்திருக்கிறார்.
அம்மா சென்டிமென்ட் , தாத்தா செண்டிமெண்ட், முயல் செண்டிமெண்ட் என்று ஏகத்துக்கு அவருக்கு நடிக்க வாய்ப்பு தந்திருக்கிறார் அர்ஜுன். அதை நன்றாகவே நிரஞ்சனும் பயன்படுத்தி இருக்கிறார்.
நிரஞ்சன், ஐஸ்வர்யா காதல் பயணத்தில் வரும் அந்த கிளைமாக்ஸ் ட்விஸ்ட் திருப்பமாக அமைகிறது. அந்த சஸ்பென்சை இங்கு உடைப்பது சரியாக இருக்காது.
கோவை சரளா குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். சுமித்ரா உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள்.
இயக்குனர் அர்ஜுன் ஆக்சன் காட்சிகளில் அதிரடி கிளப்பியிருக்கிறார். அவரை போலவே துருவ் சார்ஜா கட்டுமஸ்தான தோற்றத்தில் திடீரென்று எண்ட்ரி கொடுத்து ஆக்சன் அதிரடி கிளப்பியிருக்கிறார்.
அனுப் ரூபன்ஸ் இசை தாளம் போடக்கூடிய கூடிய இனிமை. ஜி பாலமுருகன் ஒளிப்பதிவு கலர்ஃபுல்லுடன் அருமை.
சீதா பயணம் -தனியாக அல்ல குடும்பத்துடன் ரசிக்கலாம்.

Review By
K Jatachabdhiran
trending cinemas now.com
