Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

சைரன் (பட விமர்சனம்)

படம்: சைரன்

நடிப்பு; ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேஸ்வரன், சமுத்திரக்கனி,  அழகம் பெருமாள்  யோகி பாபு,

தயாரிப்பு: சுஜாதா விஜயகுமார்

இசை: ஜி வி பிரகாஷ்குமார்

ஒளிப்பதிவு: செல்வகுமார் எஸ் கே.

இயக்கம்:  ஆண்டனி பாக்யராஜ்

ரிலீஸ்: ரெட் ஜெயன்ட் மூவிஸ்

பி ஆர் ஓ : சதீஷ் ( AIM)

 

மனைவியை கொன்றதாக தண்டனை பெற்று 14 வருடமாக சிறையில் அடைபட்டு கிடக்கிறார் திலகவர்மன் (ஜெயம் ரவி). தந்தை கொலைகாரன் என்பதை அறிந்து  திலகனிடம்   பேசாமல் ஒதுங்கி இருக்கிறாள் மகள்.  சிறையில் இருக்கும் பல குற்றவாளிகள் பரோலில் வெளியே சென்றாலும் திலகன் மட்டும் செல்ல மனம் இல்லாமல் இருக்கிறார். ஒரு கட்டத்தில் தந்தைக்கு உடல்நிலை சரியில்லை என்று தெரிந்து அவரை சிறை அதிகாரியே பரோலில்  செல்ல அனுமதிக் கிறார் அப்போதும் திலகன் மறுக்க வே “தந்தையை பார்க்கச் செல்லும் சாக்கில் உன் மகளையும் நீ பார்க்கலாம்” என்று சொல்ல அதை ஏற்று திலகவர்மன் பரோலில் வெளியே வருகிறார். இந்நிலையில் அரசியல்வாதி ஒருவரும் அவரது நண்பரும் கொலை செய்யப்படுகின்றனர் அந்த கொலைக்கு காரணம் திலக வர்மன்தான் என்று பெண் போலீஸ் அதிகாரி நந்தினி   (கீர்த்தி சுரேஷ்)   குற்றம் சாட்டு வதுடன் திலகவர்மனை கைது செய்து மீன்டும் சிறையில் அடைக்க பகீரக முயற்சி செய்கி றார். கொலைகளுக்கான பின்னணி என்ன என்று நந்தினி  துப்பறியும்போது அதற்கான பின்னணி பல  வருடங்களுக்கு முன்பாக நீண்டு செல்கிறது. தன் மனைவியை கொன்றதற்காக திலகவர்மன் உயர்  போலீஸ் அதிகாரி,  அரசியல்வாதி உள்ளிட்டவர்களை கொல்கிறாரா அல்லது வேறு ஏதும் காரணமா? . கொலையாளி மற்றொரு மர்ம நபரா என்ற பல்வேறு கேள்வி களுக்கு சைரன் படம் பதில் அளிக்கிறது.

ஜெயம் ரவி இதுவரை  பார்த்திராத வகையில் முதிர்ச்சியான ஒரு தோற்றம், இளமையான இன்னொரு தோற்றம் என இரு மாறுபட்ட தோற்றங்களில் நடித்திருக்கிறார்.

சிறை கம்பிகளுக்கு பின்னால் ஜெயம் ரவி  நாயகன் கமல் போல் லேசாக நரைத்த தலைமுடி தாடி என்று மாறுபட்ட தோற்றத்தில் நிற்கும்போது இவருக்கு பின்னால் ஏதோ ஒரு பெரிய கதை மறைந்தி ருக்கிறது அதற்கு அவர் பழிக்கு பழி வாங்க காத்திருக்கிறார் என்ற ஒரு க்ளு மட்டும் கிடைக்கிறது. ஆனால் என்ன செய்யப் போகிறார்,  ஏது செய்யப் போகிறார் என்பதெல்லாம் சீனுக்கு சீன் மர்மமாகவே நகர்கிறது . அதில் அண்டர் கரண்ட்டாக ஒரு ஆக்ஷன் இழையோடுவது காட்சிகளை வேகமாக நகர்த்துகிறது.

சிறையிலிருந்து பரோலில் வீடு திரும்பும் ஜெயம் ரவி 14 வருடத் திற்கு பிறகு தன் வீட்டை பார்க்கும் போது அவருக்கு பசுமையான பழைய நினைவுகள் மின்னல் போல் வந்து மறைவது பிற்பகுதியில் வரும் ஒரு ஆழமான கதைக்கு அச்சாரம் போடுகிறது.

தான் வீட்டுக்கு வரப் போவதை அறிந்து தன் மகள் வீட்டை விட்டு வெளியேறி உறவினர் வீட்டில் தங்குவதை எண்ணி மனம் வருந்தும் ஜெயம் ரவி மகளை பார்த்துவிட மாட்டோமா என்று மறைந்து மறைந்து நின்று மகள் வருவதை பார்த்து பூரிப்படையும் போது ஒரு அன்புத் தந்தையின்  ஆவல் வெளிப்படுகிரது.. ஒரு  முறையாவது மகளை பார்த்து விட மாட்டோமா என்ற ஏக்கம் ஜெயம் ரவி முகத்தில் வெளிப்படுவது  நெஞ்சில் ஒரு ஏக்கத்தையும் தாக்கத்தையும்  படர செய்கிறது.

மழைக்காக டீக்கடையில் ஒதுங்கி நிற்கும் தன் மகளை சில இளைஞர்கள் நக்கலடித்ததை   பார்க்கும் ஜெயம் ரவி ஆத்திரம் கொண்டு அந்த இளைஞர்களை பின்னி பெடல் எடுப்பது இது போன்ற ரோடு ரோமியோக் களுக்கு நடக்க வேண்டிய பூஜைதான் என்று அரங்கில் முணுமுணுப்பு கேட்கிறது.

ஆம்புலன்ஸ் டிரைவராக ஜெயம் ரவி இப்படத்தில் நடித்திருப்பது இடைவேளைக்கு சற்று முன்பு தான் ஓபன் ஆகிறது. அடிபட்டு உயிருக்கு போராடுபவர்களை ஆண்டவன் போல் ஆம்புலன்சில் ஏற்றி வந்து அவர்களுக்கு மருத்துவமனையில் அவசர சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்வதெல்லாம் மான ஈடுபாடோடு   செய்த காட்சிகள் போல் நெஞ்சை தொடுகிறது. அதில் தான் அவரது காதலும் மலரப் போகிறது என்ற ஆச்சரியம் வெளிப்பட்டதும்  காதல் பரவசம் ஆக்ரமிக்கிறது.

வாய் பேச முடியாத செவித்திறன் இல்லாத மாற்று திறனாளியான அனுபாமாவை காதலித்து அவரை மணந்து ஒரு பெண் குழந்தைக்கு தந்தை ஆகும் காட்சி எல்லாம் மின்னல் போல் வேகமாக வந்து மறைந்தாலும் நெஞ்சில் பசுமை யான காட்சிகளாக பதிகிறது.

ஜெயம் ரவி பரோலில் சிறையில் இருந்து வந்த பிறகு நடக்கும் கொலைகள் எப்படி நடக்கின்றன என்ற சஸ்பென்ஸ் கிளைமாக்ஸ் வரை நீடிப்பதும் கிளைமாக்சில் போலீஸ் உயர் அதிகாரி சமுத்திரக்கனி கொல்லப்படப் போகிறார் என்ற இன்ட் கிடைத்த தும் திரையில் தீ பிடிக்கிறது.

வீட்டை சுற்றி போலீஸ் பட்டாளத்தை கீர்த்தி சுரேஷ் நிற்க வைத்து ஜெயம் ரவியை கண்காணிக்க சொல்வதும் ஜெயம் ரவியை அந்த வீட்டிலேயே என்கவுண்டர் செய்ய சொல்லி சமுத்திரக்கனி தன் எடுபிடி போலீசுக்கு உத்தரவு கொடுப்பதும் அடுத்து என்ன நடக்குமோ என்ற டென்ஷன்  அரங்கு முழுவதும் தொற்றிக் கொள்கிறது.

“சாதியை எதிர்த்து பேசுபவர்களை பார்த்து நீ எந்த சாதி” என்று கேட்கிறார்கள் என ஜெயம் ரவி பேசும் வசனம் பலரது வாயில் படார் என்று அடிக்கும்

பொன்னியின் செல்வன் படத்தில் பொன்னியின் செல்வனாக மன்னர் கதாபாத்திரத்தில் நடித்த ஜெயம் ரவி அதற்கு முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரமான ஆம்புலன்ஸ் டிரைவராக நடித்திருப்பது அவர் ஒரே கதாபாத்திரத்தில் தன்னை பிக்ஸ் செய்து கொள்ளாமல் அடுத்தடுத்த கதாபாத்திரங்களுக்குள் தன்னை உள்ளடக்கிக் கொண்டு அதன் எல்லை மீறாமல் நடிக்க தெரிந்த வித்தைக்காரர்  என்ற பாராட்டை ரவிக்கு தெரிவிக்கலாம்.

கீர்த்தி சுரேஷ் போலீஸ் இன்ஸ்பெக்டராக தாக்குப் பிடிப்பாரா என்ற சந்தேகம் தொடக்கத்தில் ஏற்படுகிறது. ஆனால் போகப் போக அவர் காட்டும் விறைப்பும் முறைப்பும் உருட்டலும் மிரட்டலும்  அந்த கேரக்டருக்கு அவர் பொருத்தமான தேர்வு தான் என்பதை ஒப்புக் கொள்ள வைக்கிறார்.

ஜெயம் ரவிதான் கொலைகாரன் என்று சுற்றி வளைத்து அவர் மீது புகார்களை அடுக்கும் கீர்த்தி சுரேஷ் ஒரு கட்டத்தில் ஜெயம் ரவியின் சட்டையைப் பிடித்து நடுரோட்டில் இழுத்து வந்து போலீஸ் வேனில் ஏற்றும் காட்சி எதிர்பாராத ஷாக். கீர்த்தி சுரேஷ் தன் சட்டையை பிடித்து இழுத்துச் செல்வதா என்று ஜெயம் ரவி தனது இமேஜ் பற்றி கவலைப் படாமல் நடித்திருப்பதும்  தன்னைவிட சீனியர் நடிகரான ஜெயம் ரவியை அனாயசமாக சட்டையை பிடித்து கீர்த்தி சுரேஷ் இழுத்துச் செல்ல துணிந்து நடித்திருப்பதும் இயக்குனருக்கு கிடைத்த வெற்றி.

வேளாங்கண்ணி என்ற ஷேடோ போலீஸ் கதாபாத்திரத்தில் ஜெயம் ரவியை கண்காணிக்க வரும் யோகி பாபு ஒரு போலீசாக இல்லாமல் ஜெயம் ரவியின் நண்பராக மாறி அவருக்கு வேண்டிய உதவிகளை செய்வது முக்கிய காட்சிகளின் திறவுகோல்.

ஜெயம் ரவி வீட்டில்  கறிசோறு சாப்பிட்டு. யோகிபாபு  ஏப்பம் விடுவதும், போலீஸ் நிலையத்தில் தன் உயரதிகாரிகளை கூட விட்டு வைக்காமல் பஞ்ச் டயலாக் பேசி கமெண்ட் அடிப்பதும் கலகலக்க வைக்கிறது.

ஹோம் மூவி மேக்கர் சார்பில் சுஜாதா விஜயகுமார் இப்படத்தை அதிக பொருட்செலவில். தயாரித் திருக்கிறார்.
இயக்குனர் ஆண்டனி பாக்யராஜ்  முதல் படம் போல் இல்லாமல் பல படங்களை இயக்கிய அனுபவஸ்த்தர் போல் இயக்கி காட்சிக்கு காட்சி விறுவிறுப்பை கூட்டி இருக்கிறார்.
மர்டர்  பின்னணியில்   ஜாதி ஆணவக் கொலையை பற்றி பேசி இருப்பதும் வித்தியாசமான அணுகுமுறை.

செல்வகுமார் எஸ் கே காட்சிகளை சினிமா தளம் இல்லாமல் உணர்வு பூர்வமான காட்சிகளாக படமாக்கி இருப்பதும் அதற்கேற்ற லைட்டிங் கலர் டோன் அமைத்திருப்பது படத்துக்கு கூடுதல் பிளஸ்.
தொடக்கம் முதல் இறுதி வரை நான் இருக்கிறேன் படத்தை தூக்கி நிறுத்த என்று சொல்லாமல் சொல்லி இருக்கிறார் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார்

சைரன் –  ஆணவ கொலை பின்னணியில் ஒரு காதல் மனைவிக்கான பழிவாங்கல்.

Related posts

Suriya thanks note on winning #NationalFilmAward

Jai Chandran

முதல்வர் கொரோனா தடுப்பு நிதிக்கு வடிவேலு ரூ. 5 லட்சம் தந்தார்

Jai Chandran

Vikram’s 60th Blockbuster Mahaan release: Fans Motorcycle- Journey to spread joy..

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend